சைக்கிள் கேப்ல ஏதாவது வளர்த்து அறுவடை எடுத்தால் சந்தோசம் தானே. அப்படித்
தான் இந்த முறை மாடியில் ஏற்கனவே நெருக்கமாய் இருந்த பைகளுக்கு இடையில் இரண்டு
முலாம்பழம் கொடியையும் விட்டேன். விதை Omaxe Hybrid Seed (இணையத்தில் வாங்கியது). வழக்கமான 1 அடி X 1 அடி
பையில் ஒவ்வொரு செடி வைத்து விட்டேன்.
முலாம்பழம் வெள்ளரி செடி மாதிரி தான். எளிதாக வளரும் செடியாகவே
இருக்கிறது. ஒரு பத்து இலை வந்ததுமே மொட்டு வைக்க ஆரம்பித்து விட்டது. நிறைய
மொட்டுக்கள் காய் மொட்டுகளாக வந்து, பிஞ்சும் பிடித்தது. பரவாயில்லையே என்று
நினைக்கும் நேரத்தில் கூட்டம் கூட்டமாய் எறும்பு வந்து பூக்கள், இலை என்று ஓன்று
விடாமல் மேய ஆரம்பித்தது. இலை, பூ, பிஞ்சி என்று எதில் பார்த்தாலும் எறும்பு
கூட்டம் தான்.
அந்நேரத்தில் நமது ப்ளாக் நண்பர் தாராபுரத்தில் இருந்து என்னை பார்க்க வந்திருந்தார். அவர் தான் பார்த்துவிட்டு
இலையின் அடியில் நிறைய இலைப்பேன் போன்ற பூச்சிகள் இருப்பதாக கூறினார். அதை
நீக்கினால் எறும்பு தானாக போய் விடும் என்றும் கூறினார்.
பிறகு ஒரு லிட்டர் அளவுக்கு நீரில் இரண்டு உள்ளங்கை அளவுக்கு வேப்பம்
புண்ணாக்கு கரைத்து, பொறுமையாக ஒவ்வொரு இலைக்கும் அடியில் உள்ள பூச்சிக் கூட்டத்தை
கையை வேப்பம் புண்ணாக்கு நீரில் நனைத்து நன்றாக இலைகளை தேய்த்து விட்டேன். கொஞ்சம்
நேரம் எடுத்தாலும் ரொம்ப தாக்குதல் இருக்கும் போது செடியை காப்பாற்ற இந்த முறை தான்
உடனே பலன் கொடுக்கும். வீட்டுத் தோட்டத்தை பொருத்தமட்டும் நாம் எல்லா நேரங்களிலும்
ஒரு Sprayer-ல் வைத்து தெளித்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. தாக்குதல்
அதிகமாக இருக்கும் போதும், நம்மால் கைகளால் பூச்சிகளை நீக்கி விட முடியும் என்றால்
அதை செய்துவிட்டு, பிறகு ஒரு முறை வேப்பம் புண்ணாக்கு தெளித்து விட்டால் பூச்சி
தாக்குதல் அத்தோடு நின்று விடும். இரண்டு நாள் தொடர்ந்து இதே போல இலைகளை வாஷ்
செய்த பிறகு, பூச்சிகள் நிரந்தரமாய் போய் விட்டது. பெரிய ஆச்சரியம், கூட்டமாய்
வந்த எறும்புகள் எல்லாம் இடத்தை காலி செய்து விட்டு போய் விட்டன.
என்னுடைய கவனக் குறைவினால் நிறையவே பூச்சிகள் இருந்ததால் முதலில்
பிடித்த நிறைய பிஞ்சிகள் அப்படியே வெம்பி, உதிர்ந்து போய்விட்டது. செடிக்கு ஒன்றாக
மொத்தம் இரண்டு காய்கள் தான் தப்பித்து வந்தது.
முலாம்பழம் பழுத்தவுடன் அதன் தோலின் நிறம் நல்ல மஞ்சள் நிறமாய்
மாறும். நிறம் மாறிய பிறகு லேசாய் அழுத்தி பார்த்தும் பழுத்து விட்டதா என்று
பார்த்துக் கொள்ளலாம். மாடியில் வெறும்
சிமெண்ட் தரையில் கொடிகள் விடும்போது காய்களுக்கு, பிஞ்சி விடும் போதே தேங்காய்
நார் கொண்டு சின்னதாய் ஒரு படுக்கை அமைத்து விடலாம். இதனால் சிமெண்ட் தரை வெப்பமோ,
தரையில் உரசி காய்களுக்கு ஏதும் பாதிப்போ வரமால் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த முறை பெரிதாய் விளைச்சல் எடுக்க முடியவில்லை என்றாலும், முதல்
முயற்சி என்ற வகையில் இந்த அறுவடை வெற்றியே. தவிர ஒரு பெரிய பாடம் ஒன்றையும்
கற்றுக் கொண்டேன். நாம் பொதுவாய் எறும்பு கூட்டம் செடியில் உலாவுவதை பார்த்தால்,
எறும்பை தான் கட்டுப்படுத்த நினைப்போம். இலைகளிலும், காய்களிலும் வெள்ளையாய் தெரிவதை
எறும்பு தான் ஏதோ கூடு கட்டி முட்டை போடுகிறதோ என்று நினைப்போம். இந்த பிரச்சனை
சீத்தா மரம், வெண்டை செடிகளில் பார்க்கலாம். ஆனால் அவைகள் எல்லாம் எறும்புக்கு
சம்பந்தம் இல்லாதவை, பூச்சி தாக்குதல் என்று நண்பர் சிவகுமார் தான் விளக்கினார். அந்த
பூச்சிகள் சுரக்கும் ஒருவித இனிப்பு சுவைக்காக தான் எறும்புகள் கூட்டமாய் செடிகளை
ஆக்கிரமிக்கின்றன. எறும்புகள் அந்த பூச்சிகளை செடியின் மற்ற இடங்களுக்கும் பரவ
உதவுகிறது. இப்படி இரண்டு பேருக்கும் ஒரு கொடுக்கல்-வாங்கல் டீல் இருக்கிறது. முடிந்தால்
எறும்புகளை கட்டுப்படுத்தினால் பூச்சிகள் பரவாமல் தடுக்கலாம். இல்லை பூச்சிகளை
ஒழித்தால் எறும்புகள் தானாகவே அந்த இடத்தை காலி செய்து போய் விடும். முலாம்பழத்தை
வைத்து கற்றுக் கொண்ட பாடம் இது தான்.
கீழே பார்க்கும் பூச்சி தாக்குதல் எந்த அளவுக்கு இருக்கிறதென்று
பார்த்தாலே தெரியும். ஒரே ஒரு வேப்பம் புண்ணாக்கு வாஷ் தான், பிறகு எந்த
தொல்லையும் இல்லை.