Monday, July 9, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – பப்பாளி



நம்ம ஊரில் ரொம்ப எளிதாக வரும் ஒரு மரம் பப்பாளி. வளர்க்க கொஞ்சம் இடம் இருந்தாலும் போதும். விலை ரொம்ப மலிவாக கிடைப்பதால் என்னவோ அதிகமாக யாரும் கண்டு கொள்வதில்லை. மைசூர் போகும் போது பவானி சாகர் பகுதியில் நிறைய பப்பாளி தோட்டங்களை பார்க்க முடிந்தது. இப்போ பழமுதிர் நிலையங்களில் நல்ல பழங்களை பார்க்க முடிகிறது. அப்படி வாங்கிய பழம் ரொம்ப இனிப்பாக இருக்கவே அதன் விதையை எடுத்து முளைக்க போட்டேன். அருமையாக முளைத்து வளர ஆரம்பித்தது.

பப்பாளி மரம்  சில சடை சடையாக பூக்கும். ஆனால் காய்க்காது. அதனால் வந்த நாற்றுக்களில் ஒரு மூன்றை காய்க்கும் வளர்த்து பார்க்கலாம் என்று விட்டு விட்டோம். இப்போ மூன்றுமே கொத்து கொத்தாக காய்க்க ஆரம்பித்து விட்டது. வைத்த ஒரு வருடத்திலேயே காய்த்து பழமும் சாப்பிட்டாச்சு. பழம் மிக இனிப்பாக வந்திருக்கிறது. ஒரு பழம் கிட்டத்தட்ட 2 ½ கிலோ வரை இருக்கிறது.  

பப்பாளி மரத்தில் பொதுவாக வரும் ஒரு பிரச்சினை மாவு பூச்சி தொல்லை. வெள்ளையாக படர்ந்து பூ, காய் என்று ஓன்று விடாமல் கூடு கட்டி மரத்தை காலி பண்ணி விடும். ஆனால் கோவையில் அவ்வளவாக இந்த தொல்லை இல்லை. வந்தால் இஞ்சி பூண்டு கரைசலை தெளித்து கட்டுப்படுத்தலாம் என்று இருக்கிறது. வராத வரைக்கும் நல்லது J

விக்கியில் இருந்து, பப்பாளியின் பயன்கள் என்று பார்த்தால், விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. கனிந்த பழத்தில் நிறைய விட்டமின் சி இருக்கிறது. நிறைய மருத்துவ குணங்களை உள்ளடக்கியது பப்பாளி பழம்.
 
படங்கள் சில, 









Thursday, July 5, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – கத்தரிக்காய்


கத்தரியும் தக்காளியும் நம்ம ஆளுங்க சமையல்ல இல்லன்னா சமைக்கவே மாட்டாங்க. அதனால் இந்த இரண்டும் வீட்டுத் தோட்டங்களில் பொதுவாக பார்க்கலாம். காய்கறிகளில் கத்தரியில் தான் நிறைய வகை இருக்கிறது. வெள்ளை, ஊதா, வெள்ளையும் ஊதாவும் கலந்து, பச்சை என்று ஒரு 10 வகை நாமே இங்கே பார்க்கலாம். இதில் ஊர் பக்கம் கிடைக்கும் சின்ன வெள்ளை கத்தரி தான் நல்லது என்கிறார்கள். இங்கே கிடக்கும் நிறைய ஹைப்ரிட் வகைகள் தான்.

இங்கே அக்ரி யுனிவர்சிட்டியில் ஊதா நிறமும் (Hybrid), ஊதாவில் வெள்ளை கலந்த ஒரு வகையும் கிடக்கும். இந்த தடவை வெள்ளை கத்தரிக்காய் தேடி திசையன்விளையில் இருந்து விதை வாங்கி போட்டால் அதுவும் லேசான ஊதா நிறத்தில் காய்த்து கடுப்பேற்றி விட்டது. 



காய்கறிகளில் அதிகமாக சொத்தை விழும் காய்கறி கத்தரி தான். காய்ப்பதில் 25% சொத்தையாகி வீணாக போகும். மருந்து ஏதும் தெளிப்பது இல்லை என்பதால் 75% கிடைப்பதே நமக்கு போதுமானது தான். 

எப்பவுமே அளவுக்கு அதிகமாக செடி வைத்து, கத்தரிக்காய் பறித்து பறித்து போர் அடித்து போய்விடும். போன வருடம் ஊதா Hybrid செடியில் இருந்து மட்டும் மொத்தம் 35 கிலோ பறித்தோம். சில நேரம் ஒரே நாளில் 2 கிலோ வரை பறித்திருக்கிறோம். சொந்த பந்தம் எல்லோருக்கும் எங்க வீட்டுல இருந்து தான் மூணு மாசத்துக்கு கத்தரிக்காய் சப்ளை :-) .

எல்லா காய்கறிகளையும் விதைப்பதில் இருந்து எல்லாவற்றையும் ஒரு நோட்டில் குறிப்பு எடுத்துக் கொள்வேன். இது எனக்கு அந்த செடியை பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவும். அதை வைத்து, எத்தனை செடி வைத்தால் போதுமானது, எவ்வளவு நாள் மகசூல் கிடைக்கும் என்று திட்டம் இடலாம். எல்லாம் ஒரு Planning தான்.  


  
கத்தரி செடி நாற்று எடுத்து நடலாம். கத்தரி செடி கிட்டத்தட்ட ஒரு சிறிய மரம அளவுக்கு வளரும். அதனால் ஒரு செடிக்கு மூன்று அடி இடைவெளி தேவை படுகிறது. ஒரு செடி மூன்று மாதம் வரை காய் கொடுக்கும். ஒரு செடியில் இருந்து மொத்தம் 5 கிலோ வரை கிடைக்கும். நிறைய இடைவெளி விட்டு நடுவதால் சில நேரம் ஊடு பயிராக கீரையும் போடுவதுண்டு. கத்தரி செடி வளரும் போது நாம் கீரையும் பறித்துக் கொள்ளலாம்.