(புதிதாய் மாடித் தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டம் ஆரம்பிக்கும்
நண்பர்களுக்காக இந்த குறுந்தொடரை ஆரம்பிக்கிறேன். இது உங்களுக்கு சிறிதளவாவது
பயன்பட்டால் சந்தோசமே)
விகடனிலும் புதியதலைமுறையிலும் எனது ப்ளாக் பற்றி வந்த கட்டுரைகளை
பார்த்து வந்த நிறைய அழைப்புகளில் இருந்து சில விஷயங்கள் புரிந்தது. ‘மாடித்
தோட்டம்’ என்பது ஊடங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. எங்கு பார்த்தாலும்
‘ஆர்கானிக்’ ‘இயற்கை விவசாயம்’ என்ற கூக்குரல்கள். இங்கே வாங்கும் காய்கறி எல்லாமே
விஷம். நீங்களே காய்கறியை வீட்டில் விளைவித்தால் தான் தப்பித்தீர்கள்,
இல்லாவிட்டால் எல்லா நோய்களும் உங்களுக்கு தான் என்பது போலான விளம்பரங்கள்,
விவாதங்கள். இங்கே தோட்டம் ஆரம்பிக்கிறேன் என்று வரும் கூட்டத்தில் பாதி இந்த
மாதிரி விவாதங்களை கேட்டு பயந்து வரும் கூட்டமாக இருப்பது வருத்தப்படும் விசயமாகவே
இருக்கிறது.
தோட்டம் என்பது ஒரு கலை. பொழுதுபோக்கு. ஆங்கில Gardening site பார்த்து நிறைய ஆச்சரியப்
பட்டிருக்கிறேன். அங்கே யாரும் ‘ஆர்கானிக்’ ‘ஆர்கானிக்’ என்று அலறுவதில்லை.
ஒவ்வொரு காய்கறியையும், பூக்களையும் அவர்கள் முயற்சிப்பது, கற்றுக்கொள்வது, அதை
ஒரு ‘Gardening Community’
வைத்து பகிர்ந்து கொள்வது என்று அதை hobby என்ற
அளவில் செய்வது அழகு. இவ்வளவு அருமையான ஒரு பொழுதுபோக்கை கூட
அதற்குண்டான ரசனையை அழித்து அதையும் ஒரு வியாபார வட்டத்தில் கொண்டு வந்து விட்டார்கள். நாம்
இங்கே ‘ஆர்கானிக்’ பற்றி கவலைப்பட நிறைய காரணங்கள் இருந்த போதும், அது மட்டுமே
தோட்டம் ஆரம்பிக்க ஒரே காரணமாக நிறைய பேர் எடுத்து கொள்வதில் தான் பிரச்னை.
எந்த வித அடிப்படை ஆர்வமோ, அதற்குண்டான நேரமோ ஒதுக்காமல் மாடித்
தோட்டம் ஆரம்பிக்கும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இது வழக்கம் போல ஒரு
சிலரால் ஒரு பெரிய வியாபார வட்டத்தை
உருவாக்க பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்கள் நோக்கம் ‘ஊரெல்லாம் பூச்சிக்கொல்லி
தெளித்த காய்கறிகள். அத சாப்பிட்டுட்டு சாவாதீங்க. கவலைப்படாதீங்க. நாங்க
இருக்கோம்’ என்பது தான். மக்கள் எல்லாம் இப்போது கொஞ்சம் செழிப்பாக இருப்பதால்
காசை பற்றி கவலைப்படாமல், நல்லதா ஆர்கானிக் கத்தரிக்கா நாலு கெடைச்சா போதும் என்று
20,000-ம், 30,000-ம் என்று செலவு பண்ணி ட்ரிப் செட் எல்லாம் போட்டு ஒரு பத்து அடி தள்ளி
நின்று ஆர்கானிக் கத்தரிக்காய்க்கு காத்திருக்க ஆரம்பித்து விட்டார்கள்.
சிலர் ‘டெய்லி ஒரு பத்து நிமிடம் செலவழிச்சா போதுமா’ என்று
கேட்கிறார்கள். மக்கள் அவ்ளோ பிசியாகி விட்டார்கள் போல என்று நினைத்துக் கொள்வேன்.
சென்னை அப்பார்ட்மென்ட் வாழ்க்கையில் இருந்து கோவை வந்த பிறகு நான் ஒழித்துக்
கட்டிய இரண்டு விசயங்கள். ஓன்று கிரிக்கெட் பார்ப்பது. இரண்டாவது டி.வி
நிகழ்ச்சிகள் பார்ப்பது. இப்போது எனக்கு நிறையவே நேரம் கிடைக்கிறது. (காலையில் நான்
வார நாட்களில் 1 ½ மணி நேரமும், வார இறுதி நாட்களில் 4 மணி
நேரமும் தோட்டத்திற்க்காக செலவழிக்கிறேன்). தோட்டம் என்றால் ஒரு நாளைக்கு
குறைந்தது அரைமணி நேரம் செலவிட முடியுமா என்று பாருங்கள். வார இறுதி நாட்களில்
குறைந்தது இரண்டு மணி நேரம் தேவைப்படும். அப்போது தான் உங்களால் தோட்டத்தில்
உருப்படியாக எதாவது கொண்டுவர முடியும்.
ஆர்கானிக் காய்கறிகள் வேண்டும் என்பது மட்டும் தான் தோட்டம் ஆரம்பிக்க
ஒரே காரணம் என்றால் இப்போது ஐயா நம்மாழ்வார் படத்தை ஒட்டிக்கொண்டு, மூன்று மடங்கு
விலையோடு ‘இயற்கை விளைபொருளகம்’ என்ற பெயரில் எக்கச்சக்க ஆர்கானிக் ஸ்டோர்
முளைத்து இருக்கிறது. அங்கே உருப்படியாக ஏதும் கிடைக்கிறதா என்று பார்க்கலாம். சில
வருடங்களுக்கு முன்பு இப்படித் தான் மக்களுக்கு திடீரென்று இயற்கை மீது அதீத பற்று
வந்து எங்கு பார்த்தாலும் மணத்தக்காளி சூப், தூதுவளை சூப் என்று நிறைய சூப் கடைகள்
முளைத்தன. பிறகு காணமல் போய்விட்டன. அதே போல் இப்போது
மாடித் தோட்டம் சீசன்.
இங்கே இயற்கையை காப்பாற்ற கிளம்பி இருக்கும் சில முகநூல் குழுக்கள்
கூட Gardening Kit என்ற பெயரில் எதையாவது மக்கள் தலையில் கட்டவே பார்க்கிறார்கள். தோழி ஒருவர் ‘சென்னை மாடித்தோட்டம் முகநூல் குழு
ஓன்று பத்து பைகள் அடங்கிய Gardening
Kit ஓன்று Offer-ல் Rs.1800 –ல் கொடுக்கிறார்கள். வாங்கவா சிவா’ என்று என்னிடம் கருத்துக்
கேட்டார். ஆடித் தள்ளுபடி போல. (இதில்
நிறைய கதைகள் இருக்கிறது. அடுத்த பதிவில் நிறைய பார்க்கலாம்). உங்களிடம் நிறைய
காசு இருந்தா என்னிடம் கொடுங்கள். கஷ்டபட்ட மக்கள் நிறைய இருக்கிறார்கள். ஏதாவது
உதவி செய்யலாம் என்று சொல்லி வைத்தேன். சிலரின் வியாபார நோக்கத்திற்காக
உருவாக்கப்படும் வட்டத்தில் மாட்டி, தொடக்கத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் நிஜமான
ஆர்வம் உள்ள நிறைய நண்பர்கள் தோற்று பின்வாங்குவது கவலை தரும் விசயமாக இருக்கிறது.
நேரம், ஆர்வத்திற்கு அடுத்தபடியாக தேவை நமது சொந்த முயற்சி. இது
ரொம்பவே முக்கியம். தொடக்கத்தில் அடிப்படை விவரங்களுக்கு மற்ற நண்பர்களின் முயற்சி
பற்றிய விவரங்கள் நிறையவே பயன்படும். ஆனாலும் நம் சொந்த முயற்சிகளும் அதன் வெற்றி
தோல்விகளும் தான் தோட்டத்தை சுவாரசியம் ஆக்கும். சில நண்பர்கள் என்னிடம் முதலில்
விடுக்கும் வேண்டுகோளே ‘ஏதாவது புத்தகம் இருந்தா கொடுங்க. இல்லன்ன ஏதாவது PDF Document-ஆவது இருந்தா கொடுங்க’ என்பது தான். எல்லாவற்றையுமே step-by-step procedure-அகவே (இரண்டு
நிமிடம் மேகி நூடுல்ஸ் செய்வதில் இருந்து) செய்து பழக்கப்பட்டுவிட்ட நமக்கு தோட்டத்திற்கும்
அதே போல ஒரு எதாவது இருந்தால் வேலை எளிதாக முடியும் என்றே நினைக்க தோன்றுகிறது.
இயற்கை நம்மை அவ்வளவு எளிதாக விடுவதில்லை. சும்மா ரெண்டு புத்தகம் படித்து இத்தனை நாட்களுக்கு
ஒரு முறை இந்த உரம் போட்டால் இந்தனை கிலோ அறுவடை செய்யலாம் என்று எல்லாம் எளிதாக
செய்ய முடியாது. இன்றைக்கும் நான் தவறாமல் ஆப்பு வாங்கி கொண்டிருக்கும் சில
காய்கறிகள் இருக்கத் தான் செய்கிறது. அதற்காக தோட்டம் என்பது கடினமும் அல்ல. நல்ல
விதையில் இருந்து நாற்று எடுத்து, நல்ல வெயில் படும் இடத்தில், நல்ல வளமான மண்ணோ,
வளர்ப்பு ஊடகமோ வைத்து, நாம் ஆர்வமாய் வளர்க்கும் செடி நன்றாகவே வரும்.
நான் மேலே கூறியபடி நீங்கள் உண்மையிலேயே ஆர்வத்தில் தோட்டம் ஆரம்பிக்க
நினைத்து, உங்களால் தேவையான நேரம் ஒதுக்க முடியும் என்றால் எளிதாக வெற்றி பெறலாம்.
இல்லாவிட்டால் ‘இரண்டாயிரம் ரூபாய் செலவளித்தேன். கடைசியில் ஒரு கிலோ தக்காளி கூட
கிடைக்கலை’ என்று ஒரு புலம்பலோடு உங்கள் தோட்டம் ஒரு ஓரமாய் ஒதுங்கிவிடும்.
அடுத்த பதவில் ‘வளர்ப்பு ஊடகம்’ (Growing Media) பற்றி
விவரமாக பார்க்கலாம்.
(தொடரும்)