Sunday, March 23, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – முள்ளங்கி

நமது மாடி தோட்டத்தில் இருந்து முதல் அறுவடை. சிறிய அளவிவில் ஒரு சோதனை முயற்சியாக சில காய்கறிகளை மட்டும் வைத்து தொடங்கி இருந்தேன். இதில் கீரைகள் ரொம்பவே எளிதாகவும், வேகமாகவும் வளர்கிறது. பாலக்கீரை, பருப்புக்கீரை, அரைக்கீரை மூன்றையும் கீரைக்கான பெரிய பைகளில் போட்டிருந்தேன். ரொம்ப செழிப்பாக வந்திருக்கிறது.

அடுத்து முள்ளங்கி. நான் இதுவரை கிழங்கு வகைகளில் உருளை, கேரட், பீட்ரூட் முயற்சி செய்திருக்கிறேன். இதில் பீட்ரூட் மட்டும் சொதப்பியது. பொதுவாய் கிழங்கு வகைகளை தரையில் விதைக்கும் போது மண்ணின் தன்மை முக்கிய பங்கு வகிக்கிறது. மண் இறுகி இருந்தால் சரியாக வருவதில்லை. நாம் மாடிதோட்டத்தில் Coir Pith Based media பயன்படுத்தும் போது இது போன்ற கிழங்கு வளர ரொம்ப எளிதாய் இருக்கிறது. மண் இறுகிப்போகும் பிரச்னை இருப்பதில்லை.

முள்ளங்கியை நான் இப்போது தான் முதன்முறையாக முயற்சி செய்கிறேன். முள்ளங்கி விதைகள் எளிதாகவே கிடைக்கிறது. (இப்போது கிடைத்த Do it Yourself Kit-ல் கூட ஒரு பெரிய பாக்கெட் இருக்கிறது). முள்ளங்கியை நேரடியாகவே நடலாம். ஒவ்வொரு செடிக்கும் அரை அடி இடைவெளி இருந்தால் போதும். நான் முதலில் சின்னதாய் ஒரு பையிலும் (மொத்தம் எட்டு செடிகள்), பிறகு ஒரு நீண்ட பையிலும் (மொத்தம் 24 செடிகள்) போட்டு விட்டேன்.

நீங்கள் படத்தில் பார்க்கும் நீண்ட பை, 3 அடிக்கு 1 ஒரு அடி அளவுள்ளது. இது சாதாரணமாக சப்போட் இல்லாமல் வைக்க முடியாது. இங்கே அதனால் நான் சின்னதாய் ஒரு டிசைன் போட்டு, இங்கே நமது நண்பர் ஒருவரின் சிறிய தொழிற்சாலையிலேயே கொடுத்து செய்து வாங்கி கொண்டேன். இந்த Frame Structure வைத்து நாம் இன்னும் பெரிய பைகள் கூட (பத்து அடி நீளம் கூட) அமைக்க முடியும். இந்த Frame-களை சில கம்பெனிகள் பையோடு சேர்த்தே விற்கின்றன. ஆனால் விலை மிக அதிகமாக இருக்கிறது. 



 முள்ளங்கியின் முளைப்பு திறன் நன்றாகவே இருக்கிறது. கிட்டதட்ட எல்லாமே முளைத்து வளர்ந்தது. முள்ளங்கியின் ஒரு சிறப்பு, முளைத்து இரண்டு மாதத்திலேயே நமக்கு அறுவடைக்கு வந்துவிடுகிறது. கேரட் மாதிரி மாத கணக்கில் காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. செடிகள் முதலில் இருந்தே செழிப்பாக வளர்ந்தது. கொஞ்ச நாளில் கிழங்கு உருவாவது மேலேயே தெரிய ஆரம்பித்தது. முள்ளங்கி கிழங்கு கொஞ்சம் வெளியே தெரியும் படியே வருவதால் நமக்கு வசதி. கிழங்கு அறுவடைக்கு தயாரா என்பதை நாம் கண்ணால் பார்த்தே, வேண்டும் போது பிடுங்கி கொள்ளலாம்.       

ஒரே ஒரு முறை சின்ன பையில் இருந்த செடியில் பூச்சி தாக்குதல் இருந்தது. ஆரஞ்சு நிறத்தில் கருப்பாய் புள்ளி போட்ட சின்னதாய் வண்டுக் கூட்டம். எல்லா இலைகளையும் எக்கச்சக்க முட்டைகளை போட்டு இருந்தன. இப்போது வேப்பிலை சாறு, இஞ்ஜி சாறு எல்லாம் தெளித்து பார்த்து அலுத்து விட்டது. (இதில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய இருக்கிறது). ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்து மொத்தமாய் எல்லா செடியின் இலைகளையும் கையால் கழுவி விட்டுவிட்டேன். பிரச்னை முடிந்தது. அதன் பிறகு வரவே இல்லை. ( இந்த அவரை செடியில் பூச்சிகளுடன் போராட்டம் இந்த வருடம் அதிகமாகவே இருக்கிறது. எங்கே இருந்து தான் செடியை கண்டுபிடிக்கின்றன என்று தெரியவில்லை. நானும் குப்பையை அள்ளி போட்டு பார்த்தேன், இஞ்ஜி சாறு தெளித்து பார்த்தேன், சோப்பு நீர் தெளித்து பார்த்தேன். ஒன்றும் வேலைக்காகவில்லை. நண்பர்கள் விவரம் தெரிந்தால் உதவுங்கள்).     

முள்ளங்கி கிட்டதட்ட கேரட் வகை போல இருந்தாலும், செடி இரண்டுமே வேறு வேறாய் தான் இருக்கிறது. முள்ளங்கியை ரொம்ப எளிதாய் வரும் காய்கறிகளில் நிச்சயம் குறிப்பிடலாம். இப்போது எங்கள் வீட்டு சமையலில் முள்ளங்கி சாம்பார் நிரந்தமாய் விட்டது. அறுபது நாளிலேயே விளைச்சல் வருவதால், கொஞ்சம் திட்டமிட்டு வளர்த்தால் வருடம் முழுவதும் வீட்டுக்கு தேவையான முள்ளங்கியை எளிதாக எடுக்கலாம்.














Tuesday, March 4, 2014

மாடித் தோட்டம் – DO IT YOURSELF KIT - ஒரு பார்வை



நான் ஜனவரியில் பதிவு செய்த அரசின் ‘DO IT YOURSELF KITஐ போன வாரம் முதல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இங்கே கோவையில் நான் போன் செய்து கேட்ட போது வீட்டிற்க்கே வந்து கொடுப்பதாக கூறினார்கள். கூறிய படி, சனிக்கிழமை காலையில் ஒரு வேனில் வந்து எல்லா பொருட்களையும் கொடுத்து, பில் போட்டு காசு வாங்கி போய் விட்டார்கள். விலை – Rs. 1325.

அதில் இருபது பாலிதீன் GROW BAGS. ஒவ்வொன்றிக்கு தேவையான Coir Pith Block, அதற்குள்ளேயே pack செய்து வைத்திருக்கிறார்கள். GROW BAG அளவு ஒரு அடிக்கு ஒரு அடி (கொஞ்சம் அதிகம்) என்ற அளவில் பெரிதாகவே இருக்கிறது. பையின் தரமும் நன்றாகவே தெரிகிறது. அவர்கள் கொடுத்திருக்கும் செய்முறை படி அதை அப்படியே நீரில் நனைத்து பயன்படுத்த கூறி இருக்கிறார்கள். நீரில் அலசி பயன்படுத்த வேண்டுமென்று ஒன்றும் கூறவில்லை. கொடுத்திருக்கும் Bio Fertilizer  மற்றும் Fungicide  கலந்து விட்டால் ஒரு வாரத்தில் Coir Pith மக்கி போய் விடும் என்றும், அதன் பிறகு நாற்று நட கூறி இருக்கிறார்கள். ஆனால் பட்டியலில் இருந்க்கும் சூடோமொனஸ் இன்னும் வரவில்லை. ஒரு வாரத்தில் மறுபடி வந்து தருவதாக கூறி சென்றிருக்கிறார்கள்.




விதைகள் என்று பார்த்தால், ஒவ்வொரு பாக்கெட்டிலும் அளவுக்கு அதிகமாகவே விதைகள்  இருக்கிறது. கொத்தமல்லி, பாலக்கீரை, சிறுகீரை எல்லாம் 100 Gms அளவில் பெரிதாகவே இருக்கிறது. தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய் எல்லாம் US Agriseeds என்றொரு நிறுவனத்தில் விதைகளாய் இருக்கிறது. எல்லாமும் இந்த பெப்ருவரியில் பேக் செய்யபட்டதாக இருக்கிறது. இன்னும் ஒரு வருடம் பயன்படுத்தலாம். ஆனால்  எல்லாமே Hybrid ரகங்கள் (F1 Hybrid) தான்.  இதை தவிர, முள்ளங்கி, கொத்தவரை, பீன்ஸ் விதைகளும் இருக்கிறது. 

தோட்டதிற்க்கான உபகரணங்கள் என்று பார்த்தல், ஒரு ஐந்து லிட்டர் பூ வாளி, ஒரு கை தெளிப்பான் (Hand Sprayer) ,  மண் அள்ள ஒரு Shovel-ம் ஒரு Fork Type Shovel ம், 50 Holes Nursery Tray-ம் இருக்கிறது. பூ வாளி மற்றும் இதர பொருட்கள் பிளாஸ்டிக் தரத்தை பார்த்தால் உறுதியாக நன்றாகவே இருக்கிறது. இவை எல்லாமே என்னிடம் நிறைய இருப்பதால் இவைகள் பயன்பட போவதில்லை. யாருக்காவது கொடுக்க வேண்டியது தான்.


உரம் மற்றும் பூச்சி கொல்லி பொருட்களில் எக்கச்சக்க ரசாயன பொருட்கள். NPK 19:19:19 உரம் (Nitrogen (N), Phosphorus (P), and Potassium (K) Mix) ஒரு கிலோ பாக்கெட் இரண்டும் (Water Soluble Fertilizer., trichoderma viride Bio fungicide (Coir Pith-ஐ மக்க வைக்க), NeeMarin 300 என்றொரு பூச்சிக் கொல்லி மருந்தும் இருக்கிறது. இவைகளே விலை ஐநூறு வரும் போல. என் தோட்டத்தில் இதுவரை மருந்துக்கு கூட எந்த ரசாயனமும் உரமாகவோ, பூச்சி கொல்லியாகவோ பயன்படுத்தியது கிடையாது. எனக்கும் கடந்த மூன்று வருடமாக செடிகள் எல்லாம் நன்றாக தான் வருகின்றன. நன்றாக தான் காய்க்கின்றன. வெறும் Coir Pith, மண்புழு உரம், கொஞ்சம் மணல் கலந்த கலவையில் என் மாடி தோட்டம் கலக்கலாய் தான் வந்து கொண்டிருக்கிறது. வீட்டுதோட்டத்திற்கு இந்த ரசாயனங்கள் எதற்கு என்று தெரியவில்லை. இது குப்பையில் தான் போகும் என்று நினைக்கிறேன்.
இணையத்தில் PDF வடிவில் கிடைக்கும் விளக்க புத்தகத்தை ஒரு புத்தகமாக கொடுத்திருக்கிறார்கள். 


இதை தவிர முக்கியமான 4 by 4 meter Polythene Sheet இன்னும் கொடுக்கவில்லை. அதை தவிர அசோஸ்பயிரில்லம், சூடோமொனாஸ், பாஸ்போ-பாக்டீரியா என்று மூன்று பொருட்களும் கொடுக்கவில்லை. இன்னும் வரவில்லை, இன்னும் ஒரு வாரத்தில் வந்தவுடன் வீட்டிற்க்கே வந்து தருவதாக கூறி சென்றிருக்கிறார்கள். 

மொத்தத்தில்.கொடுத்திருக்கும் பொருட்களின் மதிப்பு நிச்சமாய் 1325 ரூபாய்க்கு அதிகம் தான். பொருட்களின் தரமும் நன்றாகவே இருக்கிறது. இதே பொருளை, வெறும் ஒரு GROW BAG-ல் Coir Pith-ல் கொஞ்சம் உரத்தை கலந்து 200 ரூபாய்க்கு விற்கும் நிறைய நிறுவனங்கள் இருக்கிறது. அதை பார்க்கும் போது, இந்த KIT கண்டிப்பாக மாடி தோட்டம் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு தேவையான எல்லா பொருட்களையும் விலை குறைவாகவே கிடைக்கிறது. விருப்பமானவர்கள் வாங்கி பயன் பெறலாம்.