Friday, August 29, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – பிடி கரனை


‘வெற்றி வெற்றி வெற்றி என்று ‘ஆயிரத்தில் ஒருவன் முதல் காட்சியில் எம்.ஜி.ஆர் சொல்வாரே அப்படி தான் இருந்தது இந்த அறுவடையின் வெற்றியும். ஒரு ஐடியாவும் இல்லாமல் கிச்சனில் முளைத்து கிடந்த இரண்டு கிழங்குகளை வைத்து ஒரு கிலோவுக்கும் மேலே அறுவடை எடுத்தால் அப்படித் தானே இருக்கும் J. அதுவும் பூமிக்கு அடியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சரியான பருவத்தில் அறுவடை எடுப்பது வெற்றி தானே.

பிடி கரனை முதல் பாகம் இங்கே. விதைத்த மூன்று கிழங்கில் ஒன்றை மட்டும் ஒரு Grow Bag-ல் வைத்து விட்டு, இரண்டு நாற்றுகளை தரையில் நட்டு விட்டேன். Grow Bag-ல் வைத்ததற்கு காரணம், அப்போ அப்போ லேசா தோண்டி கிழங்கு வருதா, நிலவரம் எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் என்று தான். தவிர, எதாவது ஒரு மீடியாவில் ஒரு செடியாவது உருப்படியாய் வரும் என்று ஒரு ஆசை தான்.

நான் முன்பு எழுதிய மாதிரி, கிழங்கு வகைகளில் பெரும் பிரச்னை, பூமிக்கு அடியில் நடக்கும் ஒன்றையும் பார்க்க முடியாது. நாமும் ஆறு மாதம் தவறாமல் நீருற்றி, கடைசியில் வெறும் வேர் கூட இருக்கலாம். கிழங்கு வகை செடிகளை வைக்கும் போது முடிந்த அளவுக்கு நன்றாக தோண்டி மண்ணை நன்றாக தளர்த்தி பிறகு நடுவது, கிழங்கு வர எளிதாக இருக்கும் (நன்றாக இடம் இருந்தால் Raised Bed மாதிரி அமைத்து வைத்தால் நன்றாக வரும்)

பிடி கரனை செடியை வைத்த பிறகு உடனடி ஆராய்ச்சி ‘எப்போது அறுவடை செய்ய வேண்டும்? ‘அறுவடைக்கு உண்டான அறிகுறிகள் என்ன? என்பது தான். இணையத்தில் தேடி பார்த்தபோது நிறைய Elephant FootYam (சேனை கிழங்கு – வாழை கிழங்கு மாதிரி இருக்குமே) விவரங்கள் தான் பார்க்க முடிந்தது. பிடி கரனையும் கிட்டதட்ட அதே வகை தான். அதனால் அந்த விவரங்களையே எடுத்துக் கொண்டேன். நடவு செய்து கிட்டதட்ட ஐந்து மாதங்களில் கிழங்கு தயாராக இருக்கும். இலைகள் பழுப்பு நிறமாகி லேசாக காய தொடங்குவது கிழங்கு அறுவடைக்கு தயார் என்பதன் ஒரு அடையாளம்.

இந்த செடிகளில் முதலில் வரும் இலைக்கு பிறகு, தளிர் என்பதோ, புது இலை என்பதோ கிடையாது. செடி வந்து ஒரு மாதத்தில் பக்க கிளை ஓன்று வந்தது. அதுவும் கிழங்கில் இருந்து மொட்டு மாதிரியே வந்த குடை மாதிரி விரிந்து கொண்டது. அடுத்த ஒரு மாதத்தில் மூன்றாவதாக ஒரு பக்க கிளையும் வந்தது. என்னடா இது, இடமே இல்லமால் பக்க கிளை வந்துகிட்டே இருக்கே ஒரு வேலை கிழங்கு வச்சி அதுவும் முளைக்க ஆரம்பித்து விட்டதோ என்று ஒரு சந்தேகம். கடைசியில் மூன்று கிளைகளோடு நின்று விட்டது.

தரையில் வைத்த செடி இரண்டும் நல்ல செழிப்பாக வந்தது. Grow Bag-ல் வாய்த்த செடி சுமாராக தான் வந்தது. சரியான வெயில் இல்லாதது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். தவிர அவ்வப்போது லேசாய் coir pith-ஐ லேசாய் தோண்டி ஏதும் கிழங்கு வைக்கிறதா என்று அந்த செடியை டார்ச்சர் செய்து கொண்டிருந்தேன்.

பெப்ரவரி 28-ல் முளைக்க போட்ட கிழங்கு, ஒரு மாதம் கழித்து ஏப்ரல் 3-ல் முளைத்தது. ஏப்ரலை கணக்கில் எடுத்தால் ஆகஸ்டோடு ஐந்து மாதம் முடிந்திருந்தது. முதலில் வந்த கிளை லேசாய் பழுப்பு நிறத்தில் மாறி காய ஆரம்பித்திருந்தது. முடிவாக coir pith-ல் வைத்த செடியை தோண்டி பார்த்தபோது கிழங்கு ஒன்றும் சரியாக வரவில்லை. எல்லாமே ஒரு நெல்லிக்காய் அளவு கூட இல்லை. அதை பார்த்த போது இன்னும் ஐந்து மாதம் ஆகும் என்று தோன்றியது. எங்கேயோ தப்பு நடந்திருக்கு (coir pith-ல் போதுமான சத்து இருக்காமல் போய் இருக்கலாம், சூரிய வெளிச்சமும் அந்த செடிக்கு குறைவு) தரையில் இருப்பதை தோண்டி பார்த்திட வேண்டியது தான் என்று லேசாய் மேற்பரப்பில் கிளறி பார்த்ததில் கிழங்கு நன்றாகவே தெரிந்தது.

சுற்றி நன்றாக தோண்டி பிறகு செடி மொத்தமாய் எடுத்து பார்த்ததில் ஒவ்வொரு செடியிலும் ஐந்து-ஆறு கிழங்குகள். நல்ல திரட்சியாய். இரண்டாவது செடியிலும் நல்லதாய் அதே மாதிரி கிழங்குகள்.

இந்த செடிகளுக்கு தனியாக உரம் ஏதும் வைக்கவில்லை. பூச்சி தாக்குதல் ஏதும் இல்லை. சரியான நேரத்தில் அறுவடை செய்து, வெறும் ஐம்பது கிராம் அளவில் இரண்டு கிழங்குகளை வைத்து ஒரு கிலோவுக்கு கிழங்கு எடுத்திருப்பது வெற்றி தானே.

கொஞ்சம் காலி இடம் இருந்தால் தாராளமாக இரண்டு கிழங்குகளை நட்டி விடுங்கள். மாதா மாதம் இரண்டு/மூன்று செடி வைத்து விட்டால் வருடம் முழுவதும் கிழங்கு கிடைக்கும் படி பார்த்துக் கொள்ளலாம் (இடம் தான் வேண்டும்). கிழங்கு முளைத்து ஐந்து மாதத்தில் அறுவடை என்று கணக்கில் வைத்து கொள்ளலாம்.

கிழங்கு அறுவடை செய்த உடனேயே குழம்பு வைக்க பயனபடுதாமல் ஒரு வாரம் உலர விட்டு பயன்படுத்தினால் அதில் இருக்கும் காரல் தன்மை குறையும் என்று கூறினார்கள். அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.




















    
       






13 comments:

  1. வணக்கம்
    செய்முறை பற்றி மிகத்தெளிவாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அண்ணே கலக்கிடிங்க போங்க... நாக்கு அரிக்குமெ அந்த கிழங்கு தான இது. அதுக்கு பயந்தே சாப்பிட மாட்டேன். :-)

    அப்புறம் உங்ககூட போன்ல பேசுனது ரொம்ப சந்தோஷம். உங்க கிட்ட மரத்த பத்தி கேட்டேன் இல்லியா....கடைசில அந்த இடத்துல நந்தியாவட்டை வச்சுட்டேன்....அது ஏற்கனவே தொட்டில இருந்தது. செம growth. அதனால பூமிக்கு transfer பண்ணிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி. நந்தியாவட்டை வச்சிடீங்களா.. நல்லது.

      இந்த கிழங்கு அப்படி ஒன்றும் அரிக்காதே :-)) . வீட்டில் நல்ல வாட விட்டு பிறகு இதை வைத்து புளிக்குழம்பு வைத்தார்கள். ரொம்பவே நன்றாக இருந்தது.

      Delete
  4. arumaiyaa oru follow up post siva :) :) Detaileda eppo aruvadai seiyanum, epadi athu aruvadaiku ready nu therinjikanum elam sonathuku nandri! :)

    ReplyDelete
  5. பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகளில் உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது இந்த கரணை கிழங்கு ., எங்கள் ஊரில் இதை கரனை கிழங்கு என சொல்லுவார்கள், இதை வாங்கி அப்படியே வீட்டில் ஒரு ஓரத்தில் போட்டு வைத்துவிடுவார்கள். நன்றாக நீர் சுண்டிய சமைப்பார்கள், அபோதுதான் பிறகு அரிப்பு இருக்காது.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி அரவிந்த். ஓரளவுக்கு ஒரு வாரம் உலர விட்டு சமைதாலே காரல் தன்மை போய் விடும். இதை கரனை கிழங்கு, கருணை கிழங்கு என்றும் சொல்றாங்க.

      Delete
  6. as usual excellent narration with useful information.thanks boss

    ReplyDelete