Showing posts with label Gardening DO IT YOURSELF KIT. Show all posts
Showing posts with label Gardening DO IT YOURSELF KIT. Show all posts

Saturday, November 8, 2014

மாடித் தோட்டம் (with DIY Kit) – கீரைகள்



நிறைய நண்பர்கள் DO IT YOURSELF KIT வாங்கி மாடி தோட்டம் முயற்சிப்பதை பார்க்க முடிகிறது. சிலர் ஆர்வ மிகுதியில் வாங்கி விட்டு ரெண்டு கத்தரி தான் கிடைச்சது, ஆயிரம் ரூபாய் ண்டம் என்று சில புகார்களையும் கேட்க முடிந்தது. சிலருக்கு வெறும் Coir Pith-ஐ வைத்து கொண்டு என்ன செய்வது, வேறு என்ன கலக்க வேண்டும், எந்த விகிதத்தில் கலக்க வேண்டும் என்று குழப்பம் (இது சரியாக DO IT YOURSELF KIT-ல் கொடுக்கவில்லை. வெறும் சூடோமொனாஸ் கலந்து வைத்தால் செடி வந்து விடுமா என்ன?). கெமிக்கல் முறையில் நீங்கள் செய்ய நினைத்தால் NPK Solution வைத்தே செய்யலாம் என்று நினைக்கறேன் (அதையும் DO IT YOURSELF KIT-ல் கொடுத்தார்கள்). நம்ம தோட்டத்தில் எப்பவுமே இயற்கை வழி விவசாயம் தான். எந்த மாதிரி கலவையை முயற்சிக்கலாம் என்பதை இந்த பதிவில் முன்பு விளக்கமாக கொடுத்து இருந்தேன். பாருங்கள்.


பதிவு1

பதிவு2

முதன்முறை மாடி தோட்டம் முயற்சிப்பவர்களுக்கு கீரைகள் ஏற்றதாக இருக்கும். நல்ல விளைச்சலும் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான கீரைகளை எளிதாக எடுக்க முடிக்கும் (வெளியே கிடைக்கும் கீரைகள் எப்படி நம்பி வாங்குவது என்று தெரியவில்லை. பூச்சி அரிக்காமல் இருக்க பூச்சி மருந்து தெளித்து இருக்கலாம், எப்படி பட்ட நீரில் வளர்த்தார்கள் இப்படி நிறைய யோசனைகளை வருகிறது. இதை பற்றி இப்போது விவாதிக்க வேண்டாம்). நம் வீட்டிலேயே ரொம்ப எளிதாக எல்லா கீரைகளையும் எடுக்க முடியும். அதுவும் நிறைய கீரைகள் விதைத்து மூன்று – நான்கு வாரத்திலேயே அறுவடைக்கு தயாராக இருக்கும். கொஞ்சம் திட்டமிட்டு விதைத்தால் வருடம் முழுவதும் கீரை தாராளமாய் கிடைக்கும்.

நான் DO IT YOURSELF KIT-ஐ வைத்து கீரை தோட்டம் தான் போட்டிருக்கிறேன். அதை ஒவ்வொரு கீரையை விவரமாய் பார்க்கலாம்.  

வீட்டில் என்ன என்ன கீரை வளர்க்கலாம் என்று பட்டியலிட்டு பார்த்தால், இவைகளை கூறலாம் (விடுபட்ட கீரைகளை நண்பர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்)

பாலக் கீரை
தண்டங் கீரை
பருப்புக் கீரை (பச்சை மற்றும் சிவப்பு)
புளிச்சக் கீரை
பொன்னாங்கண்ணி கீரை
வல்லாரை கீரை
அகத்திக் கீரை
வெந்தயக் கீரை
பசலை கீரை
கொத்த மல்லி
புதினா


இவற்றில் சிலவற்றை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இப்போது DO IT YOURSELF KIT கொண்டுவந்த கீரை தோட்டத்தை பற்றி பார்க்கலாம் (நண்பர்கள் முயற்சிக்கவும் பயனுள்ளதாக இருக்கும்)

புளிச்சக் கீரை (Gongura)

ஆந்திரா மெஸ்ல சாப்பிடவங்களுக்கு இந்த கோங்குரா ஊறுகாய் தெரிந்திருக்கும். கொஞ்சம் புளிய இலையை கடைந்து காரம் சேர்த்த மாதிரி ஒரு சுவை இருக்கும். சென்னையில் இருக்கும் போது ஆந்திரா மெஸ்ல சாப்பிடும் போது அது ஒரு கீரை என்று தெரியாது. கீரை விதைகளை முதலில் வாங்கிய போது (இங்கே ARJUN Growbags-ல்) கிடைத்த அத்தனை கீரையையும் வாங்கியதில் இந்த புளிச்ச கீரையும் வந்தது. இரண்டு பையில் போட்டு விட்டேன்.

நன்றாக வளர்ந்த பிறகு தான் கீரையை என்ன செய்வது என்ற நமது கூகிள் தேடல் தொடங்கியது. தெளிவாக ஒரு செய்முறை வீடியோ ஓன்று Youtube-ல் கிடைத்தது. அதை பார்த்த பிறகு தான் அடடே இது நம்ம ஆந்திரா மெஸ் துவையல் மாதிரி இருக்கே என்று. வீட்டில் உடனே இலையை பறித்து ரெசிபி படி செய்தும் கொடுத்துவிட்டார்கள். நல்ல ருசி. நிறைய நாள் வைத்து ஊறுகாயாக வைத்து சாப்பிடலாம். 








பாலக் கீரை

முன்பு பாலக் கீரையை தரையில் முயற்சித்து சரியாக வராமல் போய், வந்த ஓன்று இரண்டும் பூச்சி சாப்பிட்டுவிட்டு போக, பிறகு முயற்சிக்கவே இல்லை இப்போது Coir Pith மீடியா வந்த பிறகு நிறைய செடிகள் எளிதாக வருகிறது. அதில் ஓன்று பாலக் கீரை. பாலக்கீரை விதை எல்லா கடைகளிலும் கிடைக்கிறது (Biocarve மாதிரி இணையத்தில் இதை Spinach என்று போட்டு விலை முப்பது-நாற்பது என்று விற்கிறார்கள். அது பாலக் கீரை தான். அது உள்ளூர் விதை கடைகளிலேயே பத்து ரூபாய்க்கு கிடைக்கும். அதை வாங்கினால் போதும்)

பாலக்கீரையை வீட்டில் முட்டை எல்லாம் போட்டு ஒரு கீரை கூட்டு வைப்பார்கள் நன்றாக இருக்கிறது.

பாலக்கீரையை அறுவடை செய்யும் போது கீழே இருக்கும் பாகத்தை அப்படியே வேரோடு விட்டுவிட்டால் நமக்கு அது தளிர்த்து இரண்டாவது அறுவடையும் கிடைக்கும்,





பருப்புக் கீரை

எளிதாக வரும் இன்னொரு கீரை. கொஞ்சம் கிளறி தூவி விட்டால் போதும், மூன்று வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருக்கும். வீட்டில் இதை சாம்பார் (பருப்பு குழம்பு) வைக்கும் போது போட்டு வைப்பார்கள். நன்றாக இருக்கும். 

இதில்  சிவப்பு நிறத்தில் பருப்பு கீரை ஒன்றும் கிடைக்கிறது. அதை இந்த பதிவில் எழுதி இருந்தேன்.





பொன்னாங்கண்ணி

இது சிவப்பு பொன்னாங்கண்ணி. இது ஊரில் இருந்து கொண்டு வந்த ஒரு குச்சி, வைத்து விட்டால் அதுவாக மடமடவென்று தளிர்த்து கொள்ளும். நாம் வேண்டும் போது வெட்டி எடுத்துக் கொள்ளலாம். உடனே குப்பென்று தளிர்த்து விடும். 

Coir Pith–ல் சரியாக வருமா என்று நினைத்தேன். முன்பு மண்ணில் வைத்ததை விட நன்றாக வந்திருக்கிறது. கொஞ்சம் அறுவடைக்கு பிறகு நிறைய தளிர் வந்து அடர்த்தியாக ஆகி விடும். அப்போது மீண்டும் பிடுங்கி விட்டு, புதிதாய் அதில் கொஞ்சம் குச்சிகளை வெட்டி வைத்தால் வந்து விடும்.

இதை தவிர பச்சை இலையோடு இன்னொரு பொன்னாங்கண்ணி கீரையும் இருக்கிறது. அதை இன்னும் முயற்சிக்க வில்லை.       





வெந்தய கீரை

மற்றும் ஒரு எளிதான கீரை. சமையல் அறையில் இருக்கும் வெந்தயம் கொஞ்சம் எடுத்து தூவி விட்டால் போதும், தனியாக விதை வாங்க வேண்டியதில்லை (இதையும் Methi என்று விதையாக விற்கிறார்கள். அது நமக்கு தேவையில்லை). தூவி விட்டு இரண்டு நாளில் முளைத்து செழிப்பாக வளர ஆரம்பித்து விடும். எங்க வீட்டில் இதை பறித்து லேசாக வதக்கி மாவில் கலந்து சப்பாத்தி சுடுவார்கள். கசப்பு லேசாய் இருந்தாலும் நல்ல ருசி. உடலுக்கும் ரொம்ப நல்ல கீரை. இப்போது தவறாமல் தோட்டத்தில் போட்டு விடுகிறேன்.  





மல்லி

வெந்தயம் மாதிரி இதுவும் கொஞ்சம் மல்லியை எடுத்து தூவி விட்டால் முளைத்து விடும் (பாதியாக உடைத்து போட்டால் எளிதாக முளைக்கிறது). பொதுவாய் நாம் வீட்டில் இருக்கும் மல்லியை போட்டால் செடி கடையில் கிடைப்பது போல பெரிதாக வருவதில்லை. சின்னதாய் இருக்கும் போதே பூ பூத்து விடும். இந்த முறை DO IT YOURSELF KIT-ல் கொடுத்த விதையை போட்டேன். நன்றாக வந்திருந்தது.






.

Tuesday, March 4, 2014

மாடித் தோட்டம் – DO IT YOURSELF KIT - ஒரு பார்வை



நான் ஜனவரியில் பதிவு செய்த அரசின் ‘DO IT YOURSELF KITஐ போன வாரம் முதல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இங்கே கோவையில் நான் போன் செய்து கேட்ட போது வீட்டிற்க்கே வந்து கொடுப்பதாக கூறினார்கள். கூறிய படி, சனிக்கிழமை காலையில் ஒரு வேனில் வந்து எல்லா பொருட்களையும் கொடுத்து, பில் போட்டு காசு வாங்கி போய் விட்டார்கள். விலை – Rs. 1325.

அதில் இருபது பாலிதீன் GROW BAGS. ஒவ்வொன்றிக்கு தேவையான Coir Pith Block, அதற்குள்ளேயே pack செய்து வைத்திருக்கிறார்கள். GROW BAG அளவு ஒரு அடிக்கு ஒரு அடி (கொஞ்சம் அதிகம்) என்ற அளவில் பெரிதாகவே இருக்கிறது. பையின் தரமும் நன்றாகவே தெரிகிறது. அவர்கள் கொடுத்திருக்கும் செய்முறை படி அதை அப்படியே நீரில் நனைத்து பயன்படுத்த கூறி இருக்கிறார்கள். நீரில் அலசி பயன்படுத்த வேண்டுமென்று ஒன்றும் கூறவில்லை. கொடுத்திருக்கும் Bio Fertilizer  மற்றும் Fungicide  கலந்து விட்டால் ஒரு வாரத்தில் Coir Pith மக்கி போய் விடும் என்றும், அதன் பிறகு நாற்று நட கூறி இருக்கிறார்கள். ஆனால் பட்டியலில் இருந்க்கும் சூடோமொனஸ் இன்னும் வரவில்லை. ஒரு வாரத்தில் மறுபடி வந்து தருவதாக கூறி சென்றிருக்கிறார்கள்.




விதைகள் என்று பார்த்தால், ஒவ்வொரு பாக்கெட்டிலும் அளவுக்கு அதிகமாகவே விதைகள்  இருக்கிறது. கொத்தமல்லி, பாலக்கீரை, சிறுகீரை எல்லாம் 100 Gms அளவில் பெரிதாகவே இருக்கிறது. தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய் எல்லாம் US Agriseeds என்றொரு நிறுவனத்தில் விதைகளாய் இருக்கிறது. எல்லாமும் இந்த பெப்ருவரியில் பேக் செய்யபட்டதாக இருக்கிறது. இன்னும் ஒரு வருடம் பயன்படுத்தலாம். ஆனால்  எல்லாமே Hybrid ரகங்கள் (F1 Hybrid) தான்.  இதை தவிர, முள்ளங்கி, கொத்தவரை, பீன்ஸ் விதைகளும் இருக்கிறது. 

தோட்டதிற்க்கான உபகரணங்கள் என்று பார்த்தல், ஒரு ஐந்து லிட்டர் பூ வாளி, ஒரு கை தெளிப்பான் (Hand Sprayer) ,  மண் அள்ள ஒரு Shovel-ம் ஒரு Fork Type Shovel ம், 50 Holes Nursery Tray-ம் இருக்கிறது. பூ வாளி மற்றும் இதர பொருட்கள் பிளாஸ்டிக் தரத்தை பார்த்தால் உறுதியாக நன்றாகவே இருக்கிறது. இவை எல்லாமே என்னிடம் நிறைய இருப்பதால் இவைகள் பயன்பட போவதில்லை. யாருக்காவது கொடுக்க வேண்டியது தான்.


உரம் மற்றும் பூச்சி கொல்லி பொருட்களில் எக்கச்சக்க ரசாயன பொருட்கள். NPK 19:19:19 உரம் (Nitrogen (N), Phosphorus (P), and Potassium (K) Mix) ஒரு கிலோ பாக்கெட் இரண்டும் (Water Soluble Fertilizer., trichoderma viride Bio fungicide (Coir Pith-ஐ மக்க வைக்க), NeeMarin 300 என்றொரு பூச்சிக் கொல்லி மருந்தும் இருக்கிறது. இவைகளே விலை ஐநூறு வரும் போல. என் தோட்டத்தில் இதுவரை மருந்துக்கு கூட எந்த ரசாயனமும் உரமாகவோ, பூச்சி கொல்லியாகவோ பயன்படுத்தியது கிடையாது. எனக்கும் கடந்த மூன்று வருடமாக செடிகள் எல்லாம் நன்றாக தான் வருகின்றன. நன்றாக தான் காய்க்கின்றன. வெறும் Coir Pith, மண்புழு உரம், கொஞ்சம் மணல் கலந்த கலவையில் என் மாடி தோட்டம் கலக்கலாய் தான் வந்து கொண்டிருக்கிறது. வீட்டுதோட்டத்திற்கு இந்த ரசாயனங்கள் எதற்கு என்று தெரியவில்லை. இது குப்பையில் தான் போகும் என்று நினைக்கிறேன்.
இணையத்தில் PDF வடிவில் கிடைக்கும் விளக்க புத்தகத்தை ஒரு புத்தகமாக கொடுத்திருக்கிறார்கள். 


இதை தவிர முக்கியமான 4 by 4 meter Polythene Sheet இன்னும் கொடுக்கவில்லை. அதை தவிர அசோஸ்பயிரில்லம், சூடோமொனாஸ், பாஸ்போ-பாக்டீரியா என்று மூன்று பொருட்களும் கொடுக்கவில்லை. இன்னும் வரவில்லை, இன்னும் ஒரு வாரத்தில் வந்தவுடன் வீட்டிற்க்கே வந்து தருவதாக கூறி சென்றிருக்கிறார்கள். 

மொத்தத்தில்.கொடுத்திருக்கும் பொருட்களின் மதிப்பு நிச்சமாய் 1325 ரூபாய்க்கு அதிகம் தான். பொருட்களின் தரமும் நன்றாகவே இருக்கிறது. இதே பொருளை, வெறும் ஒரு GROW BAG-ல் Coir Pith-ல் கொஞ்சம் உரத்தை கலந்து 200 ரூபாய்க்கு விற்கும் நிறைய நிறுவனங்கள் இருக்கிறது. அதை பார்க்கும் போது, இந்த KIT கண்டிப்பாக மாடி தோட்டம் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு தேவையான எல்லா பொருட்களையும் விலை குறைவாகவே கிடைக்கிறது. விருப்பமானவர்கள் வாங்கி பயன் பெறலாம்.