Sunday, June 17, 2012

கோவை - அக்ரி இன்டெக்ஸ் – 2012

மே கடைசி வார இறுதியில் (மே 30 - ஜூன் 3) இங்கே கோவையில் ‘அக்ரி இன்டெக்ஸ் 2012” (விவசாய கண்காட்சி) கொடிசியா வளாகத்தில் நடப்பதாக கேள்விப்பட்டேன். குழந்தைகளுக்கு பொருட்காட்சி மாதிரி, கார் பிரியர்களுக்கு Auto Expo மாதிரி தான் என்னை போல ஆளுங்களுக்கு இந்த விவசாய கண்காட்சி. நாள் முழுக்க சோறு தண்ணி இல்லாம சுத்திக்கிட்டே இருக்கலாம். 


அந்த சனிகிழமை காலை 9:30 க்கே கொடிசியாவில் குடும்பத்தோடு ஆஜர். வெளியிலேயே தேனீ பண்ணை, நர்சரி கார்டன் என்று வரிசையாக நம்மை வரவேற்று கொண்டிருந்தது. தேனீ பண்ணை ஆளுங்க தேனிலே நிறைய flavors காட்டி அசத்தி கொண்டிருந்தார்கள். வாழை பூ, தும்பை பூ, மல்லி பூ என்று நிறைய flavors. கூடு எந்த தோட்டத்தில் வைக்கிறோமோ அந்த flavor-ல தேன் வருமாம். ஒருத்தர், கொடுத்த சாம்பிள நக்கி நக்கி பார்த்துட்டு ‘எல்லாம் ஒரே மாதிரி தானே இருக்குங்க’ அப்படின்னு முழிச்சிக்கிட்டு இருந்தார். ‘அட என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க. நல்லா  சாப்பிட்டு பாருங்க’ என்று இன்னொரு கரண்டியை கையில் ஊற்ற, ‘ஆமாங்க டேஸ்ட் வருது. எனக்கு ஒரு கொத்தமல்லி flavor-ல ஒரு பாட்டில் கொடுங்க’ன்னு வாங்கிட்டார். கொத்தமல்லியா, அதுல பூ கடுகு சைஸ் கூட இருக்காதே. தேனீ எப்படிடா அதுல உக்காந்து தேன் எடுக்கும் என்று நமக்கு டவுட்டு. அத கேட்டா நம்ம கையிலும் ஒரு கரண்டிய ஊத்திருவாங்கன்னு அமைதியா நடையை கட்டிட்டோம். 

உள்ளே A, B, C ஹால் முழுக்க வரிசையாக stalls தான். கிட்டதட்ட 150-200 Stalls இருக்கும். ஒரு விவசாய உலகமே உள்ளே. இந்தியாவில் விவசாயம் இவ்வளவு முன்னேறி விட்டதா என்று ஆச்சரியம். விதைப்பதில் இருந்து அறுவடை வரை அத்தனைக்கும் மெஷின். தேங்காய் உரிக்க, ஓட்டை உடைத்து கொப்பரை தேங்காய் மட்டும் தனியாக எடுக்க என்று நம்ம ஆளுங்களே தயாரித்த customized மெஷின்களை நிறைய பார்க்க முடிந்தது. நிறைய விவசாய மக்களை ஹால் முழுக்க பார்க்க முடிந்தது (பொழுதை மட்டும் போக்க வந்த கூட்டம் கம்மியாகவே தெரிந்தது). விவசாயம் தவிர, கால்நடை வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு என்று நிறைய கடைகள்.  



  நான் வழக்கம் போல தோட்டத்திற்கு தேவையான விதை, Gardening Tools என்று தேட ஆரம்பித்துவிட்டேன். கேரட் போன தடவை ப்ளாப் ஆகி போனது. மீண்டும் முயற்சி பண்ணி பார்க்கலாம் என்று ஒரு பாக்கெட், சிறு கீரை, காலிப்ளவர் என்று சில காய்கறிகள். தென்னைக்கு குரும்பல் உதிராமல் இருக்க டானிக் என்று கோவை Tamil Nadu Agricultural University (TNAU) இருந்து விற்று கொண்டிருந்தார்கள். வீட்டு தென்னை இரண்டுக்கும் இரண்டு. Tiger Lily மாதிரி பூச்செடி கிழங்குகள் சிலவும் வாங்கினேன்.



 நிறைய Tools கடைகள் பார்க்க முடிந்தது. ரோஸ், ஜாதி மல்லி செடி வெட்ட cutter ஓன்றும் , காய்கறிகளை பறிக்க சின்ன cutter ஓன்றும் . தோட்டம் போட shovels, sprayer ஓன்றும் வாங்கினேன். மொத்தமாக ஒரு ஆயிரம் ரூபாய் காலி. பூச்சி கொல்லியாக மஞ்சள் கரைசல், துளசி சாறு கரைசல், வேப்பிலை கரைசல் தெளிக்கலாம் என்று வாங்கிய ஒரு சி.டியில் போட்டிருந்தது. அதற்கு தான் Sprayer.

‘தோட்டம்’, ‘காய்கறி’ என்று எழுத்தோடு கண்ணில் பட்ட அத்தனை புத்தகம் சி.டி என்று வாங்கி கொண்டிருந்தேன். இதில் ‘தொழிநுட்ப தோட்டக்கலை’ என்ற புத்தகத்திற்கு ’வருட சந்தா வேறு J. AQUARIUM FARM என்று ஒரு சி.டி. வெறும் Guppy Fish பற்றி எங்கேயோ சுட்ட வீடியோவை போட்டு அம்பது ரூபாய் மொய் எழுத வைத்து விட்டார்கள். “Organic Vegetable Gardening” என்று ஒரு சி.டி, கூகிளில் இருந்து விசயங்களை சுட்டு ஒரு கார்ட்டூனை போட்டு கடுப்பெற்றி இருந்தார்கள். இன்னொரு அம்பது ரூபாய் மொய் :-).
 
“Kitchen Gardening”  உருப்படியான ஒரு சி.டி. செடிகளுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் காய்கறிகளில் உறிஞ்சப்படும் chemical residue பற்றி கூறி, வீட்டுத்தோட்டத்தின் அவசியத்தை கூறுகிறது. வீட்டுத்தோட்டத்தில் பூசிகொல்லியாக வேம்பு, துளசி, மஞ்சள் பயன்படுத்தும் வகையையும் விளக்கமாக சொல்லி இருக்கிறார்கள்.


மதியம் வரை சுற்றிவிட்டு கிளம்பினோம். மறுபடியும் ரோஜா தோட்டம் வைத்து பார்க்கலாம் என்று ஒரு ஆசை (முன்பு ப்ளாப் ஆனதை ரோஜா பதிவில் சொல்லி இருந்தேன்). வெளியில் இருந்த நர்சரி கார்டனில் எல்லா கலரிலும் ஒன்னொன்னு என்று ஒரு பனிரெண்டு செடி வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.  

மறுபடியும் ஞாயிறும் ஒரு சுற்று சுற்றி விட்டு வந்தேன் . சனி ஞாயிறு இப்படியே போய்விட்டது. ரோஜா செடிகளை மாடியில் தொட்டிகளில் அன்றே வைத்து விட்டேன். ரொம்பவே பயனுள்ள ஒரு கண்காட்சி. முடிந்தால் அடுத்த வருடம் போய் பாருங்கள்.


2 comments:

  1. சிவா
    நானும் இப்போது தொட்டி.களில் தோட்டம் அமைத்துள்ளேன். கருணைக்கிழங்கு நட்டேன் தற்போது இரண்டடி உயரத்திற்கு வளர்ந்துள்ளது. மாவிஞ்சி (மா இஞ்சி) நட்டேன்​, நான்கு இலைகள் வந்துள்ளது. நாவல்பழம், செந்தூரா மாம்பழம் கொட்டைகளை முளைக்கப்போட்டேன். இப்போது முளை விட்டுள்ளது.

    இவை எல்லாவற்றையுமே சரவணா ஸ்டோரிலிருந்து வாங்கிய பிளாஸ்டிக் டப்பாக்களில் வைத்துள்ளேன்.

    nagu
    www.tngovernmentjobs.in

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் நாகு. நான் இன்னும் இஞ்சி, கருணைக்கிழங்கு முயற்சி பண்ணவில்லை. படம் இருந்தால் எடுத்து அனுப்புங்கள்.
      மாமரம் என்றால் நிறைய இடம் இருக்க வேண்டுமே. அப்போ பெரிய தோட்டம் அமைக்கலாமே?.

      Delete