Friday, August 29, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – பிடி கரனை


‘வெற்றி வெற்றி வெற்றி என்று ‘ஆயிரத்தில் ஒருவன் முதல் காட்சியில் எம்.ஜி.ஆர் சொல்வாரே அப்படி தான் இருந்தது இந்த அறுவடையின் வெற்றியும். ஒரு ஐடியாவும் இல்லாமல் கிச்சனில் முளைத்து கிடந்த இரண்டு கிழங்குகளை வைத்து ஒரு கிலோவுக்கும் மேலே அறுவடை எடுத்தால் அப்படித் தானே இருக்கும் J. அதுவும் பூமிக்கு அடியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சரியான பருவத்தில் அறுவடை எடுப்பது வெற்றி தானே.

பிடி கரனை முதல் பாகம் இங்கே. விதைத்த மூன்று கிழங்கில் ஒன்றை மட்டும் ஒரு Grow Bag-ல் வைத்து விட்டு, இரண்டு நாற்றுகளை தரையில் நட்டு விட்டேன். Grow Bag-ல் வைத்ததற்கு காரணம், அப்போ அப்போ லேசா தோண்டி கிழங்கு வருதா, நிலவரம் எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் என்று தான். தவிர, எதாவது ஒரு மீடியாவில் ஒரு செடியாவது உருப்படியாய் வரும் என்று ஒரு ஆசை தான்.

நான் முன்பு எழுதிய மாதிரி, கிழங்கு வகைகளில் பெரும் பிரச்னை, பூமிக்கு அடியில் நடக்கும் ஒன்றையும் பார்க்க முடியாது. நாமும் ஆறு மாதம் தவறாமல் நீருற்றி, கடைசியில் வெறும் வேர் கூட இருக்கலாம். கிழங்கு வகை செடிகளை வைக்கும் போது முடிந்த அளவுக்கு நன்றாக தோண்டி மண்ணை நன்றாக தளர்த்தி பிறகு நடுவது, கிழங்கு வர எளிதாக இருக்கும் (நன்றாக இடம் இருந்தால் Raised Bed மாதிரி அமைத்து வைத்தால் நன்றாக வரும்)

பிடி கரனை செடியை வைத்த பிறகு உடனடி ஆராய்ச்சி ‘எப்போது அறுவடை செய்ய வேண்டும்? ‘அறுவடைக்கு உண்டான அறிகுறிகள் என்ன? என்பது தான். இணையத்தில் தேடி பார்த்தபோது நிறைய Elephant FootYam (சேனை கிழங்கு – வாழை கிழங்கு மாதிரி இருக்குமே) விவரங்கள் தான் பார்க்க முடிந்தது. பிடி கரனையும் கிட்டதட்ட அதே வகை தான். அதனால் அந்த விவரங்களையே எடுத்துக் கொண்டேன். நடவு செய்து கிட்டதட்ட ஐந்து மாதங்களில் கிழங்கு தயாராக இருக்கும். இலைகள் பழுப்பு நிறமாகி லேசாக காய தொடங்குவது கிழங்கு அறுவடைக்கு தயார் என்பதன் ஒரு அடையாளம்.

இந்த செடிகளில் முதலில் வரும் இலைக்கு பிறகு, தளிர் என்பதோ, புது இலை என்பதோ கிடையாது. செடி வந்து ஒரு மாதத்தில் பக்க கிளை ஓன்று வந்தது. அதுவும் கிழங்கில் இருந்து மொட்டு மாதிரியே வந்த குடை மாதிரி விரிந்து கொண்டது. அடுத்த ஒரு மாதத்தில் மூன்றாவதாக ஒரு பக்க கிளையும் வந்தது. என்னடா இது, இடமே இல்லமால் பக்க கிளை வந்துகிட்டே இருக்கே ஒரு வேலை கிழங்கு வச்சி அதுவும் முளைக்க ஆரம்பித்து விட்டதோ என்று ஒரு சந்தேகம். கடைசியில் மூன்று கிளைகளோடு நின்று விட்டது.

தரையில் வைத்த செடி இரண்டும் நல்ல செழிப்பாக வந்தது. Grow Bag-ல் வாய்த்த செடி சுமாராக தான் வந்தது. சரியான வெயில் இல்லாதது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். தவிர அவ்வப்போது லேசாய் coir pith-ஐ லேசாய் தோண்டி ஏதும் கிழங்கு வைக்கிறதா என்று அந்த செடியை டார்ச்சர் செய்து கொண்டிருந்தேன்.

பெப்ரவரி 28-ல் முளைக்க போட்ட கிழங்கு, ஒரு மாதம் கழித்து ஏப்ரல் 3-ல் முளைத்தது. ஏப்ரலை கணக்கில் எடுத்தால் ஆகஸ்டோடு ஐந்து மாதம் முடிந்திருந்தது. முதலில் வந்த கிளை லேசாய் பழுப்பு நிறத்தில் மாறி காய ஆரம்பித்திருந்தது. முடிவாக coir pith-ல் வைத்த செடியை தோண்டி பார்த்தபோது கிழங்கு ஒன்றும் சரியாக வரவில்லை. எல்லாமே ஒரு நெல்லிக்காய் அளவு கூட இல்லை. அதை பார்த்த போது இன்னும் ஐந்து மாதம் ஆகும் என்று தோன்றியது. எங்கேயோ தப்பு நடந்திருக்கு (coir pith-ல் போதுமான சத்து இருக்காமல் போய் இருக்கலாம், சூரிய வெளிச்சமும் அந்த செடிக்கு குறைவு) தரையில் இருப்பதை தோண்டி பார்த்திட வேண்டியது தான் என்று லேசாய் மேற்பரப்பில் கிளறி பார்த்ததில் கிழங்கு நன்றாகவே தெரிந்தது.

சுற்றி நன்றாக தோண்டி பிறகு செடி மொத்தமாய் எடுத்து பார்த்ததில் ஒவ்வொரு செடியிலும் ஐந்து-ஆறு கிழங்குகள். நல்ல திரட்சியாய். இரண்டாவது செடியிலும் நல்லதாய் அதே மாதிரி கிழங்குகள்.

இந்த செடிகளுக்கு தனியாக உரம் ஏதும் வைக்கவில்லை. பூச்சி தாக்குதல் ஏதும் இல்லை. சரியான நேரத்தில் அறுவடை செய்து, வெறும் ஐம்பது கிராம் அளவில் இரண்டு கிழங்குகளை வைத்து ஒரு கிலோவுக்கு கிழங்கு எடுத்திருப்பது வெற்றி தானே.

கொஞ்சம் காலி இடம் இருந்தால் தாராளமாக இரண்டு கிழங்குகளை நட்டி விடுங்கள். மாதா மாதம் இரண்டு/மூன்று செடி வைத்து விட்டால் வருடம் முழுவதும் கிழங்கு கிடைக்கும் படி பார்த்துக் கொள்ளலாம் (இடம் தான் வேண்டும்). கிழங்கு முளைத்து ஐந்து மாதத்தில் அறுவடை என்று கணக்கில் வைத்து கொள்ளலாம்.

கிழங்கு அறுவடை செய்த உடனேயே குழம்பு வைக்க பயனபடுதாமல் ஒரு வாரம் உலர விட்டு பயன்படுத்தினால் அதில் இருக்கும் காரல் தன்மை குறையும் என்று கூறினார்கள். அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.




















    
       






Friday, August 15, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – சிவப்பு உருண்டை முள்ளங்கி (Red Globe Radish)

ஜூன் சீசனில் இருந்து முதல் ‘என் வீட்டுத் தோட்டத்தில் வருகிறது. முதலாய் கொஞ்சம் வித்தியாசமாக Red Globe Radish.

முள்ளங்கி பற்றி ஏற்கனவே விரிவாக முன்பு ‘என் வீட்டுத் தோட்டத்தில் வரிசையில் எழுதி இருந்தேன். முட்டைகோஸ், காலி ஃப்ளவர் விதை வாங்க Biocarve.com –ல் பார்த்த போது இந்த Red Globe Radish-ம் கண்ணில் சிக்கியது. பார்க்க அழகாய் இருக்கிறதே, வழக்கமான முள்ளங்கிக்கு இது கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும் என்று இதையும் சேர்த்து ஆர்டர் செய்தேன்.

நீண்ட Growbag-ல் (1 by 3 feet ) பாதிக்கு இந்த சிவப்பு முள்ளங்கியும், பாதிக்கு வழக்கமான வெள்ளை முள்ளங்கியும் போட்டு விட்டேன். இந்த முள்ளங்கியும் ரொம்பவே எளிதான செடியாகவே இருக்கிறது. எந்த பிரச்னையும் இல்லாமல் வளர்ந்தது. செடி வெள்ளை முள்ளங்கி மாதிரி தான் இருக்கிறது. பெரிதாய் ஒன்றும் வித்தியாசம் இல்லை.


Biocarve விதைகளின் முளைப்பு திறன் 50% தான் இருந்தது. மற்றபடி செடிகளின் வளர்ச்சி நன்றாக இருந்தது. வழக்கம் போல Coir pith, vermin compost, செம்மண் கலவை தான் Growing media. பூச்சி தாக்குதல் ஒன்றும் இல்லை. விதைத்து 45 நாளில் அறுவடைக்கு வந்துவிடும். ரொம்ப நாள் விட்டுவிட்டால் முற்றி விடும். விதைத்து 45 - 50 நாட்களுக்கும் பார்த்து பறித்து விட வேண்டும்.












Friday, August 1, 2014

2014 சீசன்-2 (ஜூன்) – பகுதி-4 (தோட்டம் – தற்போதைய நிலைமை)

பதிவிற்கு போவதற்கு முன் ஒரு தகவல். நமது ப்ளாக் நண்பர் சேர்மராஜ் பகிர்ந்து கொண்டது. நன்றி சேர்மராஜ்

"சென்னை அண்ணா நகரில் இருக்குற தமிழ்நாடு விவசாய பல்கலை கழகத்தின் சென்னை தகவல் மற்றும் பயிற்சி மையம், வர்ற ஆகஸ்ட் 14ம் தேதி (14.8.14) "சமையலறை தோட்டம்" (Kitchen Gardening) அப்படிங்கற தலைப்புல ஒருநாள் பயிற்சி நடத்துது. நேரம் 9.30 am 5.00 pm.

பயிற்சி கட்டணம் 400 ரூபாய். மதிய உணவு, தேநீர், பயிற்சி கையேடு ஆகியவையும், பயிற்சி நிறைவு சான்றிதழும் கொடுக்குறாங்க.

தொடர்பு எண்: 044-26263484

மண்புழு உரமும் அங்கே கிடைக்கிறது. கிலோ 15 ரூபா.' 

பயிற்சி வகுப்புக்களை நான் பொதுவாய் சிபாரிசு செய்வதில்லை. அதுவும் நானூறு ஐநூறு செலுத்தி போவது. நானே போய் நொந்திருக்கிறேன். TNAU -ல் என்பதால் கொஞ்சம் ஒருபடியாய் இருக்கலாம். விருப்பம் இருந்தால் போய் பாருங்கள்.  

________________________________________________________________________

இந்த சீசனின் தற்போதைய நிலவரத்தை, செடிகளின் நிலைமையை பார்க்கலாம். மே கடைசியில் ஆரம்பித்த செடிகளின் இப்போதைய வளர்ச்சியை பார்க்கலாம்.  

இந்த சீசனின் மிக பெரிய பிரச்னை காற்று தான். பொதுவாய் ஆடி மாதம் தான் காற்று பேயாட்டம் ஆடும். இப்போதெல்லாம் ஜூன் தொடக்கத்தில் இருந்தே (ஆனி மாதம்) அடிக்கும் காற்று ஆளையே தூக்கி போய்விடும் போல. இந்த வருடம் அநியாயத்திற்கு காற்று அடிக்கிறது.24 மணி நேரமும் ஓய்வில்லாமல் அடிக்கிறது. செடி என்ன தான் பண்ணும். மாடியில் ShadeNet வைத்து அமைத்த அமைப்பை எல்லாம் காற்று கம்போடு பிடுங்கி போட்டுவிட்டது. இவ்வளவுக்கும் நன்றாக சிமெண்ட் எல்லாம் போட்டு உறுதியாக தான் போட்டேன். சவுக்கு கம்புகளை உடைத்தே போட்டுவிட்டது. 

நிறைய அவரை செடிகளை அசைத்து வேரோடு பிடுங்கியே போட்டுவிட்டது. சில செடி, கொடிகளின் தளிரை அப்படியே ஒடித்து போட்டுவிட்டது. இவ்வளது சேதாரத்தை எதிர்பார்க்கவில்லை. அடுத்த சீசனை கொஞ்சம் தாமதமாய் ஆரம்பிக்க யோசித்து கொண்டிருக்கிறேன் (ஆடியில் விதைக்கலாம் என்று). ஆனால் ஜூன்-ஜூலை மாதம் வேஸ்டா போய் விடும். இப்போதே நல்ல அறுவடை கிடைக்க ஆரம்பித்து விட்டது. அது ஓன்று தான் யோசனை.

காற்று பிரச்னை இருந்தாலும் இந்த சீசன் எதிர்பார்த்தது போல ரொம்ப நன்றாகவே வந்திருக்கிறது.

வெண்டை, அவரை, கொத்தவரை

     காற்றில் ஒன்றிரண்டு செடிகள் போனாலும், செடிகள் எல்லாமே நன்றாகவே வந்திருந்தது. இந்த வருடத்தில் ஒரு சிறப்பு என்னன்னா, இந்த மூன்றுமே நாட்டு செடிகளாக கொண்டு வந்தது. அடுத்த பருவத்திற்கு விதைக்கும் சில காய்களை விட்டு வைத்திருக்கிறேன். நாட்டு அவரை காய்  வழக்கமாய் இங்கே TNAU-ல் வரும் அவரையை விட கொஞ்சம் சின்னதாய், கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கிறது. அதனால் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாய் பறித்தால் தான் கூட்டுக்கோ, குழம்புக்கோ சேர்க்கிறது. அவரை ருசி உண்மையிலேயே வழக்கமாக இருப்பதை விட நன்றாக இருக்கிறது. நன்றாக பூத்திருந்தது, காற்றில் நிறைய பூ உதிர்ந்து விட்டது. 

    

தக்காளி, கத்தரி, மிளகாய்

     தக்காளி தான் ரொம்பவே காற்றில் மாட்டிக் கொண்டது. அதனால் இந்த முறை பெரிதாய் விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. இதுவும் நாட்டு செடி தான். ஓரளவுக்கு காய்திருக்கிறது. நிறைய பூ உதிர்ந்து விட்டது. ஆடி முடிவதற்குள் ஒரு வழியாகி விடும் போல (சரியாக காற்றடிக்கும் இடத்தில் மாட்டிக் கொண்டது).

                கத்தரி, மிளகாய் நன்றாக வந்திருக்கிறது. கத்தரியில் வெள்ளை மற்றும் ஊதா இரண்டுமே காய்க்க ஆரம்பித்து விட்டது.




கோஸ், காலி ஃப்ளவர், Broccoli, முள்ளங்கி, கேரட், பீட்ரூட்   

     நம்ம English Garden எதிர்பார்த்ததை விட ரொம்பவே நன்றாக வந்து கொண்டிருக்கிறது. கோஸ், காலி ஃப்ளவர், Broccoli மூன்றுமே செழிப்பாக வளர்ந்திருக்கிறது. மாடிக்கு கொஞ்சம் கீழ் தளத்தில் அமைத்ததனால் காற்றில் இருந்து தப்பித்துக் கொண்டது. மாடி சுவர் ஒரு அரண் போல அமைந்து விட்டது.

பூக்கும் போது பூச்சி தாக்குதல் ஏதும் இல்லை என்றால் நல்ல அறுவடை கிடக்கும். கொஞ்சம் கவனமாகவே பார்த்து கொள்கிறேன். முள்ளங்கி அறுவடை எடுத்தாச்சு. பீட்ரூட்-ம் கேரட்டும் இப்போது தான் வளர்ந்து கொண்டிருக்கிறது.



கொடிகள்

     மாடியில் அமைத்த கொடி காற்றில் போய் விட்டது. அதற்காக ஐநூறு ரூபாய் செலவழித்து ShadeNet எல்லாம் அமைத்து இந்த முறை எப்படியும் மாடியில் கொடிகளை கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். கடைசியில் காற்று எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போய்விட்டது. புடலையும் பாகலும் நன்றாக அப்போது தான் மொட்டு விட ஆரம்பித்தது. கடைசியில் மிஞ்சியது ஒரு புடலை காயும், சில பாகற்காயும் தான்.     

     முன்னால் அமைத்த கொடியில் பீர்க்கையும், பாகற்காயும் அழகாய் படர்ந்து இருக்கிறது. பாகல் காய்க்க ஆரம்பித்து விட்டது. பீர்க்கை இப்போது தான் மொட்டு வைத்திருக்கிறது.

     அடுத்த கொடியில் நாட்டு புடலை (குட்டை மற்றும் நெட்டை) இப்போது தான் பந்தலை தொடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. கொஞ்சம் செழிப்பு குறைவாக தான் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் கவனம் தேவை படும் என்று நினைக்கிறேன்.

கீரை தோட்டம்

                பொன்னாங்கண்ணி, பாலக்கீரை, புளிச்சகீரை, அரைக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை, கொத்தமல்லி என்று அத்தனையையும் வைத்து அமைத்து. அருமையாய் வந்துகொண்டிருக்கிறது. கிட்டதட்ட எல்லா கீரைகளிலும் அறுவடை எடுத்தாச்சு. கீரை தோட்டத்தை பற்றி விவரமாய் ஒரு பதிவில் எழுதுகிறேன்.  



(தொடரும்)