Tuesday, April 22, 2014

தோட்டம் – தகவல்-2 (விதைகள், பஞ்சகாவ்யா, மண்புழு உரம்)



இது ரொம்ப முக்கியமாய் பார்க்க வேண்டிய பகுதி. எந்த ஒரு பொழுது போக்கையும் எடுத்துக்கொண்டால், அது சம்மந்தமாக பொருட்களை சேர்ப்பதே ஒரு சந்தோசம். Painting செய்பவர்கள் என்றால் அது சம்மந்தமாக palette, paints, brush என்று சேர்த்துக்கொண்டே இருப்பார்கள். எதாவது ஒரு இசை அமைப்பாளர் ரசிகர் என்றால் எத்தனை சி.டி இருக்கிறதோ அத்தனையையும் சேர்த்துக் வைத்திருப்பார்கள் (என்னை போல் ராஜா ரசிகர்கள்). அப்படி தான் தோட்டம் என்றால், கிடைக்கும் அத்தனை வகை விதைகளையும் சேர்ப்பதே ஒரு சந்தோசம். அதை பயன்படுத்துகிறோமோ இல்லையோ, ஆனாலும் எந்த கண்காட்சி சென்றாலும் எதாவது விதை விற்பனை கடையை பார்த்து விட்டால் நம்ம மனசு தானாகவே அங்கு சென்று விடும். புதிதாக ஒரு ஐந்து பாக்கெட் விதைகளாவது வாங்கினால் தான் நமக்கு சந்தோசம். 

My Seed Box/Collection
விதைகள் என்று பார்த்தால் Hybrid மற்றும் நாட்டு விதைகள் என்று இரு வகைகள் கூறலாம். வீட்டுத் தோட்டம் என்று போகும் போது, முடிந்த அளவுக்கு ஹைப்ரிட் விதைகளை காய்கறி, பழ மரங்களுக்கு தவிர்க்கலாம். நாட்டு விதைகளில் வரும் செடிகள் பொதுவாய் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாய் இருக்கும். நீண்ட காலம் பலன் தரும். அடுத்த பருவத்திற்கு அதில் ஒரு காயை விதைக்கு விட்டு எடுத்து கொள்ளலாம். வருடா வருடம் விதை வாங்க வேண்டியதில்லை. வேண்டுமானால் பூ செடிகளுக்கு ஹைப்ரிட் போகலாம்.

நான் பொதுவாய் அடிப்படை காய்கறி விதைகள் (கத்தரி, தக்காளி, வெண்டை, அவரை) இங்கே அக்ரி யுனிவர்சிட்டியில் வாங்குவேன். அவைகள் ஹைப்ரிட் விதைகள் தான்.  நாட்டு கத்தரி (வெள்ளை) விதைகள் ஊரில் இருந்து வாங்கி வருவதுண்டு. முழுவதும் நாட்டு காய்கறிகளுக்கு மாறி பார்க்கலாம் என்று இந்த முறை வானகம் ஸ்டாலில் இருந்து வெண்டை, அவரை என்று எல்லாம் வாங்கி வந்திருக்கிறேன். நாட்டு விதைகள் வேண்டும் என்றால் (வானகம்) போன் செய்தால் கூரியரில் அனுப்பி வைப்பதாக அந்த ஸ்டாலில் இருந்தவர் கூறினார். விவரம் வேண்டுபவர்கள் எனக்கு gsivaraja@gmail.comக்கு ஒரு மடலை தட்டி விடுங்கள்.

கேரட், காலி ஃப்ளவர், கோஸ் என்றால் ஹைப்ரிட் விதைகள் தான் போக வேண்டும். ஹைப்ரிட் விதைகள் என்றால் பொதுவாய் கிடைப்பது Omaxe Brand விதைகளை கூறலாம். என் தோட்டத்தில் விளைந்த கேரட், காலி ஃப்ளவர், கோஸ் எல்லாம் Omaxe Brand விதைகள் தான். இவை பொதுவாய் எல்லா பெரிய விதை கடைகளிலும் கிடைக்கும். அவர்கள் இணையத்திலும் கிடைக்கிறது. இது தவிர Kraft Seeds-ம் Omaxe Brand மாதிரி தான். 

Namdhari Seedsபோன டிசம்பரில் Coimbatore Shopping Festival-ன் போது, Gerbera, Carnation, Pansy விதைகள் தேடியபோது ஒரு கடையில் இந்த பிராண்டு விதைகள் கிடைத்தது. ஒவ்வொன்றும் விலை Rs. 45. வாங்கி வந்து முளைக்க போட்ட போது, அதன் முளைப்பு திறன் (Germination Rate) ஆச்சரியபட வைத்தது. Gerbera, Pansy விதைகளே 100% முளைத்தது. பிறகு Namdhari Seeds பற்றி தேட ஆரம்பித்த போது, Online-ல் அவர்கள் இணையத்தில் விற்பது இல்லை போல. இங்கே கோவையில் ஒரு கடையை (Sakthi Agro Service) Distributor List-ல் போட்டிருந்தார்கள். அந்த கடையை தேடி நேரில் போய் விசாரித்த போது Namdhari விதைகள் ஜூனில் தான் வரும் என்றார். Bhawani Seeds என்று ஒரு பிராண்டு தான் வைத்திருந்தார் (Rs.25 / pocket). Aster, Cosmos விதைகள் வாங்கி வந்தேன். இன்னும் முளைக்க போடவில்லை.இந்த கடை TNAU-kku போகும் போது தடாகம் ரோடு-வடவள்ளி சிக்னலின் அருகில் இருக்கிறது. Namdhari Seeds பெங்களூர் கம்பெனி. எனவே பெங்களூரில் எளிதாக கிடைக்கும். அங்கே Namdhari Fresh கடைகளில் கிடைக்கும் என்றும் இணையத்தில் சிலர் கூறி இருந்தார்கள். 
Map - Sakthi Agro Service
இங்கே கோவையில் எனக்கு கொடுத்த கம்பெனியை தேடி நேரில் போய் இன்னும் கொஞ்சம் விதை வாங்கி வந்தேன். அவர்கள் Namdhari flower Seeds collection கொஞ்சம் வைத்திருக்கிறார்கள். பெரிதாய் ஒன்றும் இல்லை. மற்ற பொருட்கள் எல்லாம் விலை ரொம்ப அதிகமாக இருக்கிறது. அதனால் இந்த நிறுவனம் பற்றி அறிமுகம் தேவை இல்லை. 

இணையத்தில் ஒரு Namdhari  Seeds collection பார்த்தேன். அந்த Site எந்த அளவுக்கு நம்பகமானது என்று தெரியவில்லை. 

இணையத்தில் விதைகள் வேண்டும் என்றால், gardenguru.in ல் நிறைய வகைகள் பார்க்க முடிகிறது.
 
பொதுவாய் காய்கறி விதைகளுக்கு பாக்கெட் பத்து ரூபாய்க்கு மேல் லோக்களில் வாங்க வேண்டாம் (Omaxe Hybrid seeds, Cherry tomato seed மாதிரி  போகும் போது முப்பதில் இருந்து நாற்பது ரூபாய் ஆகலாம்). இங்கே TNAU-ல் பத்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட் வெண்டை விதை வாங்கி பார்த்தால் அதன் அளவு தெரியும். அதையே நான்கு, ஐந்து பாகமாய் பிரித்து ஒவ்வொன்றும் பாக்கெட் இருபது முப்பது ரூபாய்க்கு லோக்களில் விற்கும் கம்பெனிகளும் இருக்கின்றன. அது நமக்கு தேவை இல்லை. கீரை எல்லாம் ஐந்து கிராம், பத்து கிராம் என்று உரக் கடைகளில் வாங்கலாம். 
   
விதை பற்றி கூறும் போது, இன்னொரு விசயத்தையும் கூற வேண்டும். பொதுவாய் எங்கு Exhibition போட்டாலும் அங்கே கலர் கலராய் பாக்கெட்டில், தக்காளி முதல் கேரட் வரை, செண்டு பூவில் இருந்து ஜெர்பரா வரை எல்லாம் பாக்கெட் பத்து ரூபாய் என்று விற்கும் ஒரு கடை கண்டிப்பாய் இருக்கும். பத்து ரூபாய் தான என்று நாமும் கிடைத்ததை எல்லாம் அள்ளி வருவது உண்டு. சில நேரம் கத்தரி பாக்கெட்டில் கத்தரிக்கு பதிலாக பூசணி விதை கூட இருந்திருக்கிறது. நான் Namdhari Seeds வாங்கிய போது, சும்மா Test  செய்து பார்க்கலாம் என்று அந்த பத்து ரூபா கையில் போய் ஜெர்பரா, Aster என்று சில பாக்கெட்டுகளை வாங்கி வந்து போட்டேன் (அவிங்க மட்டும் எப்படி பத்து ரூபாய்க்கு இந்த விதைகளை கொடுக்கறாங்க என்று ஒரு ஆர்வம் தான்). அதோட Result கீழே. போட்ட விதை போட்ட படியே இருக்கிறது. கொடுத்த காசு அந்த கடை காரருக்கு மொய் தான். அடுத்த முறை யோசிச்சி வாங்குங்க :-)
Namdhari Seed Vs Rs.10 Seed :-)
 மேலும் சில தகவல்கள். இங்கே கோவையில் TNAU-ல் நிறைய பொருட்கள் ரொம்பவே விலை குறைவாக கிடைக்கிறது. அவர்கள் பொதுவாய் இதை எல்லாம் விளம்பரம் செய்வது இல்லை. மண்புழு உரம் கிலோ ஆறு  ரூபாய்க்கே கிடைக்கிறது (வெளியே அதையே முப்பது-நாற்பது ரூபாய்க்கு விற்கிறார்கள்). மண்புழு உரம் வேண்டும் என்றால், திங்கள்-வெள்ளி மட்டும் (வெள்ளி அன்று மதியம் வரை மட்டும்) கிடைக்கும். நாம் தடாகம் ரோடு-வடவள்ளி சிக்னலில் இருந்து போகும் போது, இடது பக்கம் (Opp. To the Botanical Garden/Park Gate) போய் கேட்டால் கிடைக்கும்.

இன்னொரு முக்கியமான பொருள், பஞ்சகாவ்யா. TNAU-ல் லிட்டர் Rs.80-க்கே தரமான பஞ்சகாவ்யா கிடைக்கிறது. அதே இடப்பக்கம் போய் Environmental Science Department (ENS Department) என்று கேட்டால் சொல்வார்கள். நிறைய கம்பெனிகள் அரை லிட்டர் பஞ்சகாவ்யாவையை Rs.150 க்கு விற்க பார்த்திருக்கிறேன். TNAU தான் நிறைய கம்பெனி பஞ்சகாவ்யா தரத்தையே Certify செய்கிறது. நமக்கு TNAU தயாரிப்பே விலைகுறைவாக கிடைக்கிறது. நான் போனபோது சனிக்கிழமையே கிடைத்தது. திங்கள்-வெள்ளி கண்டிப்பாக கிடைக்கும்.

TNAU-ல் இப்போது விதைகளுக்காகவே ஒரு Vending Machine நிறுவி இருக்கிறார்கள் (at Botanical Garden/Part entrance). பத்து ரூபாய் நோட்டை சொருகி விதையை தேர்ந்தெடுத்தால் அதுவே கொடுத்துவிடுகிறது. ரொம்ப நல்ல முயற்சி (ஆனால் விதை தான் வெறும் தக்காளி,கத்தரி, வெண்டைக்காய், பாகல் என்று ரொம்ப குறைவான வகைகளையே நிரப்பி வைத்திருக்கிறார்கள்)
 
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், மற்ற ஊர்களில் (குறிப்பாக சென்னை) Coir Pith, விதை, Nursery Tray,  பஞ்சகாவ்யா, மண்புழு உரம் போன்ற பொருள்கள் தரமாக, விலை நியாயமாக உங்கள் ஊர்களில் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு பயன்படட்டும்.

Wednesday, April 9, 2014

மாடித்தோட்டம் – இரண்டாம் கட்டம் (Expansion)



நான் முள்ளங்கி பதிவில் கூறிய மாதிரி, Coir Pith Media வைத்து அமைத்த எனது  முதல் மாடி தோட்டம் நன்றாகவே வந்திருக்கிறது. நமது மாடி தோட்டத்தை விரிவு படுத்த, அடுத்த கட்டமாக DO IT YOURSELF KIT –ல் வந்த இருபது Poly Grow Bags-ஐ தோட்டத்தில் அமைக்க ஆரம்பித்தேன். இதில் பொதுவாக கீரைவகைகளை போடலாம் என்று இருக்கிறேன். இந்த வருட இறுதியில் Shade Net எல்லாம் வைத்து அமைக்கும் வரை பெரிதாய் ஏதும் செய்ய முடியாது (எங்க வீட்டை சுற்றி நிறைய காலி இடமாக கிடப்பதால் நிறைய அனல் காற்று அடிக்கும். பெரிய செடிகள் தாக்கு பிடிக்காது)

நிறைய நண்பர் கேட்கும் விவரம், Coir Pith வைத்து தொட்டிக்கான மண் தயாரிப்பது பற்றி. எவ்வளவு விகிதம் மண் கலக்க வேண்டும், வேறு என்ன என்ன கலக்க வேண்டும் என்பது பற்றி. இதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்கிறார்கள். சிலர் Fungicide போன்ற மக்க வைக்கும் பூஞ்ஜானங்களை போட்டு Coir Pith-ஐ மக்க வைத்து, பிறகு அதில் உரம் கலந்து பயன்படுத்துகிறார்கள் (DO IT YOURSELF KIT also suggesting the same method). இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், perlite, vermiculite என்று சில பொருட்களை கலந்து தயாரிக்கிறார்கள்.

இருக்கிறத வச்சி எளிதாய் செய்வது தான் நம் தோட்டம். கிடைக்கும் அனுபவத்தை வைத்து நாமே சரி செய்து கொள்ளவேண்டியது தான். என் மாடி தோட்டத்திற்கு நான் எடுத்து கொண்டது, Coir Pith, செம்மண், மண்புழு உரம். இதை 2:1:1 என்ற விகிதத்தில் எடுத்து கொண்டேன். மண்புழு உரம் இங்கே TNAU-ல் விலை குறைச்சலாக கிடைபதால் பிரச்னை இல்லை. விளைச்சல் நன்றாகவே வந்திருக்கிறது.போன சில மாடிதோட்டம் பதிவுகளை பார்த்தால் செடிகளின் பசுமையும் விளைச்சலும் உங்களுக்கே தெரியும்.  ஒரு செடி முருங்கையை வெறும் Coir Pith, செம்மண் கலவை மட்டுமே வைத்து ஒரு முயற்சியாக வைத்திருக்கிறேன். அதன் மேல் கொஞ்சம் உரம் கலந்தால் போதும். Coir Pith என்பது ஒன்றுமே இல்லாத வெறும் சக்கை தான். நீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும் அவ்வளவே. அதில் செடிக்கு தேவையான உரங்களை நாம் கலந்து கொள்ளவேண்டியது தான். செம்மண கலப்பது கிட்டதட்ட செடிக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து விடும்.

நான் இரண்டு விதமான கலவை எடுத்துக்கொண்டேன். முதல் கலவை வெறும் Coir Pith மற்றும் செம்மண் மட்டும். இதை ஒரு பாதி அளவுக்கு நிரப்ப பயன்படுத்திக்கொண்டேன் (இதனால் மண்புழு உரம் தேவையை குறைக்கலாம்). மேல் பாதிக்கு Coir Pith, செம்மண் மற்றும் மண்புழு கலவையை போட்டு விட்டேன்.    

DO IT YOURSELF KIT-ல் ஒவ்வொரு பைக்கும் இரண்டு கிலோ அளவிலான Coir Pith Block வைத்திருந்தார்கள். நான் மேலே கூறிய படி பயன்படுத்திய போது 15 பிளாக்குகள் தான் தேவை பட்டது (மணலும் உரமும் கலந்து விட்டதால்). இப்போது அடிக்கும் வெயிலை பார்க்கும் போது, ஜூன் தொடக்கத்தில் விதைகள் போட்டு ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அதுவரை அவ்வப்போது கொஞ்சம் நீருற்றி வந்தால் கலவை மக்கி நமக்கு தயாராகி கொண்டிருக்கும்.                

DO IT YOURSELF KIT-ல் இருந்து இன்னும் கீழே விரிக்கும் பாலிதீன் சீட் கொடுக்கவில்லை. சென்னையில் கொடுத்துவிட்டார்கள். இங்கே கேட்டதற்கு தேர்தல் நேரத்தில் இந்த மாதிரி மானிய பொருட்கள் எல்லாம் கொடுக்க தடையாம் (கொடுத்ததில் மிச்சத்தை கொடுக்க என்னப்பா தடை?). மாடிதோட்டத்திற்கு நீர் இறங்காமல் இருக்க தரை விரிப்பு அவசியமா என்றால், நான் பார்த்த பெரிய பெரிய மாடிதோட்டங்கள் எல்லாம் எந்த விரிப்பும் இல்லாமல் தான் செய்திருக்கிறார்கள். நாம் பைகளில் நீருற்றுவதில் சில துளிகள் தான் வெளியே தெறிக்க போகிறது. அதனால் ஒன்றும் பிரச்னை வருவதில்லை. பெரிய அளவில் நீர் தங்காமல் பார்த்துக் கொண்டால் போதும்.