Showing posts with label Gardening in Tamil. Show all posts
Showing posts with label Gardening in Tamil. Show all posts

Saturday, March 19, 2016

தோட்டம்.com




www.thoddam.com

புதிய ஒரு தளத்தில் எனது தோட்டத்தை தொடங்க இருக்கிறேன் . ப்ளாக் உலகில் இருந்து தனி ஒரு இணைய தளமாக எனது தோட்டம் இப்போது thoddam.wordpress.com (தோட்டம். Com). தோட்டம் ப்ளாக் தொடங்கும் போது பெரிதாய் திட்டமோ, தோட்டம் பற்றி நாமும் ஏதாவது எழுத முடியும் என்ற நம்பிக்கையோ கிடையாது. இன்றைக்கு நண்பர்கள் உங்களது மேலான ஆதரவில் 400+ நண்பர்கள் எனது தோட்டம் ப்ளாக்-ஐ தொடர்கிறார்கள். ரொம்ப சந்தோசமாய் இருக்கிறது. என் முயற்சிகள் ஒரு சில பேருக்கு பயன்படுவது குறித்து இரட்டிப்பு மகிழ்ச்சி. 


தனி ஒரு வெப்-சைட் தொடங்க மனதில் ஒரு திட்டம் இருந்தாலும் எட்டு மாதத்திற்கு முன்பு தான் அதற்கு ஒரு முழுமையான வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன். எனது கல்லூரி நண்பன் ஒருவர் சென்னையில் சின்னதாய் Web design கம்பெனி ஓன்று நடத்தி வந்தான். அவனுடன் பேசிய போது, சின்னதாய் ஒரு பட்ஜெட்டில் ஆரம்பிக்கலாம் என்று என்ன மாதிரி வெப்-சைட் வேண்டும் என்று நானே ஒரு டிசைன் போட்டு கொடுத்து ஓரளவுக்கு ஆரம்பித்தோம். இரண்டு மாதம் ஓடிப் போனது. சில வேலை காரணங்களால் நண்பன் பெங்களுருக்கு இடம் மாற்றிய போது வெப்-சைட் வேலையை தொடர முடியாமல் போனது. மொத்தம் இருபது சதவீதம் தான் செய்திருப்போம். அதை தொடர முடியாமல் அப்படியே விட்டு விட்டோம்.

நான் மென்பொருள் துறையில் இருந்தாலும், டெக்னிகலா எனது ஏரியா Mainframe என்று சொல்லப்படுகிற 1960s டெக்னாலஜி தான். வெப் டிசைன் பற்றி சுத்தமாய் தெரியாது. அதுவும் மேனேஜர் ஆன பிறகு மேய்த்தல், காத்தல், அழித்தல் போன்ற வேலைகள் மட்டுமே செய்வதால் டெக்னாலஜி கொஞ்சம் தூரமாய் போய்விட்டது. வெளிய கொடுத்து செய்யும் அளவுக்கு பட்ஜெட் திட்டமிடவில்லை. வேறு வழி இல்லாமல் நானே எடுத்து செய்து பார்க்கலாம் என்று ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறு மாதத்திருக்கு பிறகு இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறேன். சில கட்டத்தில் என்பது சதவீதம் முடித்து சில பிரச்சனைகளை சரி செய்ய முடியாமல் மறுபடி முதலில் இருந்து செய்யும் படி ஆனது. நிறைய கற்றுக் கொண்டேன். வெப்சைட் எனக்கு திருப்தியாகவே வந்திருக்கிறது. இந்த வெப்சைட்-ல் உள்ள ஒவ்வொரு விசயமும் நானே உருவாக்கியது என்பதில் சந்தோசமே. முடிந்த அளவுக்கு எந்த பெரிய பிரச்சனையும் தெரியவில்லை. நண்பர்கள் நீங்களும் பார்த்து, உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

‘தோட்டம்’ என்னும் அடைமொழி தானாகவே என்னுடன் ஒட்டிக்கொண்டு ‘தோட்டம்’ சிவா ஆகிப் போனேன் (மொட்ட சிவா, கெட்ட சிவா மாதிரி இந்த ‘தோட்டம்’ சிவாவும் ஒரு ஓரமாய் இருந்து விட்டுப் போகிறான்.. சரி தானே J ). வெப்-சைட்-க்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து kovai-garden, kovai-thoddam, siva-thoddam என்றெல்லாம் யோசித்து கடைசியில் நம்ம trade-mark தோட்டத்தையே வைத்து விட்டேன்.  

ப்ளாக்-ஐ விட தனி வெப்-சைட் என்று போகும் போது நிறைய விசயங்களை செய்ய முடியும் என்று நினைக்கிறேன் (என்ன.. கொஞ்சம் செலவு தான் ஆகிறது :) ). சில புதிய பகுதிகளை (Showcase your Garden, Join with Thoddam) அறிமுகப்படுத்தி இருக்கிறேன். வீடியோ மற்றும் படங்களுக்கு என்று தனியாக ஒரு பகுதி கொடுத்திருக்கிறேன். இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஒரு மன்றம் (Discussion Forum) ஒன்றை அறிமுகப் படுத்த திட்டம் இருக்கிறது.

பழைய பதிவுகளில் சில formatting (spacing between Paragraphs) பிரச்சனைகள் இருக்கும். Blogger-ல் இருந்து அப்படியே இங்கே எடுத்துப் போட்டால் சில formatting பிரச்சனைகள் வருகிறது. அதை இப்போதைக்கு அப்படியே விட்டுவிட்டேன். Subscribe செய்ய நீங்கள் மெயில் ஐ.டி கொடுத்து submit செய்ததும் அந்த பாக்ஸ் கொஞ்சம் கீழே வருகிறது. இதனால் பெரிதாய் ஒன்றும் பிரச்னை இல்லை. இது தவிர வேறு ஏதும் பிரச்சனைகளை பார்க்கவில்லை.

எல்லா பகுதிகளையும் பாருங்கள். ஏதும் பிரச்னை தெரிந்தால் கூறுங்கள். அதை சரி செய்த எனக்கு உதவியாக இருக்கும். முக்கியமாக mail subscription பகுதியில் ஏதும் பிரச்சனை வந்தால் உடனே கூறுங்கள். இதை ரெடி செய்ய தான் நான் ரொம்ப திணறி போனேன். நண்பர்கள் எல்லோரும் எனது ப்ளாக்கில் கொடுத்த உங்களது வழக்கமான மெயில் ஐடி-யை மறுபடி ஒருமுறை இந்த வலைத்தளத்திலும் கொடுத்து subscribe செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் subscribe செய்தவுடன் உங்கள் மெயில் ஐடி-க்கு subscription-activate செய்ய ஒரு லிங்க் வரும். அதை க்ளிக் செய்தால், புதிய பதிவுகள் பற்றிய notification வர ஆரம்பிக்கும். இதில் ஏதும் பிரச்சனை என்றால் உடனே கூறுங்கள்.

 இந்த வெப்-சைட் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். எனக்கு உதவியாக இருக்கும். எல்லாம் நல்லபடியாக போனால் அடுத்த பதிவில் இருந்து புதிய தோட்டத்திலேயே (தோட்டம்.wordpress.com) தொடரலாம் என்று இருக்கிறேன்.

Saturday, October 10, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் - வெள்ளரிப்பழம்



முலாம்பழத்தை அடுத்து இந்த சீசனின் அடுத்த புது வரவு. இது வெள்ளரிக்காய் பதிவாக வரவேண்டியது, பழமாகி போனது ஒரு சின்ன குழப்பத்தில். அந்த குழப்பத்தால் ஒரு அருமையான பழத்தை பல வருடங்களுக்கு பிறகு ருசிக்க முடிந்தது.  

இந்த ஜூன் சீசன் தொடக்கத்தில் வெள்ளரியையும், சுரைக்காயையும் ஒரு பாத்தியில் போட்டு விட்டிருந்தேன். வெள்ளரி நன்றாக பிடித்து வளர்ந்து வந்தது. சுரைக்காய் இலையும் கிட்டதட்ட வெள்ளரி இலை போலவே இருந்ததால் பெரிதாய் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. வெள்ளரி பூத்தாலும் பூ பிஞ்சி ஏதும் பார்க்க முடியவில்லை.

ஒரு நாள் கீழே படத்தில் இருக்கும் பிஞ்சி ஓன்று கண்ணில் பட்டது. அதன் வடிவத்தை பார்க்க ஏக குழப்பம். வெள்ளரிக்காய் மாதிரி இல்லை. கொஞ்சம் குடுவை வடிவத்தில் சுரைக்காய் மாதிரி இருந்தது. அதனால் அப்படியே விட்டுவிட்டேன். ஒரு கட்டத்தில் அதன் காம்பு பகுதியை பார்த்தால் வெம்பி விடும் என்று தான் நினைத்திருந்தேன். அப்படி ஏதும் நடக்காமல் காய் பெரிதாகிக் கொண்டே வந்தது. நன்றாக முற்றிய பிறகு தான் அது சுரைக்காய் இல்லை என்று தெரிந்தது. அதன் பிறகு அதை பறித்து பயனில்லை என்று அப்படியே விட்டுவிட்டேன்.




அதுவும் முற்றி நிறம் கொடுக்க ஆரம்பித்தது. அப்படி ஒரு மஞ்சள் நிறம். ஒரு மஞ்சள் பையை, மேலே ஒரு முடிச்சு போட்டு கட்டித் தொங்க விட்டால் எப்படி இருக்கும். அப்படி தான் இருந்தது பழம். பொதுவாய் கடைகளில் கிடைக்கும் வெள்ளரி அவ்வளவு மாவு தன்மை இருக்காது. அதனால் பழமும் அப்படி தான் இருக்கும் என்று நினைத்து பெரிதாய் ஏதும் எதிர்ப்பார்க்கவில்லை.

நல்ல மஞ்சள் நிறம் கொடுத்ததும், லேசாய் அழுத்தி பார்த்து பழுத்து விட்டதென்று தெரிந்ததும் பறித்து வெட்டினால் ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. பழம் அவ்ளோ மாவாய் வெண்ணை மாதிரி, நல்ல மணத்தோடும். ஒரு ஸ்பூன்-அ வச்சி அப்படியே வெட்டி வெட்டி சாப்பிடலாம்.  

‘இந்த மாதிரி ஒரு பழத்தை சாப்பிட்டு ஒரு இருபது வருடம் இருக்கும்’ என்று எங்க வீட்டில் ஒரே சந்தோசம். எனது பள்ளிக் காலங்களில் ஊரில் பக்கத்து கிராமங்களில் (ஆழ்வார் தோப்பு, திருக்களூர்) இருந்து நார் பெட்டியில் வைத்து வெள்ளரி பிஞ்சி விற்க வருவார்கள். அப்போ சிலநேரம் இந்த மாதிரி வெள்ளரிப்பழத்தை ஒரு வாழை இலையில் சுற்றி கொண்டு வருவார்கள். அதை வாங்கி, சின்ன சின்னதாய் வெட்டி சீனி போட்டு சாப்பிடுவோம். எங்களுக்கு அவ்ளோ ருசியான ஒரு பண்டம் அது. பல காலங்களுக்கு பிறகு அப்படி ஒரு பழம் பார்க்க முடிந்ததில் இந்த சீசன் ஒரு சிறப்பு பெற்று விட்டது. அதுவரை சிலவற்றை பிஞ்சாக பறித்துக் கொண்டிருந்தோம். இந்த பழம் பறித்த பிறகு, எல்லாவற்றையும் பழுக்க விட்டே பறிக்க ஆரம்பித்தோம்.

இந்த விதை நாட்டு விதைகள் என்று நண்பர் பரமேசிடம் வாங்கியது. அவருக்கு ஒரு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இனி எல்லா சீசனிலும் தவறாமல் இடம் பெற போகும் ஒரு செடியாகி விட்டது. இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறையோடு.









 













Sunday, October 4, 2015

மாடித் தோட்டம் – Part-1 (தொடங்குவதற்கு முன்)



(புதிதாய் மாடித் தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டம் ஆரம்பிக்கும் நண்பர்களுக்காக இந்த குறுந்தொடரை ஆரம்பிக்கிறேன். இது உங்களுக்கு சிறிதளவாவது பயன்பட்டால் சந்தோசமே)

விகடனிலும் புதியதலைமுறையிலும் எனது ப்ளாக் பற்றி வந்த கட்டுரைகளை பார்த்து வந்த நிறைய அழைப்புகளில் இருந்து சில விஷயங்கள் புரிந்தது. ‘மாடித் தோட்டம்’ என்பது ஊடங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. எங்கு பார்த்தாலும் ‘ஆர்கானிக்’ ‘இயற்கை விவசாயம்’ என்ற கூக்குரல்கள். இங்கே வாங்கும் காய்கறி எல்லாமே விஷம். நீங்களே காய்கறியை வீட்டில் விளைவித்தால் தான் தப்பித்தீர்கள், இல்லாவிட்டால் எல்லா நோய்களும் உங்களுக்கு தான் என்பது போலான விளம்பரங்கள், விவாதங்கள். இங்கே தோட்டம் ஆரம்பிக்கிறேன் என்று வரும் கூட்டத்தில் பாதி இந்த மாதிரி விவாதங்களை கேட்டு பயந்து வரும் கூட்டமாக இருப்பது வருத்தப்படும் விசயமாகவே இருக்கிறது.

தோட்டம் என்பது ஒரு கலை. பொழுதுபோக்கு. ஆங்கில Gardening site  பார்த்து நிறைய ஆச்சரியப் பட்டிருக்கிறேன். அங்கே யாரும் ‘ஆர்கானிக்’ ‘ஆர்கானிக்’ என்று அலறுவதில்லை. ஒவ்வொரு காய்கறியையும், பூக்களையும் அவர்கள் முயற்சிப்பது, கற்றுக்கொள்வது, அதை ஒரு ‘Gardening Community’ வைத்து பகிர்ந்து கொள்வது என்று அதை hobby என்ற அளவில் செய்வது அழகு. இவ்வளவு அருமையான ஒரு பொழுதுபோக்கை கூட அதற்குண்டான ரசனையை அழித்து அதையும் ஒரு வியாபார வட்டத்தில் கொண்டு வந்து விட்டார்கள். நாம் இங்கே ‘ஆர்கானிக்’ பற்றி கவலைப்பட நிறைய காரணங்கள் இருந்த போதும், அது மட்டுமே தோட்டம் ஆரம்பிக்க ஒரே காரணமாக நிறைய பேர் எடுத்து கொள்வதில் தான் பிரச்னை.

எந்த வித அடிப்படை ஆர்வமோ, அதற்குண்டான நேரமோ ஒதுக்காமல் மாடித் தோட்டம் ஆரம்பிக்கும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இது வழக்கம் போல ஒரு சிலரால் ஒரு பெரிய  வியாபார வட்டத்தை உருவாக்க பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்கள் நோக்கம் ‘ஊரெல்லாம் பூச்சிக்கொல்லி தெளித்த காய்கறிகள். அத சாப்பிட்டுட்டு சாவாதீங்க. கவலைப்படாதீங்க. நாங்க இருக்கோம்’ என்பது தான். மக்கள் எல்லாம் இப்போது கொஞ்சம் செழிப்பாக இருப்பதால் காசை பற்றி கவலைப்படாமல், நல்லதா ஆர்கானிக் கத்தரிக்கா நாலு கெடைச்சா போதும் என்று 20,000-ம், 30,000-ம் என்று செலவு பண்ணி ட்ரிப் செட் எல்லாம் போட்டு ஒரு பத்து அடி தள்ளி நின்று ஆர்கானிக் கத்தரிக்காய்க்கு காத்திருக்க ஆரம்பித்து விட்டார்கள்.

சிலர் ‘டெய்லி ஒரு பத்து நிமிடம் செலவழிச்சா போதுமா’ என்று கேட்கிறார்கள். மக்கள் அவ்ளோ பிசியாகி விட்டார்கள் போல என்று நினைத்துக் கொள்வேன். சென்னை அப்பார்ட்மென்ட் வாழ்க்கையில் இருந்து கோவை வந்த பிறகு நான் ஒழித்துக் கட்டிய இரண்டு விசயங்கள். ஓன்று கிரிக்கெட் பார்ப்பது. இரண்டாவது டி.வி நிகழ்ச்சிகள் பார்ப்பது. இப்போது எனக்கு நிறையவே நேரம் கிடைக்கிறது. (காலையில் நான் வார நாட்களில் 1 ½ மணி நேரமும், வார இறுதி நாட்களில் 4 மணி நேரமும் தோட்டத்திற்க்காக செலவழிக்கிறேன்). தோட்டம் என்றால் ஒரு நாளைக்கு குறைந்தது அரைமணி நேரம் செலவிட முடியுமா என்று பாருங்கள். வார இறுதி நாட்களில் குறைந்தது இரண்டு மணி நேரம் தேவைப்படும். அப்போது தான் உங்களால் தோட்டத்தில் உருப்படியாக எதாவது கொண்டுவர முடியும்.  

ஆர்கானிக் காய்கறிகள் வேண்டும் என்பது மட்டும் தான் தோட்டம் ஆரம்பிக்க ஒரே காரணம் என்றால் இப்போது ஐயா நம்மாழ்வார் படத்தை ஒட்டிக்கொண்டு, மூன்று மடங்கு விலையோடு ‘இயற்கை விளைபொருளகம்’ என்ற பெயரில் எக்கச்சக்க ஆர்கானிக் ஸ்டோர் முளைத்து இருக்கிறது. அங்கே உருப்படியாக ஏதும் கிடைக்கிறதா என்று பார்க்கலாம். சில வருடங்களுக்கு முன்பு இப்படித் தான் மக்களுக்கு திடீரென்று இயற்கை மீது அதீத பற்று வந்து எங்கு பார்த்தாலும் மணத்தக்காளி சூப், தூதுவளை சூப் என்று நிறைய சூப் கடைகள் முளைத்தன. பிறகு காணமல் போய்விட்டன. அதே போல் இப்போது மாடித் தோட்டம் சீசன்.

இங்கே இயற்கையை காப்பாற்ற கிளம்பி இருக்கும் சில முகநூல் குழுக்கள் கூட Gardening Kit என்ற பெயரில் எதையாவது மக்கள் தலையில் கட்டவே பார்க்கிறார்கள். தோழி ஒருவர் ‘சென்னை மாடித்தோட்டம் முகநூல் குழு ஓன்று பத்து பைகள் அடங்கிய Gardening Kit ஓன்று Offer-ல் Rs.1800 –ல் கொடுக்கிறார்கள். வாங்கவா சிவா’ என்று என்னிடம் கருத்துக் கேட்டார். ஆடித் தள்ளுபடி போல.  (இதில் நிறைய கதைகள் இருக்கிறது. அடுத்த பதிவில் நிறைய பார்க்கலாம்). உங்களிடம் நிறைய காசு இருந்தா என்னிடம் கொடுங்கள். கஷ்டபட்ட மக்கள் நிறைய இருக்கிறார்கள். ஏதாவது உதவி செய்யலாம் என்று சொல்லி வைத்தேன். சிலரின் வியாபார நோக்கத்திற்காக உருவாக்கப்படும் வட்டத்தில் மாட்டி, தொடக்கத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் நிஜமான ஆர்வம் உள்ள நிறைய நண்பர்கள் தோற்று பின்வாங்குவது கவலை தரும் விசயமாக இருக்கிறது.

நேரம், ஆர்வத்திற்கு அடுத்தபடியாக தேவை நமது சொந்த முயற்சி. இது ரொம்பவே முக்கியம். தொடக்கத்தில் அடிப்படை விவரங்களுக்கு மற்ற நண்பர்களின் முயற்சி பற்றிய விவரங்கள் நிறையவே பயன்படும். ஆனாலும் நம் சொந்த முயற்சிகளும் அதன் வெற்றி தோல்விகளும் தான் தோட்டத்தை சுவாரசியம் ஆக்கும். சில நண்பர்கள் என்னிடம் முதலில் விடுக்கும் வேண்டுகோளே ‘ஏதாவது புத்தகம் இருந்தா கொடுங்க. இல்லன்ன ஏதாவது PDF Document-ஆவது இருந்தா கொடுங்க’ என்பது தான். எல்லாவற்றையுமே step-by-step procedure-அகவே  (இரண்டு நிமிடம் மேகி நூடுல்ஸ் செய்வதில் இருந்து) செய்து பழக்கப்பட்டுவிட்ட நமக்கு தோட்டத்திற்கும் அதே போல ஒரு எதாவது இருந்தால் வேலை எளிதாக முடியும் என்றே நினைக்க தோன்றுகிறது. இயற்கை நம்மை அவ்வளவு எளிதாக விடுவதில்லை. சும்மா ரெண்டு புத்தகம் படித்து இத்தனை நாட்களுக்கு ஒரு முறை இந்த உரம் போட்டால் இந்தனை கிலோ அறுவடை செய்யலாம் என்று எல்லாம் எளிதாக செய்ய முடியாது. இன்றைக்கும் நான் தவறாமல் ஆப்பு வாங்கி கொண்டிருக்கும் சில காய்கறிகள் இருக்கத் தான் செய்கிறது. அதற்காக தோட்டம் என்பது கடினமும் அல்ல. நல்ல விதையில் இருந்து நாற்று எடுத்து, நல்ல வெயில் படும் இடத்தில், நல்ல வளமான மண்ணோ, வளர்ப்பு ஊடகமோ வைத்து, நாம் ஆர்வமாய் வளர்க்கும் செடி நன்றாகவே வரும்.

நான் மேலே கூறியபடி நீங்கள் உண்மையிலேயே ஆர்வத்தில் தோட்டம் ஆரம்பிக்க நினைத்து, உங்களால் தேவையான நேரம் ஒதுக்க முடியும் என்றால் எளிதாக வெற்றி பெறலாம். இல்லாவிட்டால் ‘இரண்டாயிரம் ரூபாய் செலவளித்தேன். கடைசியில் ஒரு கிலோ தக்காளி கூட கிடைக்கலை’ என்று ஒரு புலம்பலோடு உங்கள் தோட்டம் ஒரு ஓரமாய் ஒதுங்கிவிடும்.  

அடுத்த பதவில் ‘வளர்ப்பு ஊடகம்’ (Growing Media) பற்றி விவரமாக பார்க்கலாம்.

(தொடரும்)