Sunday, December 30, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – சீத்தா


 சீத்தாப்பழம் (Custard Apple), அவ்வளவாக கண்டுகொள்ளப் படாத  ஒரு பழம். விதைகள் நிறைய இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் ருசியிலும், அதில் அடங்கி இருக்கும் சத்துக்களிலும் மற்ற பழங்களை விட குறைந்தது இல்லை.  ஊரில் எல்லோர் வீட்டிலும், தோட்டங்களிலும் இருக்கும். இதன் பூவையும் பறித்து சாப்பிட்டுக் கொண்டு திரிவோம்.

இதுவும் எங்க ஊர் சந்தையில் இருந்து வாங்கி வந்த செடி தான். வைத்து ஒரு வருடத்தில் காய்க்க தொடங்கி விட்டது. ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் காய்க்கிறது. இந்த தடவை ஒரு 25 – 30 காய் கிடைத்தது. 

சீத்தா எளிதாக வளரும் ஒரு மரம். நோய் ஏதும் தாக்காது. குறைந்த நீர் இருந்தாலும் நன்றாக வரும். தனி கவனம் எடுத்து ஏதும் கவனிக்க வேண்டியதில்லை. எல்லா மரத்திற்கும் உரம் வைக்கும் போது இதற்கும் கொஞ்சம் வைத்து விட்டால் போதும்.  

நன்றாக பழுத்த பழத்தின் ருசியே தனி தான். ஆனால் ரொம்ப கனிந்து விட்டால் சிதைந்து விடும் அளவுக்கு அதன் தோல் மென்மையாகி விடும். அதனால் தான் கடைகளில் கிடைக்கும் பழங்கள் காயாகவே பறித்து விற்பனைக்கு வருகிறது. அவைகள் பழுக்கும் போது அவ்வளவு ருசி இருப்பதில்லை. இங்கே வீட்டு செடியில் நன்றாக பழுக்கும் வரை விட்டு பறிப்போம். நன்றாக பழுத்து விட்டால் பழம் தானாகவே கீழே விழுந்து சிதைந்து விடும். நன்றாக பழுக்கும் திரட்சி வந்ததும், ஒரு துணியை வைத்து கிளையோடு கட்டி விட்டால் இதை தவிர்க்கலாம்.

எங்கள் வீட்டில் இருக்கும் பழ மரங்களில் ரொம்ப பிடித்த பழம் இது தான். இந்த தடவை ஊருக்கு பொங்கலுக்கு ஊருக்கு போகும் போது இன்னும் ஒரு செடி கொண்டு வந்து வைக்கலாம் என்று இருக்கிறேன்.









 

Tuesday, December 4, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – வெங்காயம்


வெங்காயம் விலை எகிறிப்  போய்க் கொண்டிருக்கும் இந்த வேளையில் (போன வாரம் சின்ன வெங்காயம் கிலோ ஐம்பது, அறுபது ரூபாய் இருந்தது) தோட்டத்தில் இருந்து இந்த வாரம் வெங்காயம் பற்றிய பதிவு. 

வெங்காயம் என்பது நம் சமையலில் ஒரு முக்கியமான காய்கறி. வெங்காயம் போடாமல் ஏதாவது சமைப்பார்களா என்பது சந்தேகமே. 

சின்ன வயதில் சமையல் அறையில் ஏதாவது வெங்காயம் முளைத்து கிடந்தால் எடுத்து வந்து நட்டு வளர்ப்போம். இங்கே வெங்காயத்திற்கு TNAU-ல் விதைகள் கிடைப்பதை பார்த்து ரொம்ப ஆச்சரியமாய் இருந்தது. பிறகு Google பண்ணி பார்த்த போது, வெங்காயச் செடி நன்றாக வளர்ந்ததும் பூ பூக்கும் என்றும், அந்த பூ முற்றியதும் அதில் இருந்து விதை எடுக்கலாம் என்றும் விவரங்கள் கிடைத்தது.

சரி நாமும் முயற்சி செய்து பார்ப்போம் என்று ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து நட்டேன். நன்றாக வளர்ந்ததும் ஒவ்வொரு இலை நுனியிலும் வெள்ளையாய் ஒரு மொட்டு வந்து, பூத்தது. பூ நன்றாக பெரிதானதும் உள்ளே சின்னதாய் கருப்பாய் (எள் மாதிரி) விதைகள் கிடைத்தது. 





அந்த விதைகளையே ஒரு சோதனை முயற்சியாக ஒரு சிறிய இடத்தில் விதைத்தேன். ஒரு வாரத்தில் முளைத்து விட்டது. எதிர்பார்த்ததை விட வெங்காயம் பெரிதாகவே வந்திருக்கிறது. 









சின்ன வெங்காயம் விதை TNAU-ல் வாங்கியது. மண்ணை லேசாக கிளறி விட்டு தூற்றி விட்டேன். புல் மாதிரி தான் வளர்ந்து கிடந்தது. செடி முற்றி லேசாக பழுப்பு நிறம் கொடுத்து வாட துவங்கும் போது அறுவடை செய்தேன். நன்றாக திரட்சியான சின்ன வெங்காயம், செடிக்கு ஒன்றாய் காய்த்திருந்தது. சின்ன வெங்காயத்தை வாங்கி நாம் அப்படியே விதைத்தும் நடவு செய்யலாம். 

அடுத்த முறை இன்னும் கொஞ்சம் பெரிய இடத்தில் மற்ற காய்கறிகள் போலவே பயிரிடலாம் என்றிருக்கிறேன். வெண்டை மாதிரி செடிகளுக்கு இடையே ஊடுபயிராக நடலாம்.