Sunday, October 4, 2015

மாடித் தோட்டம் – Part-1 (தொடங்குவதற்கு முன்)



(புதிதாய் மாடித் தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டம் ஆரம்பிக்கும் நண்பர்களுக்காக இந்த குறுந்தொடரை ஆரம்பிக்கிறேன். இது உங்களுக்கு சிறிதளவாவது பயன்பட்டால் சந்தோசமே)

விகடனிலும் புதியதலைமுறையிலும் எனது ப்ளாக் பற்றி வந்த கட்டுரைகளை பார்த்து வந்த நிறைய அழைப்புகளில் இருந்து சில விஷயங்கள் புரிந்தது. ‘மாடித் தோட்டம்’ என்பது ஊடங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. எங்கு பார்த்தாலும் ‘ஆர்கானிக்’ ‘இயற்கை விவசாயம்’ என்ற கூக்குரல்கள். இங்கே வாங்கும் காய்கறி எல்லாமே விஷம். நீங்களே காய்கறியை வீட்டில் விளைவித்தால் தான் தப்பித்தீர்கள், இல்லாவிட்டால் எல்லா நோய்களும் உங்களுக்கு தான் என்பது போலான விளம்பரங்கள், விவாதங்கள். இங்கே தோட்டம் ஆரம்பிக்கிறேன் என்று வரும் கூட்டத்தில் பாதி இந்த மாதிரி விவாதங்களை கேட்டு பயந்து வரும் கூட்டமாக இருப்பது வருத்தப்படும் விசயமாகவே இருக்கிறது.

தோட்டம் என்பது ஒரு கலை. பொழுதுபோக்கு. ஆங்கில Gardening site  பார்த்து நிறைய ஆச்சரியப் பட்டிருக்கிறேன். அங்கே யாரும் ‘ஆர்கானிக்’ ‘ஆர்கானிக்’ என்று அலறுவதில்லை. ஒவ்வொரு காய்கறியையும், பூக்களையும் அவர்கள் முயற்சிப்பது, கற்றுக்கொள்வது, அதை ஒரு ‘Gardening Community’ வைத்து பகிர்ந்து கொள்வது என்று அதை hobby என்ற அளவில் செய்வது அழகு. இவ்வளவு அருமையான ஒரு பொழுதுபோக்கை கூட அதற்குண்டான ரசனையை அழித்து அதையும் ஒரு வியாபார வட்டத்தில் கொண்டு வந்து விட்டார்கள். நாம் இங்கே ‘ஆர்கானிக்’ பற்றி கவலைப்பட நிறைய காரணங்கள் இருந்த போதும், அது மட்டுமே தோட்டம் ஆரம்பிக்க ஒரே காரணமாக நிறைய பேர் எடுத்து கொள்வதில் தான் பிரச்னை.

எந்த வித அடிப்படை ஆர்வமோ, அதற்குண்டான நேரமோ ஒதுக்காமல் மாடித் தோட்டம் ஆரம்பிக்கும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இது வழக்கம் போல ஒரு சிலரால் ஒரு பெரிய  வியாபார வட்டத்தை உருவாக்க பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்கள் நோக்கம் ‘ஊரெல்லாம் பூச்சிக்கொல்லி தெளித்த காய்கறிகள். அத சாப்பிட்டுட்டு சாவாதீங்க. கவலைப்படாதீங்க. நாங்க இருக்கோம்’ என்பது தான். மக்கள் எல்லாம் இப்போது கொஞ்சம் செழிப்பாக இருப்பதால் காசை பற்றி கவலைப்படாமல், நல்லதா ஆர்கானிக் கத்தரிக்கா நாலு கெடைச்சா போதும் என்று 20,000-ம், 30,000-ம் என்று செலவு பண்ணி ட்ரிப் செட் எல்லாம் போட்டு ஒரு பத்து அடி தள்ளி நின்று ஆர்கானிக் கத்தரிக்காய்க்கு காத்திருக்க ஆரம்பித்து விட்டார்கள்.

சிலர் ‘டெய்லி ஒரு பத்து நிமிடம் செலவழிச்சா போதுமா’ என்று கேட்கிறார்கள். மக்கள் அவ்ளோ பிசியாகி விட்டார்கள் போல என்று நினைத்துக் கொள்வேன். சென்னை அப்பார்ட்மென்ட் வாழ்க்கையில் இருந்து கோவை வந்த பிறகு நான் ஒழித்துக் கட்டிய இரண்டு விசயங்கள். ஓன்று கிரிக்கெட் பார்ப்பது. இரண்டாவது டி.வி நிகழ்ச்சிகள் பார்ப்பது. இப்போது எனக்கு நிறையவே நேரம் கிடைக்கிறது. (காலையில் நான் வார நாட்களில் 1 ½ மணி நேரமும், வார இறுதி நாட்களில் 4 மணி நேரமும் தோட்டத்திற்க்காக செலவழிக்கிறேன்). தோட்டம் என்றால் ஒரு நாளைக்கு குறைந்தது அரைமணி நேரம் செலவிட முடியுமா என்று பாருங்கள். வார இறுதி நாட்களில் குறைந்தது இரண்டு மணி நேரம் தேவைப்படும். அப்போது தான் உங்களால் தோட்டத்தில் உருப்படியாக எதாவது கொண்டுவர முடியும்.  

ஆர்கானிக் காய்கறிகள் வேண்டும் என்பது மட்டும் தான் தோட்டம் ஆரம்பிக்க ஒரே காரணம் என்றால் இப்போது ஐயா நம்மாழ்வார் படத்தை ஒட்டிக்கொண்டு, மூன்று மடங்கு விலையோடு ‘இயற்கை விளைபொருளகம்’ என்ற பெயரில் எக்கச்சக்க ஆர்கானிக் ஸ்டோர் முளைத்து இருக்கிறது. அங்கே உருப்படியாக ஏதும் கிடைக்கிறதா என்று பார்க்கலாம். சில வருடங்களுக்கு முன்பு இப்படித் தான் மக்களுக்கு திடீரென்று இயற்கை மீது அதீத பற்று வந்து எங்கு பார்த்தாலும் மணத்தக்காளி சூப், தூதுவளை சூப் என்று நிறைய சூப் கடைகள் முளைத்தன. பிறகு காணமல் போய்விட்டன. அதே போல் இப்போது மாடித் தோட்டம் சீசன்.

இங்கே இயற்கையை காப்பாற்ற கிளம்பி இருக்கும் சில முகநூல் குழுக்கள் கூட Gardening Kit என்ற பெயரில் எதையாவது மக்கள் தலையில் கட்டவே பார்க்கிறார்கள். தோழி ஒருவர் ‘சென்னை மாடித்தோட்டம் முகநூல் குழு ஓன்று பத்து பைகள் அடங்கிய Gardening Kit ஓன்று Offer-ல் Rs.1800 –ல் கொடுக்கிறார்கள். வாங்கவா சிவா’ என்று என்னிடம் கருத்துக் கேட்டார். ஆடித் தள்ளுபடி போல.  (இதில் நிறைய கதைகள் இருக்கிறது. அடுத்த பதிவில் நிறைய பார்க்கலாம்). உங்களிடம் நிறைய காசு இருந்தா என்னிடம் கொடுங்கள். கஷ்டபட்ட மக்கள் நிறைய இருக்கிறார்கள். ஏதாவது உதவி செய்யலாம் என்று சொல்லி வைத்தேன். சிலரின் வியாபார நோக்கத்திற்காக உருவாக்கப்படும் வட்டத்தில் மாட்டி, தொடக்கத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் நிஜமான ஆர்வம் உள்ள நிறைய நண்பர்கள் தோற்று பின்வாங்குவது கவலை தரும் விசயமாக இருக்கிறது.

நேரம், ஆர்வத்திற்கு அடுத்தபடியாக தேவை நமது சொந்த முயற்சி. இது ரொம்பவே முக்கியம். தொடக்கத்தில் அடிப்படை விவரங்களுக்கு மற்ற நண்பர்களின் முயற்சி பற்றிய விவரங்கள் நிறையவே பயன்படும். ஆனாலும் நம் சொந்த முயற்சிகளும் அதன் வெற்றி தோல்விகளும் தான் தோட்டத்தை சுவாரசியம் ஆக்கும். சில நண்பர்கள் என்னிடம் முதலில் விடுக்கும் வேண்டுகோளே ‘ஏதாவது புத்தகம் இருந்தா கொடுங்க. இல்லன்ன ஏதாவது PDF Document-ஆவது இருந்தா கொடுங்க’ என்பது தான். எல்லாவற்றையுமே step-by-step procedure-அகவே  (இரண்டு நிமிடம் மேகி நூடுல்ஸ் செய்வதில் இருந்து) செய்து பழக்கப்பட்டுவிட்ட நமக்கு தோட்டத்திற்கும் அதே போல ஒரு எதாவது இருந்தால் வேலை எளிதாக முடியும் என்றே நினைக்க தோன்றுகிறது. இயற்கை நம்மை அவ்வளவு எளிதாக விடுவதில்லை. சும்மா ரெண்டு புத்தகம் படித்து இத்தனை நாட்களுக்கு ஒரு முறை இந்த உரம் போட்டால் இந்தனை கிலோ அறுவடை செய்யலாம் என்று எல்லாம் எளிதாக செய்ய முடியாது. இன்றைக்கும் நான் தவறாமல் ஆப்பு வாங்கி கொண்டிருக்கும் சில காய்கறிகள் இருக்கத் தான் செய்கிறது. அதற்காக தோட்டம் என்பது கடினமும் அல்ல. நல்ல விதையில் இருந்து நாற்று எடுத்து, நல்ல வெயில் படும் இடத்தில், நல்ல வளமான மண்ணோ, வளர்ப்பு ஊடகமோ வைத்து, நாம் ஆர்வமாய் வளர்க்கும் செடி நன்றாகவே வரும்.

நான் மேலே கூறியபடி நீங்கள் உண்மையிலேயே ஆர்வத்தில் தோட்டம் ஆரம்பிக்க நினைத்து, உங்களால் தேவையான நேரம் ஒதுக்க முடியும் என்றால் எளிதாக வெற்றி பெறலாம். இல்லாவிட்டால் ‘இரண்டாயிரம் ரூபாய் செலவளித்தேன். கடைசியில் ஒரு கிலோ தக்காளி கூட கிடைக்கலை’ என்று ஒரு புலம்பலோடு உங்கள் தோட்டம் ஒரு ஓரமாய் ஒதுங்கிவிடும்.  

அடுத்த பதவில் ‘வளர்ப்பு ஊடகம்’ (Growing Media) பற்றி விவரமாக பார்க்கலாம்.

(தொடரும்)           

46 comments:

  1. பதிவு சுவாரசியமா இருக்கு. யாரைக் குறை சொல்வது, எல்லாமும் வியாபாரமாகிவிட்டது. முதலில் தோட்டத்தை மனதுக்குப் பிடித்தமான ஒன்றாக மாற்றிக்கொள்ள வேண்டும், பிறகுதான் அறுவடை பற்றி யோசிப்பதெல்லாம் !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மேடம். ஆர்வமுள்ள நண்பர்கள் ஒரு குழுவாய் தொடர்பில் இருந்து, நமக்கும் விவரங்களை பகிர்ந்து கொள்ளும் போது இந்த வியாபார வட்டத்தை எளிதாய் உடைக்கலாம். பார்ப்போம்.

      Delete
  2. இத இத இதத்தான் எதிர்பார்த்தேன். அருமையான பதிவு. தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா. மிக்க நன்றி கலை :). உங்களது பக்கத்தில் எனது ப்ளாக் லிங்க் கொடுத்ததற்கும் நன்றி.

      Delete
  3. ஆரம்பமே அசத்தல்+சுவாரஸ்யம். பயனுள்ள பதிவு சிவா. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரியா. என்ன மடலையே காணோம்? செடிகள் ஏதும் புதிதாய் முயற்சித்து இருக்கிறீர்களா?

      Delete
  4. அருமையான முயற்சி தொடரட்டும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. Replies
    1. நல்லது நண்பரே. சீக்கிரம் அடுத்த பதிவை எழுத பார்க்கிறேன்.

      Delete
  6. great sir, facebookla pakkanum neenga comedya. kaalan mulaikiramari neraya organic sellers. avanga fix panra rate than highest comedye.nice for spreading this awareness
    Grow Green

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம். நான் facebook-ல இல்லாததால் சில நண்பர்கள் கொடுக்கும் தகவலை பார்க்கும் போது நிறைய தகவல்கள் யாரும் முயற்சி செய்யாமலே தகவலை கொடுக்கிறேன் என்ற அடிப்படையிலேயே பகிர்ந்து கொள்ள படுகிறது. சில கிட் விலைகளை பார்த்தால் தலை சுற்றுகிறது. மக்கள் எப்படித் தான் யோசிக்காமல் அவ்வளவு விலை கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

      Delete
  7. சிவா, நல்ல பதிவு ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தமானது, ஆழமானது. தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்,மிகவும் பயனுள்ள பதிவு. உண்மையாக ஆர்வதுனடனும், அக்கறையுடனும் செய்தால் வெற்றி நிச்சயம். அதற்க்கு நீங்கள் ஒரு உதாரணம், இது புகழ்ச்சியல்ல. முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்பது முற்றிலும் உண்மை.

    இன்று எல்லாமே வியாபாரம்தான், நாம்தான் கவனத்துடன் இந்த வியாபார உலகில் இருக்கவேண்டும். இப்பொழுது ஆர்கானிக் என்பது விளம்பரங்களிலும், விற்கும் பொருள்களின் மேல் உரைகளில்தான் உள்ளது.

    முயற்சிக்கு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராஜேஷ். நிறைய நண்பர்களிடம் பேசியதில் அவர்கள் புரிதலில் நிறைய இடைவெளி இருப்பதாக தெரிந்தது. அது சிலருக்கு வியாபாரம் செய்ய மட்டுமே பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் தான் இந்த தொடரை ஆரம்பித்தேன் .

      Delete
  8. Hi Siva, EXCELLENT !! article.

    முன்பு 59 grow bag (20ltr water can) use paninen. முள்ளங்கி கீரை வகைகள் மற்றும் சின்ன வெங்காயம் மட்டுமே அறுவடை செய்தேன். மற்றவை எல்லாம் failure. உங்கள் article(about growing மீடியா ) படித்து அதன் பிறகு கலந்த கலவையில், இப்பொழுது போட்டு இருக்கும் செடிகள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. காய் வந்த பிறகு தன தெரியும். நான் இப்பொழுது 26 grow bag, rs 2750 வாங்கியுள்ளேன் (வித் verimicompost+redsand+cocopit +country seeds + 50 குழி சீடிங் tray ). இப்போ மொத்தம் 80 grow bag

    எனிடம் பேசுபவர்கள்
    1.உங்க அளவுக்கு டைம் ஸ்பென்ட் முடியாது ?.

    2. சென்னை வெயில்ல இது கொஞ்சம் சிரமம்?

    3. ரூ 3000/4000 செலவு செய்தால் அதற்கு உண்டான பலன் இருக்குமா?

    4. 3 அ 4 மாதம் வெயிட் பன்னுமா, உடனே(1 month ) பலன் தர மாதிரி ஏதாவது இருக்கா.

    5. வருடம் முழுவதும் காய் கீரை மார்க்கெட்ல வாங்கம இருக்கலாமா

    6. ETC

    நான் சொலும் ஒரே பதில். இது hobby-யா இருந்து இப்ப அது passion-அ மாறிடுச்சி. சென்னைல, family-யோட ஒரு படத்துக்கு போனா 700 முதல் 1000 ரூ செலவாகுது. 3 படத்த கட் பண்ணுனா ஒரு மாடிதோட்டம் அமைக்கலாம்.

    சிவா இந்த முறை நானே ட்ரிப் சிஸ்டம் செய்தேன். செலவு ரூ 140. சுச்செச்ஸ் ஆகி விட்டது(ஊருக்கு போறபோது மட்டும் use பண்ணினேன்). வளர்ப்பு மீன் கடையில் கடையில் இருந்து AIR controller (3ரூ ), T joint, bend எல்லாம் வாங்கி வந்து இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணலாம் என்று இருக்கிறேன். உங்களுக்கு photo அனுபலாம் என்றுரிகேறேன். அனுப்பட்டுமா ?

    Thanks with Regards,
    Vallamuthu M.

    ReplyDelete
    Replies
    1. விரிவான கருத்துக்கு நன்றி நண்பரே. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இங்கே மால்களுக்கு ஒரு படம் படம் பார்க்க நீங்க சொல்வது மாதிரி ஆயிரம் ரூபாய் ஆகிறது. இருபது ரூபாய் பெறாத பாப் கார்னை 130 ரூபாய் கொடுத்து வாங்க மக்கள் தயங்குவது இல்லை. மூன்று படம் கட் செய்தால் ஒரு மாடித் தோட்டம் தயாராகி விடும்.

      நீங்கள் கொடுத்திருக்கும் கேள்விகள் எல்லாம் எனக்கும் வந்திருக்கிறது. அதை வரும் பதிவுகளில் பேசலாம்.

      ட்ரிப் சிஸ்டம் அமைத்திருக்கிறீர்களா. சூப்பர். எனக்கு பெரிதாய் ட்ரிப் சிஸ்டம்-ல் விருப்பம் இல்லை. ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி ஊருக்கு போனால் ஒரு நாலு நாளைக்கு தோட்டத்தை யார் பார்த்துக்கொள்வார்கள் எனது ஒரு பெரிய பிரச்னை. இதனாலையே ஊருக்கு போக மனசு வருவதில்லை. ட்ரிப் சிஸ்டம் மூலம் ஒரு இரண்டு நாள் பார்த்துக் கொண்டால் போதும். கண்டிப்பாக உங்கள் முயற்சிகளையும் விவரங்களையும் அனுப்புங்கள். நானும் முயற்சிக்கிறேன்.

      Delete
    2. திரு வல்லமுத்து மாதேஸ்வரன்,

      நானும் சென்னையில் இப்போது தான் மாடித்தோட்டம் முயற்சிக்கிறேன்.

      முதல் முயற்சியாக 10 பைகளில் கோகோ பீட் , செம்மண், மண்புழு உரம் கலவையில் ஆக்செம்

      விதைகளுடன் துவங்கி இருக்கிறேன். நீங்களும் சென்னை என்பதால் நேரில் ஒருமுறை சந்திக்க

      வாய்ப்பிருந்தால் அனுபவ பகிர்வுக்கு உதவியாக இருக்கும்.

      என் மின்னஞ்சல் முகவரி arishm247@gmail.com

      Delete
  9. அருமையான பதிவு.

    ReplyDelete
  10. நல்ல பதிவு அண்ணா. அம்மா வீட்டில் வீட்டை சுற்றி தோட்டம் போடுவோம் அம்மாவும் நானும். ஆனால் காய்கறி போடுவதில்லை.
    பச்சை மிளகாய், கறிவேப்பிலை, எலுமிச்சை மட்டும் காய்கனி லிஸ்டில் மற்றவை எல்லாம் பூச்செடிகள் தான்.
    இங்கு வந்து ஒரு சின்ன ரோஸ் கூட வைக்க முடியலை. நல்ல தொடர் அண்ணா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அபி. பூச்செடிகள் நிறைய வைக்க எனக்கும் ஆசை தான். இடம் தான் போதவில்லை. அடுத்த முறை கொஞ்சமாவது கலர்புல்லா தோட்டத்தை காட்ட முயற்சிக்கணும் :)

      முடிந்தால் சின்னதாய் ஒரு தோட்டம் ஆரம்பிக்கலாமே.

      Delete
  11. மிகவும் பயனுள்ள தொடர்.. அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. .I have waited for last 10 days for your next page. It is very useful for many people like us. Good start.

    ReplyDelete
    Replies
    1. Thanks Madam. Happy to have you and your family visited the garden two weeks back. Did you get all the required materials and started something?

      Delete
  13. அருமை அண்ணா இதை தான் எதிர்பார்த்தேன் தொடங்கி விட்டீர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்னை போன்றவர்களுக்கு ஊக்கமாகவும் இருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணா. எனக்கு தெரிந்ததை, கற்றுக் கொண்டதை பகிர்ந்து கொள்கிறேன். உங்களை போல சிலருக்கு பயன்பட்டால், அதன் மூலம் இரண்டு பேர் மாடித் தோட்டம் வெற்றிகரமாக துவங்கினால் மகிழ்ச்சி.

      Delete
  14. அருமையான பதிவு அண்ணா அடுத்த பதிவுக்காக காத்து இருக்கிறேன

    ReplyDelete
  15. சிவா அண்ணா வணக்கம்
    அருமையான பதிவு அண்ணா
    தோட்டம் அமைக்க ஆர்வத்தை ஏற்படுத்தும் அதே நேரத்தில் இது போன்ற விழிப்பணர்வை ஏற்படுத்தும் பதிவுகளும் அவசியம் அண்ணா

    மக்களுக்கு மாடித்தோட்டம் அமைப்பதில் உள்ள ஆர்வத்தை பயன்படுத்தி வியாபாரம் செய்பவர்கள் பெருகி விட்டார்கள். நீங்கள் சொல்வது போல சோம்பேறித்தனமாக யோசிப்பவர்கள் ஏமாந்தால் கூட பரவாயில்லை.. உண்மையான ஆர்வம் கொண்டவர்களும் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் ஏமாந்து விடுகிறார்கள்..
    அதிக செலவு செய்து மாடித்தோட்டம் அமைப்பது பணக்காரர்கள் வேண்டுமானால் ஒரு உடற்பயிற்சி செய்வது போல நினைத்து அமைத்து பராமரிக்கலாம். ஆனால் நடுத்தர மக்கள் வரவு செலவு பார்த்து அமைப்பது நல்லது... முடிந்த வரை செலவு இல்லாமல் தோட்டம் அமைத்துக்கொள்வது நல்லது.. எடுத்த உடனேயே நமது முழு தேவையையும் பூர்த்தி செய்ய முடியும் என நினைக்க வேண்டாம். கற்றுக்கொள்ள ஆர்வமும் பொறுமையும் இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம்.
    நல்ல தொடர் அண்ணா.. தொடருங்கள்.
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி இசக்கி. நீ சொல்வது மாதிரி தோட்டம் என்பது ஒரு சாதாரண விசயமாக இருக்க வேண்டும். அது ஏதோ பணக்காரர்கள் பொழுது போக்கு மாதிரி மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நம்மை போல ஆர்வம் உள்ள நண்பர்கள் ஒன்றிணைந்தால் ஓரளவுக்கு விழிப்புணர்வு கொண்டுவரலாம். தகவல்களை பரிமாறிக் கொண்டால் இது போன்ற காசு பறிக்கும் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம். இல்லாவிட்டால் நமக்கே ஆப்பு வைத்து நம்மையே அலையவிட்டு விடுவார்கள்.

      Delete
    2. Hats off Siva Anna..
      well Needed Article..

      Delete
  16. Siva,
    well said.Nice article @ right time..

    ReplyDelete
  17. சரியான் நெத்தியடி சிவா. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நெத்தியடி என்பதை விட உண்மையான ஈடுபாட்டோடு இருக்கும் சிலரையும் தோட்டம் பொருட்களுக்கு அலைய விட்டு விடுவார்கள் போல. அதை நிறுத்த நாம் ஒன்றாய் முயற்சிப்போம்.

      Delete
  18. Excellent article! Nothing more agree on organic farming drama especially in Chennai - shops have mushroomed in every street. I'm attempting maadi thottam and missing one or other thing... I'm sure this blog will clarify few of my doubts.

    ReplyDelete
    Replies
    1. Thanks Sundar. Please let me know if you have any question later

      Delete
  19. Replies
    1. Hi, I have given my number in the blog header. Please check

      Delete
  20. I have an idea for grow bag. I want to share it with you. Usually the flex board are used for one week. That cannot be reused. With that screen we can cut & fold to make small as our desired size. I think the screen will not allow water pass through . it may be very cheap. Really I am going to try it. If it get succesfull I will post my experience. I expect any suggestion related to this.
    B.Jeevanandam, Bodinayakamur,Theni
    9600525626
    bjeevanandam@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Hi, that is really good idea too reuse the flex board sheets. My only query is, how much it will withstand the weather and watering. If it come good for one or two yield that will be sufficient for us. Keep me posted on how it comes

      Delete