Wednesday, December 30, 2015

2015- சீசன்-2 (ஜூலை-டிசம்பர்) – அறுவடை (பகுதி – 1)



ஒரு வழியாக ஜூலையில் தொடங்கிய சீசன் ஒரு முடிவுக்கு வருகிறது. அடுத்தது ஜனவரி (தை) சீசனுக்கான திட்டமிடல் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது தான் விதைகள் எல்லாம் ஆர்டர் செய்து கொண்டிருக்கிறேன். அடுத்த சீசனை தொடங்குவதற்கு முன் இந்த சீசன் அறுவடை பற்றி ஒரு முடிவுரை கொடுத்து விடலாம்.

இந்த சீசனை பற்றி சொல்வதென்றால் ‘சுமார்’ என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. சில செடிகள் ஹிட் லிஸ்டிலும், சில ஃபளாப் லிஸ்டிலும் போனது. அதுல வழக்கம் போல கொடிகள் சூப்பர் ஃபளாப் ஆகி போனது..அதனால் மக்களே ‘பாவக்கா செடி தண்டு வீங்கி போச்சு, சுரைக்கா வெம்பி போச்சு. என்ன செய்ய’ என்று மடல் அனுப்பினால் என் பதில் ‘உங்களுக்குமா....அவ்வ்வ்வவ்’ என்று தான் இருக்கும் :) (வரும் சீசனில் இதுல ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயம்.. அப்படி கொடிக்கும் நமக்கும் என்ன ஜென்ம பகை என்று தெரியவில்லை. பார்க்கலாம் :) )

இந்த சீசனின் சிறப்பு என்றால் நண்பர் பரமேசிடம் வாங்கிய நாட்டு விதைகள் கொண்டு ஆரம்பித்தது தான். முக்கியமாக தக்காளி, கத்தரி, மிளகாய் செடிகளை பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். வழக்கம் போல நிறைய பூச்சி தொல்லைகள். வழக்கமான பூச்சிகளை விட்டு இந்த முறை புதிய வரவுகள் நிறைய இருந்தன. ஒவ்வொன்றும் நமக்கு எதாவது ஒன்றை கற்றுக் கொடுத்து விட்டு, வந்ததற்கு செடிகளையும் காலி செய்து விட்டு போய் விட்டன. ஒவ்வொன்றாய் விவரமாய் பார்க்கலாம்,

கத்தரிக்காய்

பரமேசிடம் இருந்து வாங்கிய மூன்று வகை நாட்டுக் கத்தரி, என்னிடம் இருந்த வெள்ளை கத்தரி, முள் கத்தரி என்று இந்த சீசன் ஒரு கத்தரி ஸ்பெஷல் ஆகி போனது. ஊதா, பச்சை, வெள்ளை என்று கலர் பல்புகள் போல அழகாய் தோட்டத்தை மாற்றின.
   
நண்பர் பரமேசிடம் இருந்து பச்சை கத்தரி, ஊதா கத்தரி, ஊதா குண்டு கத்தரி என்று மூன்று வகை வாங்கி இருந்தேன். ஒவ்வொன்றிலும் மூன்று செடிகள் வீதம் தரையில் வைத்து விட்டேன். பச்சைக் கத்தரி மட்டும் மாடியில் பையில் வைத்து விட்டேன். பெரிதாய் ஏதும் பராமரிப்பு தேவைப்படவில்லை. நோய் தாக்குதலும் இல்லை. செப்டம்பரில் இருந்து டிசம்பர் வரை காய் பறித்து விட்டோம். இன்னும் கூட நிறைய பூத்து கிடக்கிறது.




















வெள்ளைக் கத்தரி, இதை பற்றி முன்பே சில முறை கூறி இருக்கிறேன். ஊரில் இருந்து கொண்டு வந்த விதை. கடந்த மூன்று வருடமாக விதை எடுத்து அதில் இருந்தே இந்த செடிகளை வருடா வருடம் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். விளைச்சல் எந்த வருடமும் சொதப்பியதில்லை. எந்த நோய், பூச்சி தாக்குதலும் வந்ததில்லை. எங்கள் தோட்டத்தின் ஸ்பெஷல் கத்தரி இது தான். வெள்ளை கத்தரியை பார்த்ததும் ‘அட.. நம்ம ஊரு கத்தரி’ என்று வருபவர்களிடம் இருந்து ஒரு வார்த்தை வருமே, அதற்காகவே இந்த செடி என் எல்லா சீசனிலும் பட்டியலில் இருந்து தவறுவதில்லை. 





முள் கத்தரி

தெரிந்தவர் ஒருவர் கத்தரி நாற்றுகள் ஒரு பத்து இருக்கும் கட்டு ஒன்றை கொடுத்தார். நெருங்கிய வட்டத்தில் யாருக்காவது செடி, விதை கிடைத்தால் முதலில் என் நியாபகம் தான் வருகிறது. அந்த நாற்றுகளை பிரித்து தரையில் வைத்து விட்டதில் இரண்டு செடிகள் மட்டும் முள் கத்தரியாக வந்தது. முதலில் இது தோட்டத்தில் ஒரு ஸ்பெஷல் செடியாக மாறும் என்று தெரியாது. செடியில் எல்லாமே முட்கள் தான். தண்டு, மொட்டு, இலை என்று ஒரே முள் மாயம். மிதித்தால் காலிலேயே குத்தும் அளவுக்கு உறுதியான முட்கள். ஆனால் கத்தரிக்காய் ரொம்ப அழகாக, குண்டு குண்டாய் நிறையவே காய்த்தது. கத்தரிக்காய் சில  200  கிராம் அளவுக்கு மிக பெரிதாய் வந்தது. காய் பார்க்க பெரிதாக இருந்தாலும், உள்ள மிக மென்மையாக ருசியாக இருக்கிறது. எல்லா கத்தரியை விட இது தான் ருசி என்று வீட்டில் கூறினார்கள். இதை பார்த்த எல்லோருமே நாற்று கிடைக்குமா என்று கேட்டிருந்தார்கள். ஒரு காயை விதைக்கு விட்டு எடுத்து வைத்திருக்கிறேன். கோவை நண்பர்கள் வேண்டுமென்றால் ஒரு மடல் அனுப்புங்கள்.







இதோடு மேலே கொடுத்திருக்கும் எல்லா கத்தரியிலும் விதை எடுத்து வைத்திருக்கிறேன். அடுத்த சீசனுக்கு விதை வாங்க வேண்டியதில்லை. கத்தரியில் விதை எடுப்பது எப்படி என்று ஒரு வீடியோ ஓன்று எடுத்திருக்கிறேன். சீக்கிரம் கொடுக்கிறேன்.  

கத்தரி கதையே ரொம்ப பெரிதாக போனதால், மற்ற காய்கறிகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Saturday, December 12, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் – சின்ன வெங்காயம்



வெங்காயம், பொதுவாய் வீட்டுத் தோட்டத்தில் பேசப்படாத ஓன்று. மாடித் தோட்டம் என்றால் தக்காளி, கத்தரி, மிளகாய், அவரை, வெண்டை என்ற அளவில் முடித்துக் கொள்வோம். வெங்காயத்தை ஒரு முக்கிய காய்கறியாக யாரும் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நம்மை நிறைய நேரம் தலைச்சுற்ற விடுவது வெங்காயம் விலை தான். நிறைய நேரங்களில் ஊடங்களில் தவறாமல் இடம் பெறும் ஓன்று வெங்காயம் விலை. சில நேரம் கிலோ பத்து ரூபாய் என்று அடிமாட்டு விலைக்கு விற்கும் வெங்காயம், பல நேரங்களில் கிலோ அறுபது ரூபாய், என்பது ரூபாய் என்று ஏறி வீட்டில் வெங்காய சட்னி, வெங்காய தோசைக்கு எல்லாம் வேட்டு வைத்து விடுகிறது.

விலை கூட பரவாயில்லை, இப்போவெல்லாம் சின்ன வெங்காயத்திற்கும் பெரிய வெங்காயத்திற்கும் வித்தியாசமே தெரிவதில்லை. சந்தையில் ‘அடடா, சின்ன வெங்காயம் முத்து போல குண்டு குண்டா இருக்கே’ என்று போய் விசாரித்தால் அதை பெரிய வெங்காயம் என்கிறார்கள். பெரிய வெங்காயம் சைஸே இப்படி என்றால், சின்ன வெங்காயத்தை உரித்து அதில் ஒளிந்திருக்கும் வெங்காயத்தை கண்டுபிடித்து சட்னிக்கு வெங்காயத்தை சேர்ப்பதற்குள் விடிந்து விடுகிறது. அந்த வேலை சில நேரம் என்  தலையிலேயே விழுந்ததின் விளைவே மாடித்தோட்டத்தில் இவ்வளவு வெங்காயம்.

முன்பு பெரிய வெங்காயம் பெரிய அளவில் முயற்சித்து வெற்றியும் கிடைத்ததை இந்த பதிவில் கொடுத்திருந்தேன். அதே போல சின்ன வெங்காயத்தையும் பெரிய அளவில் முயற்சித்தால் என்ன என்று ஆரம்பித்து விட்டேன்.

வெங்காயம், விதையில் இருந்தும் கொண்டு வரலாம், வெங்காயத்தில் (bulb) இருந்தும் கொண்டு வரலாம். சின்ன வெங்காயம் விதை இங்கே கோவை வேளாண் கல்லூரியில் (TNAU) கிடைக்கிறது. விலை இருபது ரூபாய் (முன்பு பத்து ரூபாயாக இருந்தது. நான் இந்த முறை ஜூலையில் அக்ரி இன்டெக்ஸ்-ல் வாங்கும் போது இருபது ரூபாய் ஆக்கி விட்டார்கள்). சந்தையில் நல்ல நாட்டு வெங்காயம் கிடைத்தால் அதையும் பயன்படுத்தலாம்.

விதைகளில் இருந்து நாற்று கொண்டு வரும் போது, நமக்கு விலை குறைவாகிறது. ஒரு இருபது ரூபாய் பாக்கெட்டில் இருந்தே நாம் பல நூறு செடிகள் எடுக்கலாம். தவிர, வெங்காயம் என்ன வகை, என்ன தரம் என்பது தெளிவாக தெரியும். ஆனால், விதையில் இருந்து நாற்று எடுத்து கொண்டு வரும் போது, வெங்காயத்தை நேரடியாக விதைப்பதில் விளைச்சல் எடுப்பதை விட கூட இரண்டு மாதம் விளைச்சலுக்கு காத்திருக்க வேண்டும்.

நேரடியாக வெங்காயத்தை விதைப்பதில் கொஞ்சம் செலவு ஆகலாம். தவிர சந்தையில் வாங்கும் வெங்காயத்தின் தரமும், விளைச்சலும் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் நாம் சீக்கிரமே விளைச்சல் எடுக்கலாம்.

வெங்காயத்தை நாற்று எடுத்து நடுவது, தகுந்த இடைவெளி விட்டு நட எளிதாக இருக்கும். நாற்று எடுக்க நர்சரி ட்ரே பயன்படுத்த வேண்டாம் (முன்பு பெரிய வெங்காயத்திற்கு நர்சரி ட்ரே பயன்படுத்தி இருப்பேன். அது தேவை இல்லை). ஒரு பெரிய Grow Bag-ல் கீரை மாதிரி தூவி நாற்று எடுத்து, அதை எடுத்து நடலாம். வெங்காய நாற்றுகள் வேரில் மண் உதிர்ந்து போனாலும், வேர் கொஞ்சம் சேதாரம் ஆனாலும் எடுத்து நட்டிய பிறகு எளிதாக பிடித்து வளர்கிறது. அதனால் ரொம்ப நேர்த்தியாக எடுத்து நட வேண்டிய அவசியம் இல்லை. 



முன்பு வெங்காயம் விதையாக போட்டால் விதைக்கு ஒரு வெங்காயம் மட்டும் தான் வரும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த முறை ஒவ்வொரு செடியில் இருந்தும் கொத்தாக நான்கு-ஐந்து வெங்காயம் வந்திருந்தது.

வெங்காயம், மிக எளிதான ஒரு காய்கறி என்று சொல்லலாம். இது வரை வெங்காயத்தில் எந்த நோய் தாக்குதலோ, பூச்சி தாக்குதலோ நான் பார்க்கவில்லை. நாற்று எடுத்து விட்டால், நான்கு மாதத்தில் விளைச்சல் எடுக்கலாம். வெங்காயத்தை நேரடியாக விதைக்கு போது (onion bulb), இரண்டு-இரண்டரை மாதத்திலேயே விளைச்சல் எடுக்கலாம் செடியின் பச்சை நிறம் போய், லேசாய் பழுப்பாக ஆரம்பிக்கும் போது அறுவடை செய்யலாம். வெங்காயம் செடியின் மேல்பரப்பிலேயே தெரியும். அதையும் கொஞ்சம் கவனித்து, நல்ல திரட்சியாக தெரியும் போது அறுவடை செய்யலாம். ஒரே தடவையில் மொத்தமாய் அறுவடை செய்ய வேண்டியதில்லை. நல்ல திரட்சியான வெங்காயத்தை மட்டும் அறுவடை செய்துவிட்டு மற்ற செடிகளுக்கு நீர் ஊற்றி வந்து இரண்டு வாரம் கழித்து மிச்ச செடிகளை அறுவடை செய்யலாம்.

வெங்காயம் அறுவடை வீடியோ - https://www.youtube.com/watch?v=cQlnWqea4y4