பதிவுக்கு போவதற்கு முன்பு ஒரு தகவல். கோவையில் இருப்பதில் ஒரு நன்மை இங்கே இருக்கும் விவசாய கல்லூரி. உரம், விதைகள் என்று தோட்டத்திற்கு வேண்டிய பொருள்கள் தரமாக வாங்க முடியும். இன்னொன்று, கோவையில் வருடா வருடம் கொடிசியா வளாகத்தில் நடக்கும் அக்ரி இன்டெக்ஸ் (Agri Intex). இது ஒரு விவசாய கண்காட்சி (விழா எனலாம்).
இந்த வருடம் ஜூலை 11 ல் இருந்து ஜூலை 14 வரை.
கண்டிப்பாய் போய் பாருங்கள் (நான் இரண்டு
நாளும் அங்கே தான் சுற்றிக்கொண்டு இருப்பேன்). விவசாயம், தோட்டம் பற்றி ஆர்வம உள்ள அனைவரும் தவறாமல் காண வேண்டிய ஒரு
கண்காட்சி. இங்கே வந்தால் தான், இந்தியாவில் விவசாய துறை எவ்வளவு வளர்ந்திருக்கிறது
என்று காணலாம். தோட்டத்திற்கு வேண்டிய அத்தனை பொருள்களும் (செடிகள், விதைகள், Tools,
விவரங்கள்) கொட்டிக் கிடக்கும். 2012 அக்ரி இன்டெக்ஸ் பற்றி இந்த
பதிவில் எழுதி இருக்கிறேன்.
இப்போ எலுமிச்சை பற்றி, நாம் தோட்டத்தில்
நிறைய செடிகள் வைத்திருந்தாலும், ஒரு சில செடிகள் நமக்கு ரொம்ப விசேஷமாய்
இருக்கும். அப்படி எங்க வீட்டுத் தோட்டத்தில் இந்த எலுமிச்சை செடிக்கு ஒரு தனி கவனம்
எப்பவுமே இருக்கும். காரணம், நான் வாங்கிய செடிகளிலேயே ரொம்ப விலை கொடுத்து
வாங்கிய ஒரு செடி இது தான். இங்கே, கணபதியில் ஒரு நர்சரி கார்டனில் ரோஜா வாங்க சென்ற போது, ஒரு
எலுமிச்சையும் வாங்கலாம் என்று இதை பார்த்தோம். இது ஏதோ ஆஸ்ரேலியன் எலுமிச்சை
(நம்ம ஊர் கொடி எலுமிச்சை தான்) என்றார்கள். வழக்கம் போல ‘நன்றாக காய்க்கும்’
என்று சான்றிதல். செடியின் விலை ரூ.280 என்றார்கள்.
நான் இதுவரை ஐம்பது ரூபாய்க்கு மேல் செடியே வாங்கியது இல்லை. ரூ.280 என்றால் ரொம்பவே அதிகம். இருந்தாலும், ஒரு ஆசையில் வாங்கி வந்தேன்.
வாங்கி வந்து வைத்த பிறகு, ஒரு வருடம்
தரையை விட்டு மேலே வரவே இல்லை. வைத்த மாதிரி அப்படியே நின்றது. ரூ.280 மொய் தான் போல என்று நினைத்துக் கொண்டேன். கொடுத்த காசுக்காக இந்த
செடிக்கு, உரம் வைப்பதில் இருந்து தண்ணீர் விடுவது வரை, எப்பவுமே தனி கவனம்
இருக்கு. இரண்டாவது வருடம் செடியாய் இருக்கும் போதே ஒன்றிரண்டு பூக்கள்
வந்தது. காய்க்க விடாமல் கிள்ளி போட்டுவிட்டேன். செடி இன்னும் கொஞ்சம் நன்றாக
வளரட்டும் என்று.
எலுமிச்சையில் இலையை சாப்பிடும் ஒரு விதமான
புழு வரும். நாம் பார்த்து நீக்கி விட்டால் போதும். தினமும் லேசாய் கவனித்து
வந்தால் போதும். மற்றபடி வேறு எந்த பிரச்சனையும் இல்லை. வழக்கம் போல மற்ற
செடிகளுக்கு வைக்கும் உரம் (மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு) போதுமானது. வேறு
எந்த தனி கவனமும் தேவை இல்லை.
இந்த வருடம் செடி நிறைய கிளைகள் வந்து
ஓரளவு உயரம் வந்தது. நிறைய பூக்கவும் செய்தது. இந்த வருடத்தில் இருந்து அறுவடை
எடுக்கலாம் என்று விட்டுவிட்டேன். ஒவ்வொரு கிளையிலும் கொத்து கொத்தாக பூத்தது.
திராச்சை கொத்து மாதிரி கிளை நுனியில் ஏழெட்டு காய்கள் கொத்தாய் காய்க்க, மேலே போன
கிளைகள் எல்லாம் தரையை நோக்கி வந்து விட்டன.
இந்தமுறை கிட்டத்தட்ட மொத்தம் 60 காய்கள் காய்த்திருக்கிறது. ஒவ்வொன்றும் பெரிதாய் 50 gm ல் இருந்து 100 gm வரை இருக்கிறது. கொடுத்த விலைக்கு, எதிர்பார்த்ததை விட
எக்கச்சக்கமாய் காய்த்திருக்கிறது. போன வாரம் அறுவடை செய்தாகிவிட்டது. ஒரு நாற்பது
காய் பறித்தோம். மொத்தம் 2 ½ கிலோ இருந்தது.
இன்னும் ஒரு கிலோ போல் செடியில் கிடக்கிறது. பறித்ததில் ஒரு பெரிய கொத்தில் எட்டு காய்கள்
(600 gms இருந்தது). காய்த்திலேயே பெரியதானது. வழக்கம்
போல ஜூஸ் போடவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்திக் கொண்டோம்.