Saturday, August 1, 2015

புதிய தலைமுறை மற்றும் அக்ரி இன்டெக்ஸ் 2015



புதிய தலைமுறை இதழில் நான்

போன வாரம் புதிய தலைமுறை இதழில் ‘பசுமைப் பக்கங்கள்’ என்ற தலைப்பில் எனது கட்டுரை வந்துள்ளது (அந்த கட்டுரையில் எனது பங்கு மிக குறைவு தான். தருமபுரி வேளாண் உதவி இயக்குனர் திரு.மதுபாலன் அவர்களின் கட்டுரை என்று தான் சொல்லவேண்டும்). எனக்கு இந்த வாய்ப்பு அளித்த புதிய தலைமுறை குழுவுக்கும், சின்னதுரை அவர்களுக்கும் எனது நன்றி.  



அமைந்தால் எல்லாமும் நன்றாக மொத்தமாய் அமையும் போல. போன வாரம் விகடன். இந்த வாரம் புதிய தலைமுறை என்று எனக்கு ஒரு சிறிய அடையாளம் கிடைத்திருப்பது குறித்து சந்தோசம்.நிச்சமாக இந்த இரண்டு கட்டுரைகளும் தோட்டம் சம்மந்தமாக சிலரை அணுக எனக்கு உதவும் என்று நினைக்கிறேன். 


அக்ரி இன்டெக்ஸ் 2015

இந்த வருட அக்ரி இன்டெக்ஸ் நிறைவாக முடிந்தது. ஞாயிறு காலை குடும்பத்தோடு கட்டுச்சோறு கட்டிக்கொண்டு கிளம்பி விட்டோம். போன வருடம் அளவுக்கு அடிதடி எல்லாம் இல்லை. நல்ல கூட்டம் தான். ஆனாலும் ஸ்டால்களை எல்லாம் பொறுமையாக பார்க்க முடிந்தது. ப்ளாக் நண்பர்கள் சிலரை சந்திக்க முடிந்தது. நண்பர் தாமஸ் ரூபனை நேரில் சந்திக்க முடிந்தது. எனக்கான ஒரு பெரிய பை நிறைய அவர் தோட்டத்தில் இருந்து அவரை, பீன்ஸ், மஞ்சள்,எலுமிச்சை என்று ஒரு பெரிய காய்கறி கூடையையே விதைக்காக கொண்டு வந்திருந்தார். ரொம்ப சந்தோசமாய் இருந்தது. 

அடுத்த அக்ரி இன்டெக்ஸ் போது முடிந்தால் நாம் ப்ளாக் நண்பர்கள் எல்லாம் சந்தித்து மொத்தமாய் ஸ்டால் விசிட் செய்யலாம். 

இந்த வருட பர்சேஸ் என்று பார்த்தால் முக்கியமாய் ஒரு Battery Operated Power Sprayer வாங்க ரொம்ப நாள் ஒரு ஆசை இருந்தது. சின்னதாய் Hand Sprayer வைத்து பஞ்சகாவ்யா, வேப்பம்புண்ணாக்கு தெளிப்பதற்குள் போதும் என்றாகி விடுகிறது. மரங்களுக்கு Hand Sprayer வேலைக்காவதில்லை. கொஞ்சம் செலவானாலும் ஒரு Power Sprayer வாங்கலாம் என்று நினைத்திருந்தேன். ஐந்தாறு கடைகளில் நிறைய brand இருந்தது. விலை Rs.2300-ல் இருந்து Rs.4000 வரை வருகிறது. கிட்டதட்ட எல்லாமே சைனா இறக்குமதி பொருட்களை இங்கே அசெம்பிள் செய்து அவர்கள் பிராண்ட் போட்டு விற்கிறார்கள். சிலர் மட்டும் ஆறுமாதம் வாரண்டி என்றார்கள். நிறைய பேர் வாரண்டி எல்லாம் கிடையாது என்று தான் விற்க்கிறார்கள். ஒன்றரை வருடம் பிரச்னை இல்லாமல் பேட்டரி வரும், அதன் பிறகு பேட்டரி மற்ற வேண்டிய வருமாம். அதற்கு Rs.1000 – Rs.1500 ஆகலாம். கொஞ்சம் விலை அதிகம் தான். ஆனாலும் பயன்படும் என்று Rs.2800-ல் ஓன்று வாங்கி விட்டேன். பேட்டரி இல்லாமல் இதே வகையில் Manual Type Rs.700 – Rs.900 க்கு கிடைக்கிறது.

நான் வாங்கிய Sprayer-ல் குறிப்பிட்டு சொல்லும் வசதி என்று சொன்னால் Dual Mode Selection-ஐ சொல்லலாம். ஒரே வேகத்தில் ஸ்ப்ரே செய்ய ஒரு செலக்சன். இன்னொரு Mode-ல் நமக்கு தேவையான அளவுக்கு ஸ்ப்ரேயரில் வேகத்தை வைத்துக் கொள்ளலாம். இது சின்ன செடிகளுக்கு அடிக்கும் போது தேவை படும். நான்கு விதமான Sprayer knob வருகிறது. நம் தேவைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ளலாம். கொடி, மரங்களுக்கு அடிக்கும் போது நாம் Sprayer-ன் நீளத்தை அதிகப் படுத்தி உயரமான செடிகளுக்கும் அடிக்கலாம். பேட்டரி இருப்பதால் எடை ரொம்பவே அதிகமாக இருக்கிறது. வெறும் இடையே பத்து கிலோ இருக்கும் போல. அதை நீரால் நிரப்பிய பிறகு 15 கிலோ வந்து விடுகிறது. முதுகில் மாட்டிக்கொண்டு தெளிக்க கொஞ்சம் கடினமாக இருக்கிறது.  


Sprayer knobs

Sprayer speed selection control
  

இது தவிர DIP Irrigation ஓன்று செட் பண்ணி பார்க்கலாம் என்று ஒரு ஸ்டாலை பார்த்ததும் விசாரித்தேன். Ebay தளத்தில் 25 செடிகளுக்கு, 50 செடிகளுக்கு என்று செட்டாக கிடைக்கிறது. இவர்கள் செடிகளின் எண்ணிக்கை சொல்லாமல் 50 Sq. Meter (Rs.450), 100 Sq. Meter (Rs.900) ஏரியா அளவுக்கு என்று தனி தனி செட்டாக வைத்திருந்தார்கள். நான் சும்மா முயற்சித்து பார்க்கலாம் என்று 50 Sq. Meter ஓன்று வங்கி வந்தேன். வந்து வீட்டில் பார்த்தால் உள்ளே பாதி பொருட்கள் இல்லை. இவ்வளவுக்கும் நான் அறிவாளி மாதிரி எடுக்கும் போது மேலே இருக்கும் டப்பாவ எடுக்காம அடியில் இருந்த டப்பாவ எடுத்தேன். அப்படி இருந்தும் இப்படி ஆகி போச்சே என்று ஒரே யோசனை. இரண்டு நாள் கழித்து அந்த கம்பெனியில் இருந்து அழைத்து வந்தது. தப்பு நடந்து போனதாகவும், அங்கே இருந்த அனைத்து டப்பாவும் அப்படி இருந்ததாகவும், புதிதாக ஒரு செட் அனுப்புவதாகவும் கூறினார்கள். வந்தால் விவரமாக எழுதுகிறேன். 



இன்னொரு கடையில் நர்சரி ட்ரே ரொம்ப விலை மலிவாக கிடைத்தது. ஒரு தட்டு Rs.15-க்கும் மொத்தமாய் நர்சரிகளுக்கு வாங்கினால் Rs.13-க்கும் தருவதாக கூறினார். நான் ஒரு பத்து தட்டுகள் வாங்கிக் கொண்டேன். விதைகளில் கொஞ்சம் பெரிய வெங்காயம் விதைகள், செர்ரி தக்காளி ஒன்றும் வாங்கினேன்.
 
TNAU ஸ்டாலில் இருந்து சின்ன வெங்காயம், செடி அவரை, கீரை விதைகள் வாங்கினேன். விலையை பத்து ரூபாயில் இருந்து இருபது ரூபாய் ஆக்கி விட்டிருந்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு தான் பஞ்சகாவ்யா வாங்க TNAU போய் இருந்த போது அங்கே உள்ள வெண்டிங் மிஷினில் பத்து ரூபாய் என்று தான் வைத்திருந்தார்கள். மண்புழு உரம் ஆறு ரூபாயில் இருந்து பத்து ரூபாய் ஆக்கி இருக்கிறார்கள். விதைகளை பத்தில் இருந்து இருபதாக்கி இருக்கிறாகள். பஞ்சகாவியா என்பதில் இருந்து நூறு ஆக்கி இருக்கிறாகள். எல்லா இடத்திலும் தோட்டம் பொருட்களின் விலையை கடந்த இரண்டு வருடமாகவே கன்னா பின்னாவென்று ஏற்றுகிறார்கள். அதை பற்றி விவரமாய் பிறகு பேசலாம்.  

Saturday, July 18, 2015

விகடனில் ‘தோட்டம்’ வலைப்பூ

நண்பர்களுக்கு வணக்கம். இந்த வாரம் அவள் விகடன், வீட்டுத்தோட்ட சிறப்பிதழாக வந்திருக்கிறது. அதில் ‘பூத்துக் குலுங்க வழிகாட்டும் ‘தோட்டம்’ வலைப்பூ’ என்ற தலைப்பில் எனது தோட்டம் ப்ளாக் பற்றி ஒரு பக்கத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். இந்த வாரம் அவள் விகடன் முடிந்தால் வாங்கி பாருங்கள்.

விகடனில் இருந்து என்னை தொடர்பு கொண்டு வீட்டுத்தோட்ட சிறப்பிதழாக வரும் இதழ் வர இருப்பதாக கூறி நமது ப்ளாக் பற்றி விவரம் கேட்டார்கள். இந்த சீசன் செடிகள் இப்போது தான் நாற்றாக நிற்பதால் படம் எடுக்க முடியவில்லை. போன சீசனின் படங்களையே கொடுக்க வேண்டியதாகி விட்டது. இந்த அளவுக்கு இந்த வலைப்பூவை கண்டு கொண்ட விகடன் குழுவிற்கு மிக்க நன்றி.   

இங்கே கோவை வந்த பிறகு தோட்டம் ஆரம்பித்த போது, ஆர்வத்தில் எடுத்த படங்களை ஒரு வலைப்பூ ஆரம்பித்து போடலாமே என்று ஆரம்பித்து, நண்பர்கள் உங்கள் ஆதரவில் இந்த அளவுக்கு இந்த வலைப்பூ வளர்ந்திருக்கிறது. இந்த அளவுக்கு ஊக்கம் கொடுத்த வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.


 
நன்றி : விகடன்

Saturday, July 11, 2015

2015 - சீசன்-2 (ஜூலை-டிசம்பர்) – Part – 1 (நடவு)



இந்த சீசனில் முடிந்த அளவுக்கு நாட்டு ராகங்களாக நட இருக்கிறேன். நண்பர் பரமேசிடம் வாங்கிய நாட்டு விதைகளையும், முன்பு வாங்கி இருந்த சில ஹைப்ரிட் விதைகளையும் மே இறுதி வாக்கில் Nursery Tray-க்களில் நட்டு விட்டேன். கிட்டத்தட்ட எட்டு Tray-க்கள், நானுறு விதைகள். இதில் இந்த சீசனது பட்டியல் இது தான்,

வெண்டை (நாட்டு வகை)
செடி அவரை (நாட்டு வகை)
தக்காளி (நாட்டு வகை)
மஞ்சள் தக்காளி (நாட்டு வகை)
ஹைப்ரிட் தக்காளி (DIY Kit-ல் வந்தது)
பச்சை கத்தரி (நாட்டு வகை)
ஓடவை ஊதா கத்தரி (நாட்டு வகை)
வெள்ளை கத்தரி (போன வருடம் எடுத்த விதை)
சீனி மிளகாய் (நாட்டு வகை)
சம்பா மிளகாய் (நாட்டு வகை)
ஹைப்ரிட் மிளகாய் (DIY Kit-ல் வந்தது)
மிதி பாகல் (நாட்டு வகை)
புடலை (நாட்டு வகை)
வெள்ளரி (நாட்டு வகை)
கும்பு சுரை (நாட்டு வகை)
குடை மிளகாய் (வெள்ளை)
குடை மிளகாய் (Mixed Color)
Hot Pepper (Omaxe Hybrid Seed)
காலி ஃப்ளவர் (Omaxe Hybrid Seed)
முட்டை கோஸ் (Omaxe Hybrid Seed)
Baby Corn (Omaxe Hybrid Seed)
Sweet Corn  (Omaxe Hybrid Seed)
Water Melon (Omaxe Hybrid Seed)
Musk Melon (Omaxe Hybrid Seed)
தூதுவளை
கண்டங்ககத்தரி


இந்த சீசனில் முயற்சிக்க போகும் புதிய செடிகள் என்று பார்த்தால், போன HortiTech-ல் வாங்கிய சில Omaxe ஹைப்ரிட் விதைகள் (வெள்ளை குடை மிளகாய், Hot Pepper மிளகாய், Musk Melon). நாட்டு ரகங்களில் கண்டங்கத்தரி, தூதுவளை, ஆகியவற்றை கூறலாம். தவிர பரமேஸ் கொடுத்த சில புதிய நாட்டு ராகங்கள் (சீனி மிளகாய், சம்பா மிளகாய், மஞ்சள் தக்காளி, கும்பு சுரை)

Omaxe Hybrid Seeds for this season


அடிப்படை காய்கறிகளை (தக்காளி, கத்தரி, வெண்டை, அவரை மற்றும் கொடிகள்) தரையிலும், மற்ற காய்கறிகளை (குடை மிளகாய், முள்ளங்கி வகைகள்) மாடியில் Grow Bag-களிலும் வைக்க இருக்கிறேன். போன முறை முட்டை கோஸ்-ம், காலி ஃப்ளவர்-ம் Grow Bag-ல் வைத்து அவ்வளவு செழிப்பாய் வரவில்லை. இவைகளுக்கு நிறைய சத்து தேவைப்படுகிறது. சின்ன Grow Bag-களில் வைக்கும் போது செடி வளர்ந்த பிறகு அவ்வளவாய் உரம் சேர்க்க முடிவதில்லை (இடம் இருப்பதில்லை, அப்படி சேர்த்தாலும் அவ்வளவாய் வளர்ச்சி வருவதில்லை). அதனால் இவைகளை மட்டும் இந்த முறை தரையில் ஒரு பாத்தியில் வைக்க இருக்கிறேன்.

விதைகள் எல்லாம் முளைத்து விட்டது. வெண்டையின் முளைப்பு திறன் ரொம்பவே குறைவாக இருந்தது. பதினைந்து விடைகளில் மொத்தமே நான்கு செடிகள் தான் முளைத்தது. அதனால் இரண்டு வாரம் பார்த்துவிட்டு புதிதாய் ஒரு Tray-ல் போன சீசனில் விதைக்கு விட்டு எடுத்த நாட்டு விதைகளை போட்டு விட்டேன். அவை எல்லாமும் முளைத்து அருமையாக வந்திருக்கின்றன. கொத்தவரை ஓன்று கூட முளைக்கவில்லை. கண்டங்கத்தரியும், துதுவளையும் போட்ட ஐந்து விதைகளில் ஒன்றே ஓன்று தான் முளைத்திருக்கிறது. கொஞ்சம் பார்த்து காப்பாற்றி கொண்டு வரவேண்டும்.

சீசனை தொடங்குவதற்கு முன்னமே தேவையான அளவு மண்புழு உரம் (150 Kg @ Rs7.50/Kg, வீட்டில் இருக்கும் மரங்களுக்கும் சேர்த்து) வாங்கி வைத்து விட்டேன். அதோடு TNAU போய் ஒரு மூன்று லிட்டர் பஞ்சகாவ்யாவும் (Rs.80/Ltr), அன்னூர் போய் 25 Kg (Rs.20/Kg) வேப்பம் புண்ணாக்கும் வாங்கி வைத்து விட்டேன்  .இந்த சீசனுக்கு இது போதும்.

Nursery Tray-க்களில் செடிகள் முளைக்கும் போதே வாரம் ஒரு முறை பஞ்சகாவ்யா கலந்து நீர் ஊற்றி, தெளித்து வந்தால் நாற்றுகள் நன்றாக வரும்.

போன வாரத்தில் இருந்து செடிகள் ஒவ்வொன்றாய் அதற்குரிய பாத்திகளில் நட ஆரம்பித்து விட்டேன். Sweet Corn, Baby Corn, அவரை செடிகள் எல்லாம் எடுத்து பாத்திகளில் வைத்து விட்டேன். புடலை, சுரை, பாகல், வெள்ளரி செடிகளையும் தரையில் வைத்து விட்டேன்.  தக்காளி, மிளகாய், கத்தரி, கோஸ் செடிகளை இந்த வாரம் எடுத்து நட வேண்டும். மற்றவைகளை Grow Bag-களில் வைக்க வேண்டும். கீரைகள் எல்லாம் மாடியில் Grow Bag-களில் வளர ஆரம்பித்து விட்டன.  

இந்த முறை புதிதாய் சேர்த்திருக்கும் ரகங்கள் எப்படி வருகிறது என்று பார்க்க வேண்டும். இவை எல்லாம் செப்டம்பரில் அறுவடைக்கு தயாராக இருக்கும். இந்த சீசன் செடிகளின் வளர்ச்சி, அறுவடை, மற்ற பிரச்சனைகள் பற்றி வரும் வாரங்களில் பகிர்ந்து கொள்கிறேன்.     




அவரை நாற்றுகள்

தக்காளி - பீன்ஸ்

மிளகாய் - பாகல் - புடலை - வெள்ளரி

கத்தரி

மிளகாய்

முட்டை கோஸ் (Cabbage)


Sweet Corn - Baby Corn - Water melon - Musk Melon - Avarai


Sweet Corn - Baby Corn

 Garden Tips – 001    

பஞ்சகாவ்யாவை ஒரு பக்கெட்டில் வைத்து தினமும் இரண்டு முறை ஒரு குச்சியை வைத்து நன்றாக கலக்கி விட்டு வந்தால் இரண்டு-மூன்று மாதங்களுக்கு வைத்து பயன்படுத்தலாம். நல்ல குளிர்ச்சியான நிழலில் வையுங்கள். கொசு, பூச்சிகள் உள்ள விழாத மாதிரி மூடி இருக்கும் பக்கெட்டில் வைத்து, மூடியில் காற்று போகும் படி சின்ன சின்ன துளைகள் நிறைய போட்டு வைத்தால் போதும்.




Garden Tips – 002

Nursery Tray-ல் விதைகள் நடும் போது புதிதாய் Coir Pith மீடியா தயாரித்து உபயோகிக்கவும். ஏற்கனவே பயன்படுத்திய Coir Pith கலவையை பயன்படுத்தும் போது முளைக்கும் செடிகள் கூடவே நிறைய களைகளும் (புற்கள், பிற செடிகள்) வளர ஆரம்பிக்கும்.

Garden Tips – 003

Nursery Tray-ல் விதைகள் நடும் போது கத்தரி, தக்காளி மாதிரி சிறிய விதைகளை ஒரே குழியில் இரண்டு-மூன்று விதைகள் போட்டு விடவும். முளைப்பு திறன் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு குழியிலும் ஒரு செடியாவது வரும். சில நேரம் நல்ல முளைப்பு திறன் உள்ள விதைகளாக இருப்பின் ஒரே குழியில் நான்கைந்து செடிகள் வளர்ந்து விடும். அவற்றை உடனே நீக்காமல் கொஞ்சம் வளரவிட்டு பிறகு அவற்றில் நல்ல திரட்சியான செடியை விட்டுவிட்டு மற்றவற்றை வெட்டி விடலாம் (பிடுங்க கூடாது. பிடுங்கினால் நாம் விட நினைத்த செடியின் வேரும் பாதிக்கும்).