Saturday, October 10, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் - வெள்ளரிப்பழம்



முலாம்பழத்தை அடுத்து இந்த சீசனின் அடுத்த புது வரவு. இது வெள்ளரிக்காய் பதிவாக வரவேண்டியது, பழமாகி போனது ஒரு சின்ன குழப்பத்தில். அந்த குழப்பத்தால் ஒரு அருமையான பழத்தை பல வருடங்களுக்கு பிறகு ருசிக்க முடிந்தது.  

இந்த ஜூன் சீசன் தொடக்கத்தில் வெள்ளரியையும், சுரைக்காயையும் ஒரு பாத்தியில் போட்டு விட்டிருந்தேன். வெள்ளரி நன்றாக பிடித்து வளர்ந்து வந்தது. சுரைக்காய் இலையும் கிட்டதட்ட வெள்ளரி இலை போலவே இருந்ததால் பெரிதாய் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. வெள்ளரி பூத்தாலும் பூ பிஞ்சி ஏதும் பார்க்க முடியவில்லை.

ஒரு நாள் கீழே படத்தில் இருக்கும் பிஞ்சி ஓன்று கண்ணில் பட்டது. அதன் வடிவத்தை பார்க்க ஏக குழப்பம். வெள்ளரிக்காய் மாதிரி இல்லை. கொஞ்சம் குடுவை வடிவத்தில் சுரைக்காய் மாதிரி இருந்தது. அதனால் அப்படியே விட்டுவிட்டேன். ஒரு கட்டத்தில் அதன் காம்பு பகுதியை பார்த்தால் வெம்பி விடும் என்று தான் நினைத்திருந்தேன். அப்படி ஏதும் நடக்காமல் காய் பெரிதாகிக் கொண்டே வந்தது. நன்றாக முற்றிய பிறகு தான் அது சுரைக்காய் இல்லை என்று தெரிந்தது. அதன் பிறகு அதை பறித்து பயனில்லை என்று அப்படியே விட்டுவிட்டேன்.




அதுவும் முற்றி நிறம் கொடுக்க ஆரம்பித்தது. அப்படி ஒரு மஞ்சள் நிறம். ஒரு மஞ்சள் பையை, மேலே ஒரு முடிச்சு போட்டு கட்டித் தொங்க விட்டால் எப்படி இருக்கும். அப்படி தான் இருந்தது பழம். பொதுவாய் கடைகளில் கிடைக்கும் வெள்ளரி அவ்வளவு மாவு தன்மை இருக்காது. அதனால் பழமும் அப்படி தான் இருக்கும் என்று நினைத்து பெரிதாய் ஏதும் எதிர்ப்பார்க்கவில்லை.

நல்ல மஞ்சள் நிறம் கொடுத்ததும், லேசாய் அழுத்தி பார்த்து பழுத்து விட்டதென்று தெரிந்ததும் பறித்து வெட்டினால் ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. பழம் அவ்ளோ மாவாய் வெண்ணை மாதிரி, நல்ல மணத்தோடும். ஒரு ஸ்பூன்-அ வச்சி அப்படியே வெட்டி வெட்டி சாப்பிடலாம்.  

‘இந்த மாதிரி ஒரு பழத்தை சாப்பிட்டு ஒரு இருபது வருடம் இருக்கும்’ என்று எங்க வீட்டில் ஒரே சந்தோசம். எனது பள்ளிக் காலங்களில் ஊரில் பக்கத்து கிராமங்களில் (ஆழ்வார் தோப்பு, திருக்களூர்) இருந்து நார் பெட்டியில் வைத்து வெள்ளரி பிஞ்சி விற்க வருவார்கள். அப்போ சிலநேரம் இந்த மாதிரி வெள்ளரிப்பழத்தை ஒரு வாழை இலையில் சுற்றி கொண்டு வருவார்கள். அதை வாங்கி, சின்ன சின்னதாய் வெட்டி சீனி போட்டு சாப்பிடுவோம். எங்களுக்கு அவ்ளோ ருசியான ஒரு பண்டம் அது. பல காலங்களுக்கு பிறகு அப்படி ஒரு பழம் பார்க்க முடிந்ததில் இந்த சீசன் ஒரு சிறப்பு பெற்று விட்டது. அதுவரை சிலவற்றை பிஞ்சாக பறித்துக் கொண்டிருந்தோம். இந்த பழம் பறித்த பிறகு, எல்லாவற்றையும் பழுக்க விட்டே பறிக்க ஆரம்பித்தோம்.

இந்த விதை நாட்டு விதைகள் என்று நண்பர் பரமேசிடம் வாங்கியது. அவருக்கு ஒரு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இனி எல்லா சீசனிலும் தவறாமல் இடம் பெற போகும் ஒரு செடியாகி விட்டது. இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறையோடு.









 













28 comments:

  1. எவ்ளோ நாளாச்சு நம்ம ஊர் வெள்ளரி பழத்தைப் பார்த்து ! பரவாயில்லை, அழுகாமல் பழமாகிப்போனதே !!

    ஊரில் எங்கள் தண்ணீர் பங்கு நிலத்தில் ஒருவர் வெள்ளரி போடுவார். நேரிலேயே போய் விதவிதமான டிசைன்களில் பிஞ்சுகளையும், தோட்டத்திலேயே வெடித்திருக்கும் வெள்ளரி பழங்களையும் பறித்து வருவோம். 'பழத்தின் சதைப்பகுதி மணல் மாதிரி இருக்கணும்'னு சொல்லுவாங்க. பிட்டுபிட்டு உடைத்துதான் சாப்பிடுவோம். அதன் மினுமினுப்பு இன்னும் கண்ணிலேயே இருக்கிற‌து.

    அடுத்த தடவை நிறைய காய்த்தால் ஒரு பழத்தை மட்டுமாவது தானாக வெடிக்கும்வரை விட்டுவைத்து சாப்பிட்டுப் பாருங்க.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். சதை பகுதி மாவு மாதிரி உதிரியாக இருக்கணும். அப்போ தான் ருசி. வெடிக்கும் வரை விட ஆசை தான். ஆனால் நாம் கவனிக்காமல் விட்டு ஏதும் பூச்சி, பறவைகள் தின்று விட்டால் காத்திருந்து வீணாய் போய் விடும் என்று ஒரு பயம் :) . அடுத்த முறை விட்டு பார்க்கலாம்.

      Delete
  2. ஆஹா அடுத்து வெள்ளரியா? சூப்பர்.நேற்று திடீரென்று கோவை பயணம் உடன் வந்தவர்களிடம் உங்கள் தோட்டத்தை பற்றி தான் சொல்லி கொண்டிருந்தேன். படங்களையும் காட்டினேன். அருமையாக இருப்பதாக சொன்னார்கள். வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அபி. கோவை வந்தீர்களா. நல்லது. நீங்கள் என்ன திருப்பூரா பொள்ளாச்சியா?

      Delete
    2. நான் தேனி அண்ணா.

      Delete
    3. நல்லது. நல்ல செழிப்பான தோட்டம் சார்ந்த பூமியில் தான் இருக்கிறீர்கள்.

      Delete
  3. ஆஹா..பழத்தைப் பார்க்கவே அவ்ளோ அழகா இருக்கு! எதிர்பாராத ஆச்சரியங்கள் எப்பவுமே அதிக சந்தோஷம்தான்..என்ஸாய்!! :)

    ReplyDelete
    Replies
    1. உண்மை மகி. எதிர்பாராத ஆச்சரியங்கள் எப்பவுமே தோட்டத்தில் உண்டு :)

      Delete
  4. வித்தியாசம் ஆன வடிவில் வெள்ளரி பழம். அருமை அருமை.

    ReplyDelete
  5. ஆஹா ... சூப்பர் ..

    ReplyDelete
  6. Replies
    1. நன்றி. அங்கே தோட்டத்தில் செடிகள் எல்லாம் காய்த்து விட்டதா?

      Delete
  7. வெள்ளரியைப் பழுக்க விடுவதால் இன்னொரு லாபமும் உண்டு. அடுத்த பருவத்திற்கான விதையும் நமக்கு கிடைத்து விடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். நாட்டு விதைகள் என்பதால், ஏற்கனவே இந்த விதைகளை எடுத்து வைத்து விட்டேன்.

      Delete
  8. அருமை சிவா அண்ணா
    படங்களை பார்க்கும் போதே வெள்ளரி சாப்பிட வேண்டும் போல் உள்ளது.... விதை இருக்கிறது... மாடி என்பதால் பந்தலை தயார் செய்து விட்டு விதைத்து விட வேண்டியதுதான்.... அருமையாக உள்ளது... வாழ்த்துக்கள் அண்ணா....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இசக்கி. கொஞ்சம் காயத்தாலும் சில பழங்கள் எடுக்க முடிந்ததால் திருப்தியாக அமைந்து விட்டது இந்த வெள்ளரி.

      Delete
  9. சிவா, உண்மையில் பிஞ்சை பார்க்கும்போது ரிசல்ட் இந்த அளவு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, அசத்தல். பிஞ்சும், பூவும் என்ன ஒரு அழகு, நல்ல முயற்சி , நல்ல பலன். பார்பதற்கு பப்பாளி பழம் போல் உள்ளது.

    அடுத்து முயற்சி திராட்சை பழம் அறுவடை செய்யுங்கள், நீங்கள் முயற்சித்தால் அதுவும் சாத்தியமே.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ராஜேஷ். அந்த பிஞ்சை பார்க்கும் போது சரியாய் வராது என்று தான் நினைத்தேன். கடைசியில் அது தான் எல்லாவற்றிலும் பெரிதாய் வந்தது.

      திராட்சை ஒன்றும் வைத்திருக்கிறேன். இப்போது தான் வைத்திருக்கிறேன். பார்ப்போம். எப்படி வருகிறது என்று :)

      Delete
  10. அண்ணா, நானும் கோவை தான். இந்த வெள்ளரி விதை, உங்களிடம் மீதி இருந்தால் எனக்குத் தரவும்.
    நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் விதைகளை எடுத்து வைத்திருக்கிறேன். தனி மடல் ஓன்று அனுப்புங்கள்.

      Delete
  11. parkave asaiyaka uilathu sir. i too remember vellari palam with sugar in my childhood. nayabagam varudhe song rewinding sir. Mikka nandri

    ReplyDelete
    Replies
    1. Thanks Madam. We are missing most of such nice snacks now. Nowadays the kids knows mostly the junk food comes as snacks

      Delete
  12. hi sir nan ragu tirupur, ennaku nala kudaimilagai and vellari seeds veenum ennga kidaikum?

    ReplyDelete
  13. hi sir i am ragu from tirupur, can i speak with you if any doubt in gardening?

    ReplyDelete
    Replies
    1. Hi,

      Please check the below posts regarding seeds,

      http://thooddam.blogspot.in/2014/04/2.html

      http://thooddam.blogspot.in/2015/06/blog-post.html

      You can call me on Sunday morning. I have given my number in the top (blog banner). Meantime you can mail me with your queries.

      Delete
  14. சிவா! ஈழத்தில் இந்தவகை வெள்ளரி அரிது. 30 வருடங்களுக்கு முன் நான் கண்டது, உண்டது - சுமார் 1 1/2 அடி நீளம், 6-8 அங்குல விட்டத்துடன, நல்ல நீளமானது , நிறம் பச்சையில் மஞ்சள் சித்திரக் கோடுகள், பழுத்தால் வெடித்து விடும், பனையோலைக் குடலிகளில் விற்பனைக்குக் கொண்டுவருவார்கள், மணம் ஊரைத் தூக்கும். சீனி, வெல்லம், பனங்கட்டி போட்டு உண்போம்.
    உங்கள் ஆர்வத்துக்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete