Monday, December 30, 2013

தோட்ட உலா – டிசம்பர் 2013



அடுத்த சீசன் – ஜனவரி To ஜூன்
அடுத்த சீசனுக்கான காய்கறி தோட்டம் தயாராகி கொண்டிருக்கிறது. வழக்கம் போல ஒரு பட்டியல் போட்டு, ஒவ்வொரு காய்கறிக்கும் இட ஒதுக்கீடு போட்டு ஒரு Layout தயார் செய்தேன். பொதுவாய் டிசம்பர், ஜனவரி-ல் நாற்று எடுத்து விட்டால் வளர்ந்து மார்ச் வாக்கில் காய்க்க ஆரம்பிக்கும். ஏப்ரல் – ஜூன் வரை நல்ல  விளைச்சல் கிடைக்கும் (காய்கறியை பொறுத்து). நல்ல வெயில் காலம் என்பதால் விளைச்சல் நன்றாகவே இருக்கும். 2014- க்கான காய்கறி பட்டியல் என்று பார்த்தால்,
   
வழக்கமான காய்கறிகள் - தக்காளி, கத்தரி, மிளகாய், செடி அவரை, வெண்டை, புடலை, பாவற்காய், சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம்  

புதிதாய் சேர்த்திருக்கும் காய்கறிகள் – சுரை , மிதி பாவற்காய், தர்பூசணி (சிறியது), பீன்ஸ், முலாம் பழம் (Musk Melon), கேரளா சிறிய கார மிளகாய், தட்டை பயறு, முள்ளங்கி

இவற்றில் எத்தனை சரியாய் வருகிறதென்று பார்க்கலாம். தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற சிறிய விதை செடிகளை நாற்று எடுத்து நடலாம். அதற்கு Nursery Tray பயன்படுத்தலாம். இல்லை என்றால் தனியாய் ஒரு சிறிய பாத்தி தயார் செய்து நடலாம். ஓரளவுக்கு வளர்ந்த பிறகு எடுத்து தகுந்த இடைவெளி விட்டு பெரிய பாத்திகளில் நடலாம். நான் இந்த முறை தனியாய் ஒரு பாதியில் விதை போட்டு எடுத்து நட்டேன். அவரை, வெண்டை போன்ற பெரிய விதைகளை நேரடியாக தகுந்த இடைவெளி விட்டு விதைக்கலாம். 

பொதுவாய் மண்ணில் நேரடியாய் விதைக்கு போது முளைக்கும் விகிதம் கொஞ்சம் குறைவு. Nursery Tray-ல் வளர்க்கும் போது அந்த பிரச்னை வராது.  





இந்த மாத அறுவடை 

சின்ன நெல்லி – இந்த மரம் வைத்து இரண்டு வருடமாகிறது. இது வரை காய்க்கவில்லை. ‘உனக்கு இன்னும் ஒரு வருடம் தான் டைம். அதுக்குள்ள   காய்க்கலன்னா நீ காலிஎன்று கொஞ்சம் மிரட்டி வைத்திருந்தோம் :-). ஊரில் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க ‘மரம் காய்க்கலன்னா வெளக்குமாற வெச்சி மரத்த அடிக்கணுமாம். அது ரோசம் வந்து காய்ச்சிருமாம்:-). அதே மாதிரி, மரம்/செடி வைக்கும் போது ஒரு நாலணா,எட்டணா அந்த குழில போட்டு அப்புறம் செடிய வைக்கணும் என்பாங்க. அப்போ அது நெறைய காய்க்குமாம். பொழுதடைஞ்ச (இருட்டின) பிறகு மரத்தில் இருந்து ஒரு இலை பறித்தாலும் திட்டு விழும். மரம் தூங்கும் போது தொல்லை பண்ண கூடாது என்பார்கள். இதெல்லாம் அர்த்தமில்லாமல், காமெடியா தெரிந்தாலும், பெரியவங்க எவ்வளவு இயற்கையோடு ஒன்றிய ஒரு வாழ்க்கையை கொண்டிருந்தார்கள் என்று புரியும்.

நம்ம நெல்லியை போன வாரம் சும்மா பார்த்துக் கொண்டிருந்த போது, ஆச்சரியமாய் ஒரே ஒரு காய் கண்ணில் தட்டுபட்டது. இந்த வருடம் இந்த ஒரு காய் தான் காய்திருக்கிறது :-). வீட்டில் எல்லோருக்கும் ஒரே சந்தோசம். அடுத்த வருடம் நிறைய காய்க்கும் என்று நினைக்கிறேன்.         


   
எலுமிச்சை – இந்த மாதம் அறுவடை செய்தாகி விட்டது. ஐந்து கிலோ மொத்தம் கிடைத்து. இன்னும் கொஞ்சம் காய் கிடக்கிறது. இந்த எழுமிச்சையையும் அதன் விளைச்சலையும் பார்க்கும் எல்லோரும் கேட்கும் ஒரு கேள்வி ‘என்ன உரம் போடுகிறீர்கள் என்று. இது வரை இந்த செடிக்கு விசேஷமாய் எந்த உரமுமோ, பூச்சி மருந்தோ அடித்து இல்லை. எப்போதாவது கொஞ்சம் மண்புழு உரம் (ஆறு மாதத்திற்கு ஒரு முறை) வைப்பதோடு சரி. அதனால் இந்த செடி நம்ம தோட்டத்தின் ஒரு தனித்துவமான செடியா போய் விட்டது.   


மிளகாய் – அடுத்த சீசனுக்காக பாத்தி ரெடி பண்ணுவதற்காக மொத்தமாய் பறித்து விட்டேன். இந்த முறை மிளகாய் விளைச்சல் கலக்கலோ கலக்கல். கடைசியாய் பறித்தது மொத்தம் ஒரு கிலோ வந்தது. பறிக்க கொஞ்சம் தாமதமாய் போனதால் கொஞ்சம் பழுத்து விட்டது. 


டெக்னாலஜி

Nursery Pouch
      இங்கே ஒரு நாள் தோட்டக் கலை பயிற்சிக்கு போன போது வாங்கினேன். Nursery Tray-க்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். அரிதான, விலை அதிகமான செடியின் விதையில் இருந்து நாற்று கொண்டு வர இதை பயன்படுத்தலாம். சாதாரணமாக நாற்று எடுக்கவும் பயன்படுத்தலாம். இது Coir Pith (தேங்காய் நார் தூள்) மற்றும் Compost (உரம்) கலந்து Compress செய்யபட்டு ஒரு மாத்திரை வடிவில் கிடைக்கிறது. கொஞ்சம் நீர் விட்டதும் உப்பி பெரிதாய் வரும். அதில் விதையை போட்டு கொஞ்சம் நீர் தெளித்து வந்தால் செடி அட்டகாசமாய் வளர்ந்து வரும். நன்றாய் வளர்ந்ததும் அப்படியே எடுத்து நட வேண்டியது தான். ஒரு வில்லையின் விலை 2 ரூபாய் தான்.  


  

2014 Plans

என்னுடைய நீண்ட கால திட்டம் மாடியில் பெரிதாய் ஒரு தோட்டம் அமைப்பது (Terrace Garden) . இதை 2015 திட்டமாக வைத்திருக்கிறேன். வெறுமனே மாடியில் செடி வைத்தால் சரியாய் வருவதில்லை. முக்கிய காரணம் அதிக வெயில் மற்றும் வேகமாய் காற்று அடிப்பது. அதனால் செடி சீக்கிரம் வறட்சி ஆகி விடுகிறது. வளர்ச்சியும் சரியாய் இல்லை. சாதாரணமாய் கீழே வரும் செடி, மாடியில் வைத்தால் சரியாய் வருவதில்லை. 

Terrace Garden-ன் முதல் கட்டமாய் 2014-ல் சிறியதாய் செய்து பார்க்க திட்டம். முக்கியமாய் Soilless Gardening பற்றி சில முயற்சிகள். Soilless Gardening என்றால் மணல் இல்லாமல் Coir Pith (தேங்காய் நார் தூள்) கொண்டு அமைப்பது. இதில் முக்கியமான நன்மை என்று பார்த்தால், எளிதாக செடி வளரும் (வேர் போக எளிது), வேண்டிய சத்துக்களை எளிதாய் எடுத்து கொள்ளும். கிழங்கு வகைகள் நன்றாக வரும். கீரைகள் நன்றாக வரும். பிரச்னை என்று பார்த்தால், Coir Pith–ல் சத்து எதுவுமே கிடையாது. வெறும் சக்கை தான். மண்ணில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் எதுவும் செடிக்கு கிடைக்காது. அத்தனை சத்துக்களையும் நாம் உரமாகவோ, மற்ற மீடியம் மூலமாகவோ கொடுக்க வேண்டும்.

இங்கே போன மாதம் Horti Tech 2013 ல் Coir Pith block கிடைத்தது. முதல் முயற்சியாக சில கிழங்கு வகை பூ செடிகள் (Gerbera, Dahlia) வைத்து விட்டிருக்கிறேன். சில செடிகள் முளைத்து விட்டன. நீண்ட கால செடிகளுக்கு Coir Pith based garden எப்படி வருகின்றது என்பதை இந்த வருடம் கற்று கொள்ள வேண்டும். பிறகு பெரிய அளவில் Terrace Garden அமைக்க ஆரம்பிக்கலாம். 

அடுத்த பதிவில் இதை பற்றி விவரமாய் எழுதுகிறேன்.


Monday, December 2, 2013

AGRI & HORTI TECH 2013 in Kovai




கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். AGRI INTEX பற்றி முன்பு கூறி இருக்கிறேன். அதே போல இந்த வார இறுதியில் இங்கு கோவையில் VIJAYA FAIR GROUND-ல் விவசாய கண்காட்சி ஓன்று நடைபெற இருக்கிறது. விவசாய மற்றும் தோட்டக்கலை சம்பந்தமான ஒரு கண்காட்சி. இந்த வாரம் 5,6,7 மற்றும் 8-ம் தேதிகளில். முடிந்தால் போய் பாருங்கள். 




Wednesday, November 27, 2013

தோட்ட உலா – நவம்பர் 2013



இந்த மாத அறுவடை

மா. மழை காலத்தில் (மழையை தான் காணோம்) மாம்பழமா என்று கேட்க வேண்டாம். எங்க வீட்டு மாமரம் வருடம் முழுவதும் காய்க்கிறது. மே மாதம் ஒரு சீசன், இப்போ நவம்பரில் அடுத்த சீசன் முடிந்து மறுபடி பூத்திருக்கிறது. இந்த மாமரத்தை பற்றி, Tailor Bird கூடு கட்டியதை பற்றிய பதிவில் சொல்லி இருந்தேன். வீடு வாங்கும் போது ஏற்கனவே இருந்த மரம். ரொம்ப சுவற்றை ஒட்டி வைத்து விட்டார்கள். சீசன் தவறாமல் காய்கிறது. ஆனால் காய்ப்பதில் முக்கால்வாசி எங்களுக்கு கிடைப்பதில்லை ( எல்லாம் வெளியே இருந்தே பறித்து போய் விடுவார்கள்).

இந்த மாம்பழம் வெரைட்டி என்னவென்று தெரியவில்லை. பொதுவாய் கிடைக்கும் வகை இல்லை. சுவையும் ரொம்பவே சுமார் தான் (இனிப்பும் இல்லை, புளிப்பும் இல்லை). ரொம்ப சுவற்றின் ஓரமாய் வேறு இருப்பதால் மரத்தை எடுத்து விட்டு வேறு மரம் ஓன்று வைக்கலாம் என்று ஒரு திட்டம் இருக்கிறது. போன முறை  Tailor Bird வந்து கூடு கட்டியதால் இந்த திட்டம் தாமதமாகி போனது. பட்டர் ப்ருட் (Avocado) மரம் ஓன்று முயற்சி செய்யலாம் என்று ஒரு திட்டம்.  









பப்பாளி. புதிய மரத்தில் இருந்து முதல் பழம். எந்த புதிய செடி/மரம் வளர்த்தாலும் முதல் விளைச்சல் ரொம்ப விசேஷமானது. இந்த மரம் வீட்டில் இருக்கிற பெரிய மரத்தின் விதையில் இருந்து உருவாக்கியதால் சுவை அதே போல் இருக்குமா என்று ஒரு ஆர்வம் இருந்தது. பழம் வேறு சம்மந்தமே இல்லாமல் உருண்டையாய் வந்ததால் ஒரு குழப்பம். முதல் அறுவடை. சுவை கொஞ்சம் கூட குறைவில்லாமல் அதே சுவை (கொஞ்சம் எக்ஸ்ட்ரா சர்க்கரை போட்டது மாதிரி). இந்த பழங்கள் கொஞ்சம் சிறிதாய் இருந்தாலும், இப்போது வரும் காய்கள் ஒரு கிலோ அளவில் வந்து கொண்டிருக்கின்றன. இது மூன்றாவது பப்பாளி மரம். இன்னும் ஒரு மரம் (நான்காவது) இப்போது தான் பிஞ்சு பிடித்திருக்கிறது.  


எலுமிச்சை. இந்த மாதம் அறுவடைக்கு தயாராக இருக்கிறது. ஒரு கொத்தில் இருந்து ஐந்து காய்கள் பறித்திருப்போம். வழக்கம் போல ஒவ்வொரு பழமும் 150 gms  எடை இருக்கிறது. முக்கால்வாசி பேர் இதை பார்த்தவுடன் கொய்யா பழம் என்று தான் சொல்கிறார்கள் . மூன்று கிலோ அளவுக்கு காய்கள் கிடக்கிறது.


 
வெள்ளை கத்தரி. போன மாத பதிவில் விடுபட்டு போன கத்தரி. இந்த வெள்ளை கத்தரி கொண்டு வர கிட்டதட்ட ஒரு வருடம் முயற்சித்து, இப்போது தோட்டத்தில் எளிதாய் வளர்கிறது. ஹைப்ரிட் வகை (வயலட் நிறம்) கத்தரி போல காய்த்து கொட்டுவது இல்லை. ஆனால் நீண்ட காலம் பலன் கொடுக்கிறது.  




புதினா. தொட்டியில் வளர்க்க எளிதான ஒரு செடி. தரையில் வைத்து விட்டால் இன்னும் செழிப்பாக வளர்கிறது. என் தோட்டத்தில் எப்போதோ தரையில் வைத்து விட்ட சில குச்சிகள், வேர்விட்டு எக்கச்சக்கமாய் வளர்த்து கிடக்கிறது. வேண்டும் போது பறித்துக் கொள்ள வேண்டியது தான். 


இந்த முறை தக்காளி மிளகாய் விளைச்சல் அமோகம். கடையில் தக்காளி வாங்கி மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கும். இந்த வாரத்தோடு தக்காளி விளைச்சல் முடிகிறது. அடுத்த நாற்று தயாராக இருக்கிறது. மிளகாய் இன்னும் ஒரு மாதம் விளைச்சல் கிடைக்கும் போல.


செண்டு. நான் போன மாத தோட்ட உலாவில் கூறியது போல இந்த மாதம் பூத்து குலுங்க ஆரம்பித்து விட்டது. நினைத்தது மாதிரி ஆரஞ்சு அடுக்கு செண்டு. அழகு :-)


இந்த மாத சீசன்
கொய்யாவும் சீத்தாவும் காய்த்திருக்கின்றன. சீத்தா பொதுவாய் ஏப்ரல், மே மாதங்களில் தான் சீசன். இந்த வருடம் போனஸ் விளைச்சலாய் நவம்பரிலும் காய்த்திருக்கிறது. ஏப்ரல் சீசன் போல அதிக காய் இல்லை என்றாலும் ஒரு 40 காய் பிடித்திருக்கிறது. 


புதுவரவு
வெற்றிலை. எதிர் வீட்டில் இருந்து ஒரு அம்மா கேரளா போன போது நம்ம தோட்டம் நியாபகம் வர இந்த வெற்றிலை கொடியை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். வெற்றிலை கொடி ரொம்ப நாளாய் வைக்கலாம் என்று நினைத்தது. இப்போது தானாகவே வந்திருக்கிறது. தோட்டத்தில் இருந்து பப்பாளி பழம் மாதிரி அக்கம் பக்கம் சப்ளை ஆகும் போது இப்படி சில பலன் கிடைக்கும். ஒரு மிளகு கொடியும் அதில் இருந்தது. ஆனால் மிளகு கொடி ரொம்ப காய்ந்து விட்டது. வருவது கடினம் தான்.

இந்த காய்கறி சீசன் தோட்டத்தில் இந்த மாதத்தோடு முடிகிறது. அடுத்த சீசனை தொடங்கி விட விதை எல்லாம் போட்டு நாற்றுக்கள் தயாராக நிற்கிறது. விரிவாக அடுத்த பதிவில் எழுகிறேன்.

Next Season Starts....