Sunday, June 17, 2012

கோவை - அக்ரி இன்டெக்ஸ் – 2012

மே கடைசி வார இறுதியில் (மே 30 - ஜூன் 3) இங்கே கோவையில் ‘அக்ரி இன்டெக்ஸ் 2012” (விவசாய கண்காட்சி) கொடிசியா வளாகத்தில் நடப்பதாக கேள்விப்பட்டேன். குழந்தைகளுக்கு பொருட்காட்சி மாதிரி, கார் பிரியர்களுக்கு Auto Expo மாதிரி தான் என்னை போல ஆளுங்களுக்கு இந்த விவசாய கண்காட்சி. நாள் முழுக்க சோறு தண்ணி இல்லாம சுத்திக்கிட்டே இருக்கலாம். 


அந்த சனிகிழமை காலை 9:30 க்கே கொடிசியாவில் குடும்பத்தோடு ஆஜர். வெளியிலேயே தேனீ பண்ணை, நர்சரி கார்டன் என்று வரிசையாக நம்மை வரவேற்று கொண்டிருந்தது. தேனீ பண்ணை ஆளுங்க தேனிலே நிறைய flavors காட்டி அசத்தி கொண்டிருந்தார்கள். வாழை பூ, தும்பை பூ, மல்லி பூ என்று நிறைய flavors. கூடு எந்த தோட்டத்தில் வைக்கிறோமோ அந்த flavor-ல தேன் வருமாம். ஒருத்தர், கொடுத்த சாம்பிள நக்கி நக்கி பார்த்துட்டு ‘எல்லாம் ஒரே மாதிரி தானே இருக்குங்க’ அப்படின்னு முழிச்சிக்கிட்டு இருந்தார். ‘அட என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க. நல்லா  சாப்பிட்டு பாருங்க’ என்று இன்னொரு கரண்டியை கையில் ஊற்ற, ‘ஆமாங்க டேஸ்ட் வருது. எனக்கு ஒரு கொத்தமல்லி flavor-ல ஒரு பாட்டில் கொடுங்க’ன்னு வாங்கிட்டார். கொத்தமல்லியா, அதுல பூ கடுகு சைஸ் கூட இருக்காதே. தேனீ எப்படிடா அதுல உக்காந்து தேன் எடுக்கும் என்று நமக்கு டவுட்டு. அத கேட்டா நம்ம கையிலும் ஒரு கரண்டிய ஊத்திருவாங்கன்னு அமைதியா நடையை கட்டிட்டோம். 

உள்ளே A, B, C ஹால் முழுக்க வரிசையாக stalls தான். கிட்டதட்ட 150-200 Stalls இருக்கும். ஒரு விவசாய உலகமே உள்ளே. இந்தியாவில் விவசாயம் இவ்வளவு முன்னேறி விட்டதா என்று ஆச்சரியம். விதைப்பதில் இருந்து அறுவடை வரை அத்தனைக்கும் மெஷின். தேங்காய் உரிக்க, ஓட்டை உடைத்து கொப்பரை தேங்காய் மட்டும் தனியாக எடுக்க என்று நம்ம ஆளுங்களே தயாரித்த customized மெஷின்களை நிறைய பார்க்க முடிந்தது. நிறைய விவசாய மக்களை ஹால் முழுக்க பார்க்க முடிந்தது (பொழுதை மட்டும் போக்க வந்த கூட்டம் கம்மியாகவே தெரிந்தது). விவசாயம் தவிர, கால்நடை வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு என்று நிறைய கடைகள்.  



  நான் வழக்கம் போல தோட்டத்திற்கு தேவையான விதை, Gardening Tools என்று தேட ஆரம்பித்துவிட்டேன். கேரட் போன தடவை ப்ளாப் ஆகி போனது. மீண்டும் முயற்சி பண்ணி பார்க்கலாம் என்று ஒரு பாக்கெட், சிறு கீரை, காலிப்ளவர் என்று சில காய்கறிகள். தென்னைக்கு குரும்பல் உதிராமல் இருக்க டானிக் என்று கோவை Tamil Nadu Agricultural University (TNAU) இருந்து விற்று கொண்டிருந்தார்கள். வீட்டு தென்னை இரண்டுக்கும் இரண்டு. Tiger Lily மாதிரி பூச்செடி கிழங்குகள் சிலவும் வாங்கினேன்.



 நிறைய Tools கடைகள் பார்க்க முடிந்தது. ரோஸ், ஜாதி மல்லி செடி வெட்ட cutter ஓன்றும் , காய்கறிகளை பறிக்க சின்ன cutter ஓன்றும் . தோட்டம் போட shovels, sprayer ஓன்றும் வாங்கினேன். மொத்தமாக ஒரு ஆயிரம் ரூபாய் காலி. பூச்சி கொல்லியாக மஞ்சள் கரைசல், துளசி சாறு கரைசல், வேப்பிலை கரைசல் தெளிக்கலாம் என்று வாங்கிய ஒரு சி.டியில் போட்டிருந்தது. அதற்கு தான் Sprayer.

‘தோட்டம்’, ‘காய்கறி’ என்று எழுத்தோடு கண்ணில் பட்ட அத்தனை புத்தகம் சி.டி என்று வாங்கி கொண்டிருந்தேன். இதில் ‘தொழிநுட்ப தோட்டக்கலை’ என்ற புத்தகத்திற்கு ’வருட சந்தா வேறு J. AQUARIUM FARM என்று ஒரு சி.டி. வெறும் Guppy Fish பற்றி எங்கேயோ சுட்ட வீடியோவை போட்டு அம்பது ரூபாய் மொய் எழுத வைத்து விட்டார்கள். “Organic Vegetable Gardening” என்று ஒரு சி.டி, கூகிளில் இருந்து விசயங்களை சுட்டு ஒரு கார்ட்டூனை போட்டு கடுப்பெற்றி இருந்தார்கள். இன்னொரு அம்பது ரூபாய் மொய் :-).
 
“Kitchen Gardening”  உருப்படியான ஒரு சி.டி. செடிகளுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் காய்கறிகளில் உறிஞ்சப்படும் chemical residue பற்றி கூறி, வீட்டுத்தோட்டத்தின் அவசியத்தை கூறுகிறது. வீட்டுத்தோட்டத்தில் பூசிகொல்லியாக வேம்பு, துளசி, மஞ்சள் பயன்படுத்தும் வகையையும் விளக்கமாக சொல்லி இருக்கிறார்கள்.


மதியம் வரை சுற்றிவிட்டு கிளம்பினோம். மறுபடியும் ரோஜா தோட்டம் வைத்து பார்க்கலாம் என்று ஒரு ஆசை (முன்பு ப்ளாப் ஆனதை ரோஜா பதிவில் சொல்லி இருந்தேன்). வெளியில் இருந்த நர்சரி கார்டனில் எல்லா கலரிலும் ஒன்னொன்னு என்று ஒரு பனிரெண்டு செடி வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.  

மறுபடியும் ஞாயிறும் ஒரு சுற்று சுற்றி விட்டு வந்தேன் . சனி ஞாயிறு இப்படியே போய்விட்டது. ரோஜா செடிகளை மாடியில் தொட்டிகளில் அன்றே வைத்து விட்டேன். ரொம்பவே பயனுள்ள ஒரு கண்காட்சி. முடிந்தால் அடுத்த வருடம் போய் பாருங்கள்.


Monday, June 4, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் - மணத்தக்காளி கீரை


கீரை வகை ஓன்று. காய்கறிகளில் ரொம்ப சத்துள்ளதாக கூறப்படும் ஓன்று கீரை. நாம் தான் அவ்வளவாக உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை. வளர்ப்பதற்க்கும் ரொம்ப எளிதான ஒரு செடி. கீரை வகைகள்  ஒரு பட்டியலே  போடலாம்.  நான் வீட்டில் சிறு கீரை, அரை கீரை, பொன்னாங்கண்ணி  கீரை, பாலக் கீரைமணத்தக்காளி கீரை, பருப்புக் கீரை வைத்திருக்கிறேன். முருங்கை இலையும் ஒரு சிறந்த கீரை தான். இந்த பதிவில் மணத்தக்காளி கீரை பற்றி பார்க்கலாம்.

மணத்தக்காளி கிட்டத்தட்ட ஒரு மூலிகை செடி தான். மற்ற கீரைகளில் வெறும் சத்து தான் இருக்கும். ஆனால் மணத்தக்காளியில்   நிறைய மருத்துவ குணமும் இருக்கிறதாம். அதனால் நம்ம ஆளுங்க சூப் எல்லாம் போட்டு கல்லா கட்டிக் கொண்டிருப்பார்கள்.


எப்பவுமே இந்த கீரை கண்டிப்பாக தோட்டத்தில் இருக்கும். இந்த வருடம் இடம் இல்லாமல், கடைசியில், தண்ணீர் தொட்டிக்கு (water sump) பக்கத்தில் கொஞ்சம் இடத்தை கண்டுபிடித்து சரி பண்ணினேன். பழங்கள் மொத்தமாக விழுந்து அதுவாகவே முளைப்பதால் செடிகள் கொத்து கொத்தாக முளைத்து விடும். பிறகு நாம் தான் பிடுங்கி மறுபடி நட வேண்டும். இதை தவிர்க்க இந்த முறை பழங்களை பறித்து ஒரு சின்ன பக்கெட்டில் கரைத்து ஒரு நீர்க்கரைசலாக எடுத்து கொண்டேன். ஒரு ½ இஞ்ச், நிலத்தை கிளறி கரைசலை ஊற்றி விட்டேன்.  


அளவான இடைவெளியில் செடிகள் முளைக்க ஆரம்பித்தது. பொதுவாக மணத்தக்காளி செடி பெரிதாக வளரும் செடி. ஆனால் கீரைக்காக மட்டும் என்றால் (வற்றலுக்காக பழம் தேவை இல்லை என்றால்) நெருக்கமாகவே வளர்க்கலாம். நன்றாக வெயில் படும் இடமா என்று மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக செம்மண்ணும் மணலும் கலந்து, கொஞ்சம் உரமும் (vermi compost மாதிரி) கலந்து பாத்தி தயார் செய்யலாம்.




செடி ஒவ்வொன்றும் 1 ½ அடி உயரம் வந்ததும் ரொம்ப நெருக்கமாக இருக்கும் செடிகளை வேரோடு பிடுங்கி விடலாம் (கீரைக்காக தான்). இதனால் மற்ற செடிகள் நன்றாக வளரும். தேவையான இடைவெளியில் செடிகள் வந்ததும், கீரைக்காக கிளைகளை ஒரு கத்தரியால் வெட்டி எடுத்துக் கொள்ளலாம். செடி உடனே தளிர்த்து வளர தொடங்கி விடும். இதனால் ஒரு செடியில் இருந்து நிறைய தடவை நமக்கு கீரை கிடைக்கிறது.

மணத்தக்காளிக்கு தனியாக விதை வாங்க வேண்டியது இல்லை. இரண்டு செடிகளை காய்க்க விட்டால் போதும். அதன் பழங்களை பறித்து விதையாக எடுத்துக் கொள்ளலாம். பழங்களும் சாப்பிட நன்றாக இருக்கும். எங்க வீட்டுக்கு வரும் குட்டீஸ் தோட்டத்தில் இந்த பழங்களை தேடி பறித்து தின்று கொண்டிருப்பார்கள். பழங்களை காயவைத்து வற்றலாகவும் பயன் படுத்துகிறார்கள்.









தமிழ் விக்கியில் இருந்து:
மணத்தக்காளி தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சுக்குட்டி கீரை எனவும் கூறப்படுகிறது. 

மணத்தக்காளியில் நிறைய உயிர்ச் சத்துக்களும், புரதச் சத்துக்களும், இரும்புச் சத்தும் உண்டு. இந்தக் கீரையில் தக்காளி வடிவில் சிறிய அளவில் மணி மணியாகக் காய்கள் இருப்பதால் மணித்தக்காளி என்றும் அழைக்கப்படுகிறது.

சித்த மருத்துவத்தில் குடல் புண்களைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு.மணத்தக்காளி கீரையில் உள்ள solonine என்ற ஆல்கலாய்டும்,சல்போனினும் ,வாய்ப்புண்,நாக்குப்புண்,குடல்புண்,வயிற்றுப்புண் ஆகிய நோய்களை குணப் படுத்துகிறது. இதில் இருக்கும் anti-oxidant புற்று நோய் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள diosgenin இருமல்,சளி மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்தும் தன்மையுடையது.

மணத்தக்காளிக் கீரையில் உடல் நலத்துக்கான சத்துக்கள் நிறைய இருக்கின்றன. அதனால், குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து வாரம் ஒரு முறையாவது இந்தக் கீரையைச் சாப்பிடப் பழக்கப்படுத்துவது நல்லது.