பொதுவாய் சில விதைகள் நேரடியாக விதைக்கலாம்
(வெண்டை, அவரை மாதிரி), சில நாற்று விட்டு வளர்ந்த பின் நட வேண்டும் (தக்காளி,
கத்தரி மாதிரி). செடிகளின் விதையோ, நாற்றோ ரொம்ப சிறியதாக இருக்கும் பட்சத்தில்,
நாற்று விட வேண்டியது அவசியம், இல்லாவிட்டால் தொடக்கத்தில் பெரிய பாத்திகளில் நீர்
விட்டு வளர்ப்பது கடினம். தவிர தகுந்த இடைவெளி விட்டு விதைத்து கொண்டு வருவதும்
கடினம்.
நான் பொதுவாக நாற்று விட தனியாக ஒரு சிறிய
பாத்தி ஒன்றை தயார் செய்து கொஞ்சம் இடைவெளியில் விதைத்து வளர்ப்பது உண்டு. இதில்
சில பிரச்சனைகள், தக்காளி, கத்தரி செடிகள் பொதுவாக நெருக்கமாய் வந்து விடும். ஒரு
செடி என்று தோண்டி எடுக்க கடினமாக இருக்கும். தவிர வேரோடு தோண்டி எடுத்தாலும்
புதிய இடத்தில வேர் பிடிக்கும் வரை ஒரு இரண்டு நாள் நாற்று வாடி பிறகு தான் நன்றாக
வரும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க இந்த முறை Nursery Tray
மூலமாக நாற்று உற்பத்தி செய்ய முயற்சி செய்து பார்த்தேன்.
போன வருடமே இதை முயற்சி செய்ய நினைத்தது
தான். ஆனால் Nursery Tray எங்கும் கிடைக்க
வில்லை. இங்கே சில நர்சரி கார்டன்களில் அவர்கள் பயன்பாட்டிற்கு மட்டும்
வைத்திருந்தார்கள். இந்த முறை இங்கே அக்ரி இன்டெக்ஸ் போன போது Nursery Tray கிடைத்தது.
Nursery Tray பயன்படுத்தும் போது,
மணல் பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக தேங்காய் நாரில் இருந்து வரும் தூள்
பயன்படுத்த வேண்டும். நான் வீட்டில் கிடந்த தேங்காய் நெட் கொஞ்சம் எடுத்து கையை
வைத்தே உதிர்த்து ஓரளவு தூள் தயார் செய்து கொண்டேன். தும்பு/நார் ஏதும் இல்லாமல்
வெறும் தூள் மட்டும் இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும். வெறும் தூள் மட்டும் போட்டால் சத்து எதுவுமே
இருக்காது. எனவே பாதிக்கு பாதி என்ற அளவில் மண்புழு உரம் கலந்து
எடுத்துக்கொண்டேன்.
ஒவ்வொரு குழியிலும் பாதி அளவு போட்டு,
பிறகு வரிசையாக விதைகளை போட்டு மூடிவிடலாம். ஒரு பேப்பர் எடுத்து அதில் நம்ம Nursery
Tray க்கு ஒரு லே-அவுட் போட்டு எந்த வரிசையில் எந்த
விதை என்று குறித்துக் கொள்வது நலம். இல்லாவிட்டால் முளைத்தத பிறகு குழப்பம்
வரலாம் (குறிப்பாக வெள்ளை, வயலட் கத்தரி, நாட்டு, பெங்களூர் தக்காளி என்று சேர்த்து
விதைக்கும் போது). கொஞ்சம் வெயில் படும் இடத்தில் வைத்து நீருற்ற நான்கு ஐந்து
நாட்களிலேயே முளைக்க ஆரம்பித்து.
முதலில் முளைக்கும் போது பெரிய விதைகள்
தேங்காய் தூளை அப்படியே பெயர்த்து கொண்டு வரும். இலை வெளியே வந்ததும் அந்த தூளை
மறுபடி அந்த குழியில் போட்டு மூடி விடவும்.
Nursery Tray பயன்படுத்துவதில்
நான் கண்ட நன்மைகள்,
·
விதைகளின் முளைப்பு
திறன் அதிகமாக இருக்கிறது. பொதுவாய் மண்ணில் நேரடியாய் விதைக்கும் போது சில
விதைகள் முளைக்காது. ஆனால் இதில் எல்லா விதைகளும் முளைத்து விட்டது.
·
சரியாய் திட்டமிட்டு
வரிசையாய் நடலாம்.
·
கொஞ்ச இடம் இருந்தால்
போதும். இந்த சின்ன Tray-ல் நூறு நாற்றுகள்
எந்த பிரச்னையும் இல்லாமல் வளர்கிறது. இதையே பாதியில் விட்டு வளர்த்தால் நிறைய
இடம் தேவை படும்.
·
எடுத்து நட ரொம்ப
எளிது. இது லேசாய் செடியை பிடித்து இழுத்தால் அப்படியே தக்கை போல வந்து விடுகிறது.
பிடுங்குவதற்கு முன் நீர் தெளித்து விட்டு பிடுங்குவது நல்லது. இல்லாவிட்டால்
தேங்காய் நார் தூள் லேசாய் உதிரும்.
·
நாற்று பிடுங்கி
நட்டிய பிறகு வாடுவதில்லை. நாற்று அப்படியே பிரஷ்ஷாக இருக்கிறது. மண்ணில் இருந்து
பிடுங்கி நடும்போது லேசாய் வாடி விடும். அந்த பிரச்னை இதில் இல்லை.
இப்போது பீன்ஸ் நாற்று மட்டும் எடுத்து பாத்திகளில்
நட்டிருக்கிறேன். இன்னும் Tray-ல் கத்தரி, வெண்டை,
கொத்தவரை, புடலை, பாகல் நிற்கிறது.