Showing posts with label Spinach. Show all posts
Showing posts with label Spinach. Show all posts

Saturday, November 8, 2014

மாடித் தோட்டம் (with DIY Kit) – கீரைகள்



நிறைய நண்பர்கள் DO IT YOURSELF KIT வாங்கி மாடி தோட்டம் முயற்சிப்பதை பார்க்க முடிகிறது. சிலர் ஆர்வ மிகுதியில் வாங்கி விட்டு ரெண்டு கத்தரி தான் கிடைச்சது, ஆயிரம் ரூபாய் ண்டம் என்று சில புகார்களையும் கேட்க முடிந்தது. சிலருக்கு வெறும் Coir Pith-ஐ வைத்து கொண்டு என்ன செய்வது, வேறு என்ன கலக்க வேண்டும், எந்த விகிதத்தில் கலக்க வேண்டும் என்று குழப்பம் (இது சரியாக DO IT YOURSELF KIT-ல் கொடுக்கவில்லை. வெறும் சூடோமொனாஸ் கலந்து வைத்தால் செடி வந்து விடுமா என்ன?). கெமிக்கல் முறையில் நீங்கள் செய்ய நினைத்தால் NPK Solution வைத்தே செய்யலாம் என்று நினைக்கறேன் (அதையும் DO IT YOURSELF KIT-ல் கொடுத்தார்கள்). நம்ம தோட்டத்தில் எப்பவுமே இயற்கை வழி விவசாயம் தான். எந்த மாதிரி கலவையை முயற்சிக்கலாம் என்பதை இந்த பதிவில் முன்பு விளக்கமாக கொடுத்து இருந்தேன். பாருங்கள்.


பதிவு1

பதிவு2

முதன்முறை மாடி தோட்டம் முயற்சிப்பவர்களுக்கு கீரைகள் ஏற்றதாக இருக்கும். நல்ல விளைச்சலும் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான கீரைகளை எளிதாக எடுக்க முடிக்கும் (வெளியே கிடைக்கும் கீரைகள் எப்படி நம்பி வாங்குவது என்று தெரியவில்லை. பூச்சி அரிக்காமல் இருக்க பூச்சி மருந்து தெளித்து இருக்கலாம், எப்படி பட்ட நீரில் வளர்த்தார்கள் இப்படி நிறைய யோசனைகளை வருகிறது. இதை பற்றி இப்போது விவாதிக்க வேண்டாம்). நம் வீட்டிலேயே ரொம்ப எளிதாக எல்லா கீரைகளையும் எடுக்க முடியும். அதுவும் நிறைய கீரைகள் விதைத்து மூன்று – நான்கு வாரத்திலேயே அறுவடைக்கு தயாராக இருக்கும். கொஞ்சம் திட்டமிட்டு விதைத்தால் வருடம் முழுவதும் கீரை தாராளமாய் கிடைக்கும்.

நான் DO IT YOURSELF KIT-ஐ வைத்து கீரை தோட்டம் தான் போட்டிருக்கிறேன். அதை ஒவ்வொரு கீரையை விவரமாய் பார்க்கலாம்.  

வீட்டில் என்ன என்ன கீரை வளர்க்கலாம் என்று பட்டியலிட்டு பார்த்தால், இவைகளை கூறலாம் (விடுபட்ட கீரைகளை நண்பர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்)

பாலக் கீரை
தண்டங் கீரை
பருப்புக் கீரை (பச்சை மற்றும் சிவப்பு)
புளிச்சக் கீரை
பொன்னாங்கண்ணி கீரை
வல்லாரை கீரை
அகத்திக் கீரை
வெந்தயக் கீரை
பசலை கீரை
கொத்த மல்லி
புதினா


இவற்றில் சிலவற்றை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இப்போது DO IT YOURSELF KIT கொண்டுவந்த கீரை தோட்டத்தை பற்றி பார்க்கலாம் (நண்பர்கள் முயற்சிக்கவும் பயனுள்ளதாக இருக்கும்)

புளிச்சக் கீரை (Gongura)

ஆந்திரா மெஸ்ல சாப்பிடவங்களுக்கு இந்த கோங்குரா ஊறுகாய் தெரிந்திருக்கும். கொஞ்சம் புளிய இலையை கடைந்து காரம் சேர்த்த மாதிரி ஒரு சுவை இருக்கும். சென்னையில் இருக்கும் போது ஆந்திரா மெஸ்ல சாப்பிடும் போது அது ஒரு கீரை என்று தெரியாது. கீரை விதைகளை முதலில் வாங்கிய போது (இங்கே ARJUN Growbags-ல்) கிடைத்த அத்தனை கீரையையும் வாங்கியதில் இந்த புளிச்ச கீரையும் வந்தது. இரண்டு பையில் போட்டு விட்டேன்.

நன்றாக வளர்ந்த பிறகு தான் கீரையை என்ன செய்வது என்ற நமது கூகிள் தேடல் தொடங்கியது. தெளிவாக ஒரு செய்முறை வீடியோ ஓன்று Youtube-ல் கிடைத்தது. அதை பார்த்த பிறகு தான் அடடே இது நம்ம ஆந்திரா மெஸ் துவையல் மாதிரி இருக்கே என்று. வீட்டில் உடனே இலையை பறித்து ரெசிபி படி செய்தும் கொடுத்துவிட்டார்கள். நல்ல ருசி. நிறைய நாள் வைத்து ஊறுகாயாக வைத்து சாப்பிடலாம். 








பாலக் கீரை

முன்பு பாலக் கீரையை தரையில் முயற்சித்து சரியாக வராமல் போய், வந்த ஓன்று இரண்டும் பூச்சி சாப்பிட்டுவிட்டு போக, பிறகு முயற்சிக்கவே இல்லை இப்போது Coir Pith மீடியா வந்த பிறகு நிறைய செடிகள் எளிதாக வருகிறது. அதில் ஓன்று பாலக் கீரை. பாலக்கீரை விதை எல்லா கடைகளிலும் கிடைக்கிறது (Biocarve மாதிரி இணையத்தில் இதை Spinach என்று போட்டு விலை முப்பது-நாற்பது என்று விற்கிறார்கள். அது பாலக் கீரை தான். அது உள்ளூர் விதை கடைகளிலேயே பத்து ரூபாய்க்கு கிடைக்கும். அதை வாங்கினால் போதும்)

பாலக்கீரையை வீட்டில் முட்டை எல்லாம் போட்டு ஒரு கீரை கூட்டு வைப்பார்கள் நன்றாக இருக்கிறது.

பாலக்கீரையை அறுவடை செய்யும் போது கீழே இருக்கும் பாகத்தை அப்படியே வேரோடு விட்டுவிட்டால் நமக்கு அது தளிர்த்து இரண்டாவது அறுவடையும் கிடைக்கும்,





பருப்புக் கீரை

எளிதாக வரும் இன்னொரு கீரை. கொஞ்சம் கிளறி தூவி விட்டால் போதும், மூன்று வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருக்கும். வீட்டில் இதை சாம்பார் (பருப்பு குழம்பு) வைக்கும் போது போட்டு வைப்பார்கள். நன்றாக இருக்கும். 

இதில்  சிவப்பு நிறத்தில் பருப்பு கீரை ஒன்றும் கிடைக்கிறது. அதை இந்த பதிவில் எழுதி இருந்தேன்.





பொன்னாங்கண்ணி

இது சிவப்பு பொன்னாங்கண்ணி. இது ஊரில் இருந்து கொண்டு வந்த ஒரு குச்சி, வைத்து விட்டால் அதுவாக மடமடவென்று தளிர்த்து கொள்ளும். நாம் வேண்டும் போது வெட்டி எடுத்துக் கொள்ளலாம். உடனே குப்பென்று தளிர்த்து விடும். 

Coir Pith–ல் சரியாக வருமா என்று நினைத்தேன். முன்பு மண்ணில் வைத்ததை விட நன்றாக வந்திருக்கிறது. கொஞ்சம் அறுவடைக்கு பிறகு நிறைய தளிர் வந்து அடர்த்தியாக ஆகி விடும். அப்போது மீண்டும் பிடுங்கி விட்டு, புதிதாய் அதில் கொஞ்சம் குச்சிகளை வெட்டி வைத்தால் வந்து விடும்.

இதை தவிர பச்சை இலையோடு இன்னொரு பொன்னாங்கண்ணி கீரையும் இருக்கிறது. அதை இன்னும் முயற்சிக்க வில்லை.       





வெந்தய கீரை

மற்றும் ஒரு எளிதான கீரை. சமையல் அறையில் இருக்கும் வெந்தயம் கொஞ்சம் எடுத்து தூவி விட்டால் போதும், தனியாக விதை வாங்க வேண்டியதில்லை (இதையும் Methi என்று விதையாக விற்கிறார்கள். அது நமக்கு தேவையில்லை). தூவி விட்டு இரண்டு நாளில் முளைத்து செழிப்பாக வளர ஆரம்பித்து விடும். எங்க வீட்டில் இதை பறித்து லேசாக வதக்கி மாவில் கலந்து சப்பாத்தி சுடுவார்கள். கசப்பு லேசாய் இருந்தாலும் நல்ல ருசி. உடலுக்கும் ரொம்ப நல்ல கீரை. இப்போது தவறாமல் தோட்டத்தில் போட்டு விடுகிறேன்.  





மல்லி

வெந்தயம் மாதிரி இதுவும் கொஞ்சம் மல்லியை எடுத்து தூவி விட்டால் முளைத்து விடும் (பாதியாக உடைத்து போட்டால் எளிதாக முளைக்கிறது). பொதுவாய் நாம் வீட்டில் இருக்கும் மல்லியை போட்டால் செடி கடையில் கிடைப்பது போல பெரிதாக வருவதில்லை. சின்னதாய் இருக்கும் போதே பூ பூத்து விடும். இந்த முறை DO IT YOURSELF KIT-ல் கொடுத்த விதையை போட்டேன். நன்றாக வந்திருந்தது.






.

Thursday, February 28, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – கீரைகள்


கீரைகள் வீட்டுத் தோட்டங்களில் முக்கியமாக வளர்க்க வேண்டிய ஓன்று. இப்போது இருக்கும் நவீன விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்தின் பயன்பாட்டிற்க்கு ஒன்றும் குறைவில்லை. நிறைய விளைச்சல் எடுப்பதற்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி பற்றி நிறைய எழுதலாம் (பிறகு). இது கீரைகளில் தெளிக்கும் போது அது இலைகளில் உறிஞ்சிக் கொள்ளும் விகிதம் காய்கறிகளை ஒப்பிடும் போது அதிகம். அதனால் தான் கடைகளில் கீரைகள் ரொம்ப பிரெஷ்ஷா பூச்சி அரிப்பு ஓன்று கூட இல்லாமல் கிடைக்கிறது. லேசாய் பூச்சி அரித்தாலும் நாம் வாங்குவதும் இல்லை. ஆனால் பொதுவாய் கீரைகளை நிறைய பூச்சிகள் வந்து சாப்பிடும். பூச்சியே சாப்பிட தகாத இலையில் எவ்வளவு ரசாயன மருந்துகள் இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளுங்கள். 

இங்கே வீட்டில் முடிந்த அளவுக்கு கீரைகள் தோட்டத்தில் இருந்து தான் பயன்படுத்துவோம். கீரைகள் வளர்ப்பது மிகவும் எளிது. சில கீரைகள் (புதினா, பொன்னாங்கண்ணி) நமக்கு தொடர்ந்து பலன் கொடுத்துக் கொண்டிருக்கும். மாடி தோட்டங்களிலும் எளிதாக வளர்க்கலாம். ஊடு பயிராக மற்ற செடிகளின் இடைவெளியில் போட்டு வைக்கலாம்.  
 
ஏற்கனவே மணத்தக்காளி கீரை பற்றி தனியாக ஒரு பதிவில் எழுதி இருந்தேன். அதனால் மற்ற கீரைகள் பற்றி பார்க்கலாம்.

சிறுகீரை மற்றும் அரைக்கீரை
     இதன் விதைகள் பொதுவாக எல்லா உரக்கடைகளிலும் கிடைக்கிறது.  கீரைகளில் ரொம்ப ருசியான கீரை என்று இதை சொல்லலாம். ஒரு பாத்தியில் கிளறி விதைகளை தூவி விட்டால் போதும். வளர்ந்தவுடன் போதும் என்ற அளவுக்கு பிடுங்கி கொள்ளலாம். குட்டீஸ்களுக்கு பொதுவாய் கீரை என்றால் பிடிப்பது இல்லை. ஆனால் இந்த கீரைகளை கொஞ்சம் பருப்பு எல்லாம் போட்டு கடைந்து எடுத்தால் சாப்பிட்டு விடுவார்கள். இந்த கீரை வகையில் தண்டங்கீரையும் அடங்கும். ஆனால் அம்மா தண்டங்க்கீரை அவ்வளவாய் நல்ல கீரை இல்லை என்பார்கள். அதனால் வளர்ப்பது இல்லை.

     அரைக்கீரையில் சில நேரம் பூச்சி வந்து இலையை அரித்து விடும். நான் பொதுவாக சாம்பலை செடிகளுக்கு மேலே தூவி விடுவேன் (விறகு எரித்து வரும் சாம்பல்). ஓரளவுக்கு கட்டுபாட்டில் வரும்.    
 

 



பொன்னாங்கண்ணி கீரை
 நிறைய சத்துள்ள ஒரு கீரையாக பொன்னாங்கண்ணி கீரையை சொல்லலாம். கண் பார்வைக்கு ரொம்ப நல்ல கீரை. இங்கே கோவையில் வேறு ஒரு கீரையை தான் பொன்னாங்கண்ணி கீரை என்கிறார்கள். பச்சையும், முழு பிங்க் நிறத்திலும் இந்த கீரை வரும். செடியில் இருந்து பறித்த கீரையில் இருந்து ஒரு குச்சியை வைத்தால் வளர்ந்து விடும். வேண்டும் போது தேவையான அளவு வெட்டி எடுத்துக் கொள்ளலாம். பிறகு தளிர் விட்டு வளர்ந்து விடும்.
     பொன்னாங்கண்ணி கீரையில் பூச்சி அரிப்பு வந்து இலையில் சின்ன சின்னதாய் ஓட்டை விழும். தண்ணீர் விடும் போது வேகமாக நீரை செடி மீது பீச்சி அடிப்பதன் மூலம் அந்த பிரச்சினை கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது. 
 


பருப்புக் கீரை
கோவை வந்து தான் இந்த கீரை பற்றி கேள்விப்பட்டேன். இங்கே விவசாய கல்லூரியில் விதை கிடைத்தது. பருப்பு போட்டு கடைந்து கூட்டு வைத்தால் செம ருசியாக இருக்கிறது. போன வருடம் கத்தரியில் ஊடு பயிராக போட்டிருந்தேன்.
 


முருங்கை கீரை
 ஊரில் எல்லாம் இது ஒரு முக்கியமான கீரை. வாரம் ஒரு தடவையாவது முருங்கை கஞ்சி வைப்பார்கள். அவ்ளோ ருசியா இருக்கும். கூட்டும் வைக்கலாம். இங்கே கோவையில், ஒரு பெரிய மரம் இருந்தது. அது முறிந்து விழுந்த பிறகு, தோண்டி எடுத்து விட்டு மாதுளை வைத்து விட்டேன். இருந்தாலும் அந்த மரம் வேரில் இருந்து தளிர்த்து வளர்த்து கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடம் ஆகிவிட்டது. வெட்ட வெட்ட இன்னமும் தளிர்த்து கொண்டே இருக்கிறது. நாங்களும் கீரைக்காக வளர்த்து பிறகு வெட்டி விட்டுவோம். இந்த மரத்தால் எங்கள் வீட்டில் முருங்கை கீரைக்கு பிரச்சனை இல்லை. 



புதினா
புதினா கீரை ஒரு சிறந்த மூலிகை செடி. வீட்டில் புதினா சட்னி, துவையல் நிறைய செய்வதுண்டு. கடையில் புதினா வாங்கும் போது தூர எறியும் குச்சிகளை நட்டு வைத்தால் போதும், ஒரு வாரத்தில் தளிர் விட ஆரம்பித்து விடும். வளர்ந்தவுடன் தேவையான அளவு வெட்டி எடுத்து கொள்ளலாம். பிறகு தளிர்த்து விடும். தொட்டிகளில் வளர்க்க ஏற்ற கீரை புதினா. 



கொத்தமல்லி
புதினா மாதிரி மல்லியும் நிறைய மருத்துவ குணம் கொண்டது. கொத்தமல்லியை நாம் கீரையாக அவ்வளவு பயன்படுத்துவது கிடையாது. கொத்தமல்லியில் சட்னி, சாதம் செய்யலாம். கிச்சனில் இருக்கும் முழு மல்லியில் இருந்து கொஞ்சமாய் எடுத்து தூவி விட்டால் போதும். வளர்ந்து  விடும். நன்றாக வளர்ந்ததும் பிடுங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். பூப்பதற்கு முன் பறிப்பது நல்லது.  
இதை தவிர, அகத்திக் கீரை, புளிச்சக் கீரை, பாலக்கீரை, வல்லாரை, வெந்தயக்கீரை என்று இன்னும் நிறைய கீரைகள் உண்டு. இதில் பாலக்கீரை இங்கே தோட்டத்தில் போன வருடம் சரியாக வரவில்லை. நிறைய பூச்சி வந்து சாப்பிட்டுவிட்டு போய் விட்டது. மீண்டும் முயற்சித்து பார்க்க வேண்டும். மற்ற கீரைகளும் அடுத்த முறை முயற்சி செய்து பார்க்க வேண்டும்.