Monday, June 4, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் - மணத்தக்காளி கீரை


கீரை வகை ஓன்று. காய்கறிகளில் ரொம்ப சத்துள்ளதாக கூறப்படும் ஓன்று கீரை. நாம் தான் அவ்வளவாக உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை. வளர்ப்பதற்க்கும் ரொம்ப எளிதான ஒரு செடி. கீரை வகைகள்  ஒரு பட்டியலே  போடலாம்.  நான் வீட்டில் சிறு கீரை, அரை கீரை, பொன்னாங்கண்ணி  கீரை, பாலக் கீரைமணத்தக்காளி கீரை, பருப்புக் கீரை வைத்திருக்கிறேன். முருங்கை இலையும் ஒரு சிறந்த கீரை தான். இந்த பதிவில் மணத்தக்காளி கீரை பற்றி பார்க்கலாம்.

மணத்தக்காளி கிட்டத்தட்ட ஒரு மூலிகை செடி தான். மற்ற கீரைகளில் வெறும் சத்து தான் இருக்கும். ஆனால் மணத்தக்காளியில்   நிறைய மருத்துவ குணமும் இருக்கிறதாம். அதனால் நம்ம ஆளுங்க சூப் எல்லாம் போட்டு கல்லா கட்டிக் கொண்டிருப்பார்கள்.


எப்பவுமே இந்த கீரை கண்டிப்பாக தோட்டத்தில் இருக்கும். இந்த வருடம் இடம் இல்லாமல், கடைசியில், தண்ணீர் தொட்டிக்கு (water sump) பக்கத்தில் கொஞ்சம் இடத்தை கண்டுபிடித்து சரி பண்ணினேன். பழங்கள் மொத்தமாக விழுந்து அதுவாகவே முளைப்பதால் செடிகள் கொத்து கொத்தாக முளைத்து விடும். பிறகு நாம் தான் பிடுங்கி மறுபடி நட வேண்டும். இதை தவிர்க்க இந்த முறை பழங்களை பறித்து ஒரு சின்ன பக்கெட்டில் கரைத்து ஒரு நீர்க்கரைசலாக எடுத்து கொண்டேன். ஒரு ½ இஞ்ச், நிலத்தை கிளறி கரைசலை ஊற்றி விட்டேன்.  


அளவான இடைவெளியில் செடிகள் முளைக்க ஆரம்பித்தது. பொதுவாக மணத்தக்காளி செடி பெரிதாக வளரும் செடி. ஆனால் கீரைக்காக மட்டும் என்றால் (வற்றலுக்காக பழம் தேவை இல்லை என்றால்) நெருக்கமாகவே வளர்க்கலாம். நன்றாக வெயில் படும் இடமா என்று மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக செம்மண்ணும் மணலும் கலந்து, கொஞ்சம் உரமும் (vermi compost மாதிரி) கலந்து பாத்தி தயார் செய்யலாம்.




செடி ஒவ்வொன்றும் 1 ½ அடி உயரம் வந்ததும் ரொம்ப நெருக்கமாக இருக்கும் செடிகளை வேரோடு பிடுங்கி விடலாம் (கீரைக்காக தான்). இதனால் மற்ற செடிகள் நன்றாக வளரும். தேவையான இடைவெளியில் செடிகள் வந்ததும், கீரைக்காக கிளைகளை ஒரு கத்தரியால் வெட்டி எடுத்துக் கொள்ளலாம். செடி உடனே தளிர்த்து வளர தொடங்கி விடும். இதனால் ஒரு செடியில் இருந்து நிறைய தடவை நமக்கு கீரை கிடைக்கிறது.

மணத்தக்காளிக்கு தனியாக விதை வாங்க வேண்டியது இல்லை. இரண்டு செடிகளை காய்க்க விட்டால் போதும். அதன் பழங்களை பறித்து விதையாக எடுத்துக் கொள்ளலாம். பழங்களும் சாப்பிட நன்றாக இருக்கும். எங்க வீட்டுக்கு வரும் குட்டீஸ் தோட்டத்தில் இந்த பழங்களை தேடி பறித்து தின்று கொண்டிருப்பார்கள். பழங்களை காயவைத்து வற்றலாகவும் பயன் படுத்துகிறார்கள்.









தமிழ் விக்கியில் இருந்து:
மணத்தக்காளி தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சுக்குட்டி கீரை எனவும் கூறப்படுகிறது. 

மணத்தக்காளியில் நிறைய உயிர்ச் சத்துக்களும், புரதச் சத்துக்களும், இரும்புச் சத்தும் உண்டு. இந்தக் கீரையில் தக்காளி வடிவில் சிறிய அளவில் மணி மணியாகக் காய்கள் இருப்பதால் மணித்தக்காளி என்றும் அழைக்கப்படுகிறது.

சித்த மருத்துவத்தில் குடல் புண்களைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு.மணத்தக்காளி கீரையில் உள்ள solonine என்ற ஆல்கலாய்டும்,சல்போனினும் ,வாய்ப்புண்,நாக்குப்புண்,குடல்புண்,வயிற்றுப்புண் ஆகிய நோய்களை குணப் படுத்துகிறது. இதில் இருக்கும் anti-oxidant புற்று நோய் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள diosgenin இருமல்,சளி மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்தும் தன்மையுடையது.

மணத்தக்காளிக் கீரையில் உடல் நலத்துக்கான சத்துக்கள் நிறைய இருக்கின்றன. அதனால், குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து வாரம் ஒரு முறையாவது இந்தக் கீரையைச் சாப்பிடப் பழக்கப்படுத்துவது நல்லது.


23 comments:

  1. nice cultivation.

    nagu
    www.tngovernmentjobs.in

    ReplyDelete
  2. தகவலும் படங்களும் அருமை .. வீட்டுத் தோட்டம் இடுவதால் பல வகைகளில் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும். அத்தோடு ஆரோக்யமான உணவும் கிடைக்கும், மனதுக்கும் உடலுக்கும் ஏற்றதொரு பொழுதுப் போக்காகவும் அமையும் ... நன்றிகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் செல்வன். மனதுக்கும் உடலுக்கும் ஒரு சிறந்த விஷயம் தோட்டம். தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  3. கூகிள் நண்பர்கள் பட்டியை இணைக்கலாமே ??? பின் தொடர வசதியாக இருக்கும் .

    ReplyDelete
    Replies
    1. கூகிள் நண்பர்கள் பட்டியை எப்படி இணைப்பது என்று விவரம் இருந்தால் கூறுங்களேன். கண்டிப்பாக இணைத்து விடுகிறேன்.

      Delete
  4. இங்கே நம்ம வீட்டுலே தானாகவே மணத்தக்காளி நிறையவே முளைச்சு வருது.

    தோழி ஒருத்தர் சொன்னாங்க அது விஷச்செடின்னு. லேப்லே கொடுத்து பரிசோதனை செஞ்சப்ப அது விஷமுன்னு சொன்னாங்களாம்!!!!

    நிற்க,

    வெள்ளைக்கார லேப் ஆளுக்கு நம்ம கீரைகளைப்பற்றி என்ன தெரியுமுன்னு நானும் இன்னொரு இந்தியத்தோழியும் கீரையை பருப்புக்கூட்டு செஞ்சு சாப்பிட்டோம். தோழியின் மாமியார் காய்களை வற்றல்கூடப்போட்டாங்க.

    எங்களுக்கு ஒன்னும் ஆகலை.

    ஆனால் பரிசோதனைக்கு அனுப்பிய(இலங்கைத்)தோழி இது பாய்ஸன் என்றே சாதிக்கிறாங்க!!!!!

    ReplyDelete
    Replies
    1. விஷமா? பார்த்து சாப்பிடுங்கள். செடி அதே மாதிரி தான் காய் எல்லாம் காய்க்கிறதா? வற்றல் போடும் அளவுக்கு நிறைய செடிகளா. சூப்பர்.

      Delete
  5. துளசி, முன்பு நீங்க சொன்னதுதான், எல்லா செடிக்கும் ஒரு டூப்ளீகேட் இருக்கும்ன்னு :-) பார்த்து ஜாக்கிரதை.

    சிவா, உங்க தோட்டத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். முந்தா நாள் உருளை நட்டு இருக்கிறேன், கொஞ்சமாய் முளை வந்திருந்தை எடுத்து நட்டு இருக்கிறேன். எல்லாம் மாடி தோட்டம் தான்

    கீழே வெய்யில் போதவில்லை. மதியம் ஒரு மணி நேரம் வெய்யில் வ்ருகிறது. அதில் குரோட்டன்ஸ் மட்டுமே வருகிறது. முதலில் தெரியாமல் செம்பருத்தி நட்டு அப்படியே மூணு மாசம் உட்கார்ந்திருந்தது. இப்ப வெய்யில் வைத்ததும் தள தள வென்று இருக்கிறது. குறைவான
    வெய்யிலில் என்ன பூ செடி வரும்?
    சென்ற வருடம், நாலைந்து மணத்தக்காளி செடி வைத்தும் எல்லா வற்றிலும் மாவு பூச்சி, வெள்ளை/லேசான க்ரே கலர் பூச்சி, செடி முழுக்க வெள்ளை மாவு. அப்படியே செடி இறந்து விட்டது.
    உங்க வீட்டு செடிகளுக்கு பூச்சி கொல்லி எதைப் போடுகிறீர்க? எப்படி என்ன வென்று கொஞ்சம் விவரமாய் சொல்ல முடியுமா?
    காதி சோப் கட்டியும், வேப்பணையும் வாங்கி வைத்துள்ளேன். இம்முறை பூச்சி வந்தால் தெளிக்க காதி கட்டி சோப் ஓகேவா?
    உங்கள் வழிக்காட்டலுக்கு காத்திருக்கும்,
    சென்னையில் இருந்து உஷா

    ReplyDelete
    Replies
    1. ஹாய் உஷா மேடம். தொடர்ந்து படிக்கிறீங்களா, ரொம்ப சந்தோசம்.

      செடிகளுக்கு வெயில் ரொம்ப முக்கியம். இல்லை என்றால் சுத்தமாக வளராது. மாவு பூச்சி தொல்லை இங்கு கோவையில் அவ்வளவாக இல்லை. ஆனால் கட்டெறும்பு தொல்லை தலையை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு செடிகளை காலி செய்து விடுகிறது. பூ, காய் என்று கூட்டம் கூட்டமாக கூடு கட்டி, எதையும் வளர விடுவதில்லை. அதுங்க கூட தான் நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.

      சில பூச்சிகளுக்கு நான் இன்னும் வேப்பிலை சாறு, துளசி சாறு என்று மிக்சியில் அரைத்து தெளித்து கொண்டிருக்கிறேன். ரிசல்ட் அவ்வளவாக சொல்ல முடியவில்லை. பூச்சி கட்டுப் படுத்தலில் இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டிய இருக்கிறது. ஒவ்வொன்றாக முயற்சி செய்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். மாவு பூச்சிக்கு இஞ்சி கரைசல் தெளிக்கலாம் என்றிருக்கிறது. ஒரு 100 கிராம் எடுத்து அரைத்து தெளித்து பாருங்கள். ஏதாவது முன்னேற்றம் இருந்தால் சொல்லுங்க.

      துளசி மேடம் சொன்ன மாதிரி வேப்பம் புண்ணாக்கு வேர் பூச்சிகளை கட்டுப் படுத்த உதவும். நானும் செடிகளுக்கு போடுவதுண்டு.

      Delete
  6. சிவா, உஷா,

    இதுவரை ஒன்னும் ஆகலை:-)))))

    பழம் இனிப்பாவே இருக்கு.

    கீரை எப்போதாவதுதான் சமைக்கிறேன்.

    வேப்பம் புண்ணாக்கு செடிகளுக்குப் போட்டாலும் பூச்சி வராதுன்னு சொல்வாங்க.

    நம்ம வீட்டுலே இருக்கும் காஃபிச் செடியில் இந்த ஒயிட் மாவு வந்துருச்சு. இலைகளில் எல்லாம் ஓட்டை. எல்லா இலைகளையும் கத்தரிச்சுப்போட்டேன். இங்கே கிடைக்கும் ஒயிட்ப்ளை ஸ்ப்ரே வாங்கியாந்து அடிச்சுருக்கு இப்ப.

    ReplyDelete
    Replies
    1. நான் இன்னும் செடிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு போட ஆரம்பிக்கவில்லை. மரங்களுக்கு வைக்கிறேன்.

      மாவு பூச்சி கொஞ்சம் தொல்லை தான். சோப்பு கரைசலை ஸ்ப்ரே செய்து முயற்சி செய்து பாக்கணும்.

      Delete
  7. அருமையான தகவல். அழகான கண்கவரும் செடிகள். மணதக்காளி எங்கள் வீட்டில் , உரத்திலிருந்து ஏகமா வளருது!

    ReplyDelete
    Replies
    1. நல்லது பட்டு ராஜ். :-)

      Delete
  8. மணத்தக்காளி பற்றிய அருமையான பதிவு. எளிமையாக வீட்டிலேயே பயிர் செய்யலாம் என்று சொல்கிறார் திரு சிவா.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி திரு சிவா.

    ReplyDelete
  9. இன்று தான் உங்கள் ‘தோட்டத்துக்கு” வந்தேன். இனிய அனுபவம்...
    மாவுப் பூச்சிக்கு, சோப்புக் கரைசலை ஸ்ப்ரேயர் மாதிரி எதிலாவது நிரப்பி, லேசாக அடிக்க வேண்டும் என்று என் தோட்டக்கலை ஆர்வ நண்பர் ஒருவர் சொல்வார்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ப்ரியா. ஆமாம். சோப்பு கரைசல் முயற்சிக்கணும். பார்போம் எப்படி வருகிறது என்று. ஆனால் இந்த கட்டெறும்பு தான் இப்போதைய பெரும் பிரச்சினை இங்கே :-(

      Delete
  10. Wonderful cultivation. Nice pictures and well grown nightshades

    ReplyDelete
    Replies
    1. நன்றி சாந்தி அவர்களே. :-)

      Delete
  11. சிவா அண்ணா,
    வேப்பம் புண்ணாக்கு கோவையில் எங்கு கிடைக்கும்?

    ReplyDelete
  12. எல்லா விவசாய சம்பந்தபட்ட கடைகளில் (உரக்கடை) கிடைக்கும். நான் இங்கே அன்னூர் போய் வாங்கி வருவேன். நீங்க எந்த ஏரியா?

    ReplyDelete
  13. நரசிம்ம நாயக்கன் பாளையம். நிறைய கடைகளில் கேட்டு பார்த்தேன். ஆனா எங்கும் கிடைக்கல. வேப்பம் எண்ணையும் கிடைக்கல. அப்புறம் அமேசான்ல ஆர்டர் பண்ணி வேப்பம் எண்ணை வாங்குனேன்.

    ReplyDelete
    Replies
    1. வேப்பெண்ணைக்கு அமேசான் போக தேவை இல்லை. கண்டிப்பாக விலை எக்கச்சக்கமாய் இருக்கும். எல்லா நாட்டு மருந்து கடைகளிலும், சில மளிகை கடைகளிலும் கிடைக்கும். நான் இங்கே சரவணம்பட்டியில் ஒரு மளிகை கடையில் இருந்தே வாங்குகிறேன்.

      அன்னூர் சென்றால் அங்கே சந்தை நுழைவு வாசலுக்கு எதிரே ஒரு உரக்கடை இருக்கும். அங்கே வேப்பம்புன்னாக்கு கிடைக்கும்.

      Delete