Friday, September 27, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – தர்பூசணி

சில செடிகள் நல்ல விதையாக போட்டு, உரமாக அள்ளி போட்டு, என்ன தான் சூடம் ஏத்தி விழுந்து விழுந்து சாமி கும்பிட்டாலும், ஒழுங்கா வருவேனா என்று அப்படியே நின்று போய் விடும். சில செடிகள், காட்டு செடி மாதிரி, அது பாட்டுக்க வளர்ந்து காய்த்து கிடக்கும்.

தர்பூசணி, இரண்டு முறை விதை எல்லாம் வாங்கி போட்டு ஒன்றும் வேலைக்காகவில்லை. ஓரளவு வளர்ந்ததும் நோய் வந்தது மாதிரி அப்படியே வளர்ச்சி இல்லாமல் நின்றுவிடும். இந்த முறை கோடையில் (ஜுன் வாக்கில்) வாங்கி சாப்பிட்ட பழத்தில் இருந்து விழுந்த விதை ஓன்று வெங்காய பாத்தியில் இருந்து முளைத்து வந்தது. வீட்டில் காட்டுசெடி என்றார்கள் (தர்பூசணி இலை மாதிரியே ஒரு காட்டுசெடி ஒன்றும் இங்கே வளர்கிறது). ஆனால் எனக்கு இலையை பார்க்க கொஞ்சம் பெரிதாய் தர்பூசணி செடி மாதிரி தான் தெரிந்தது. சரி, காய்க்கும் வரை வளர்த்து பார்த்திடலாம் என்று அப்படியே விட்டுவிட்டேன்.

அதற்கென்று தனி பாத்தியும் கிடையாது. கவனிப்பும் கிடையாது. கொஞ்சம் வளர்ந்த பிறகு வெங்காய செடிகளுக்கு இடையே அது எங்கே இருந்து வருகிறது என்றே தெரியவில்லை. நான்கு வாரத்திலேயே மொத்த இடத்தையும் கைப்பற்றி அடுத்ததாய் மிளகாய், கீரை பாத்தி என்று அது பாட்டுக்கு இருக்கும் இடம் எல்லாம் தர்பூசணி இலையாய் போனது.

கொஞ்ச நாளிலேயே இரண்டு பிஞ்சு பிடித்தது. அது ஓரளவுக்கு சாத்துக்குடி அளவுக்கு வந்த பிறகு தான் வீட்டில் அது தர்பூசணி என்று நம்பினார்கள். கொஞ்சம் பெரிதானது, நான் சும்மா இருக்காமல் சகதி தரையில் பட்டால் காய்  அழுகி விடுமோ என்று நினைத்து, காயை லேசாய் தூக்கி ஒரு காய்க்கு அடியில் கொஞ்சம் வேப்பிலை குவியலை வைத்தேன். இரண்டு நாளில் அந்த காய் அழுகி விட்டது :-(. மிஞ்சியது ஒன்று தான். அதை எந்த தொந்தரவும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டேன்.

ஒரு மாதத்திலேயே நல்ல வளர்ச்சி. அடுத்தது பெரிய பிரச்சனை, தர்பூசணி பழுத்து விட்டதா என்று எப்படி கண்டு பிடிப்பது என்று?. கடைசில கிடைத்த ஒரே பழத்தையும் தப்பாய் சீக்கிரம் பறித்து, வெட்டிப் பார்த்து, உள்ளே வெள்ளையாய் இருந்தால் என்ன செய்ய?. ஒரு ஓட்டையை போட்டு கொஞ்சம் எட்டணா, ஒரு ரூபாய் அள்ளி போட்டு, திருஷ்டி வேணும்னா சுத்தி போடலாம் (தோட்டத்துக்கு தான் :-) ). அப்புறம் இந்த மொத்த காத்திருத்தலும் தண்டமாய் போகும்.

இணையத்தில் ‘How to find ripe watermelon’ என்று தட்டினால், ஒரு பத்து முறைகள் கூறி இருந்தார்கள். அதில் முதலில் தர்பூசணியை புரட்டி பார்த்து அதன் அடிப்பகுதி நிறத்தை பார்த்து கண்டுபிடிப்பது. ஏற்கனவே கை வைத்து தான் ஓன்று போச்சு, அதனால் இந்த சோதனையை கடைசில் வைத்துக்கொண்டேன். நான் எடுத்துக்கொண்ட முறைகள் இவைகள் தான்,

1. Spoon Leaf – எல்லா இலை காம்பும் தொடங்கும் இடத்தில் சின்னதாய் இன்னொரு இலையும் இருக்கும். அதன் வடிவத்தை வைத்து ‘Spoon Leaf’ என்கிறார்கள். காய் வந்திருக்கும் இலையில் வந்திருக்கும் Spoon Leaf, காய் பழுக்க ஆரம்பிக்கும் போது பழுப்பு நிறமாய் மாறி, பின் காய்ந்து விடும். பச்சையாய் இருந்தால் இன்னும் காய் பழுக்கவில்லை என்று அர்த்தம். நான் இதை தான் முதலில் பார்த்துக்கொண்டேன்.
2. அடுத்தது, அந்த இலை அருகில் கொடிக்காக சுருளாய் வரும் கொடி சுருள் (tendril) வைத்து சொல்லலாம். Spoon Leaf மாதிரி தான் இதுவும். பழுப்பாய் மாறி காய்ந்து இருக்க வேண்டும். நான் பறித்த போது பக்கத்து இலை சுருள் எல்லாம் காய்ந்து இருந்தது ஆனால் காய் இருந்த சுருள் காயாமல் கொஞ்சம் பழுப்பு நிறமாய் இருந்தது.
3. முதலில் சொன்னது மாதிரி, தரையில் பட்டிருக்கும் காயின் அடிப்பகுதியின் நிறம். அது மஞ்சளாகவோ, இளம் மஞ்சளாகவோ இருக்க வேண்டும். வெள்ளையாகவோ, இளம் பச்சையாகவோ இருந்தால் இன்னும் பழுக்கவில்லை என்று அர்த்தம். ஆனால் அடிக்கடி புரட்டி பார்த்தால் காய் வாடி போகலாம். கவனம்.  நாம் கடையில் பழம் வாங்கும் போதும் இதை பார்த்து வாங்கலாம்.
நான் முதலில் Spoon Leaf-ஐ பார்த்தேன். அப்போது தான் பழுப்பாக ஆரம்பித்திருந்தது. மூன்று நாளில் காய்ந்து விழுந்து விட்டது. அதன் பிறகு ஒரு ஐந்து நாள் கழித்து, லேசாய் காய் புரட்டி பார்த்தேன். இளம் மஞ்சள் நிறம் தெரிந்தது. தர்பூசணியை ரொம்ப பழுக்க விட்டாலும் அது ஒரு மாதிரி சுவை இல்லாமல் போய் விடும். இன்னொன்று, தர்பூசணி மற்ற பழங்கள் மாதிரி பறித்து வைத்த பிறகு பழுக்காது. மேலே சொன்ன சகுனம் எல்லாம் சரியாக இருக்க, இந்த வாரம் பறித்து விட்டோம்.

வெட்டும் போது ஆர்வமாய் தான் இருந்தது. பழம் perfect-ஆக பழுத்திருந்தது. நல்ல நிறம். மொத்த எடை ஐந்து கிலோ (நல்ல தரம் தான்). அதுவாகவே வளர்ந்த செடியில் பழம் பறித்து சாப்பிடுவது ஒரு தனி சந்தோசம் :-).  இப்போது கொஞ்சம் மழை காலம் என்பதாலும், சில மழை பெய்திருந்ததாலும், பழம் இன்னிப்பு கொஞ்சம் குறைவாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நல்ல இனிப்பு.இதில் இருந்து விதை எடுத்து கொஞ்சம் செடி கொண்டு வந்து பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

அதே செடியில் இன்னும் கொஞ்சம் பிஞ்சு பிடித்திருக்கிறது. எப்படி வருகின்றதென்று  பார்க்கலாம்.












Friday, August 30, 2013

தோட்டம் – Nursery Tray-ல் முதல் முயற்சி



பொதுவாய் சில விதைகள் நேரடியாக விதைக்கலாம் (வெண்டை, அவரை மாதிரி), சில நாற்று விட்டு வளர்ந்த பின் நட வேண்டும் (தக்காளி, கத்தரி மாதிரி). செடிகளின் விதையோ, நாற்றோ ரொம்ப சிறியதாக இருக்கும் பட்சத்தில், நாற்று விட வேண்டியது அவசியம், இல்லாவிட்டால் தொடக்கத்தில் பெரிய பாத்திகளில் நீர் விட்டு வளர்ப்பது கடினம். தவிர தகுந்த இடைவெளி விட்டு விதைத்து கொண்டு வருவதும் கடினம்.

நான் பொதுவாக நாற்று விட தனியாக ஒரு சிறிய பாத்தி ஒன்றை தயார் செய்து கொஞ்சம் இடைவெளியில் விதைத்து வளர்ப்பது உண்டு. இதில் சில பிரச்சனைகள், தக்காளி, கத்தரி செடிகள் பொதுவாக நெருக்கமாய் வந்து விடும். ஒரு செடி என்று தோண்டி எடுக்க கடினமாக இருக்கும். தவிர வேரோடு தோண்டி எடுத்தாலும் புதிய இடத்தில வேர் பிடிக்கும் வரை ஒரு இரண்டு நாள் நாற்று வாடி பிறகு தான் நன்றாக வரும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க இந்த முறை Nursery Tray மூலமாக நாற்று உற்பத்தி செய்ய முயற்சி செய்து பார்த்தேன். 

போன வருடமே இதை முயற்சி செய்ய நினைத்தது தான். ஆனால் Nursery Tray எங்கும் கிடைக்க வில்லை. இங்கே சில நர்சரி கார்டன்களில் அவர்கள் பயன்பாட்டிற்கு மட்டும் வைத்திருந்தார்கள். இந்த முறை இங்கே அக்ரி இன்டெக்ஸ் போன போது Nursery Tray கிடைத்தது.

Nursery Tray பயன்படுத்தும் போது, மணல் பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக தேங்காய் நாரில் இருந்து வரும் தூள் பயன்படுத்த வேண்டும். நான் வீட்டில் கிடந்த தேங்காய் நெட் கொஞ்சம் எடுத்து கையை வைத்தே உதிர்த்து ஓரளவு தூள் தயார் செய்து கொண்டேன். தும்பு/நார் ஏதும் இல்லாமல் வெறும் தூள் மட்டும் இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும்.  வெறும் தூள் மட்டும் போட்டால் சத்து எதுவுமே இருக்காது. எனவே பாதிக்கு பாதி என்ற அளவில் மண்புழு உரம் கலந்து எடுத்துக்கொண்டேன்.

ஒவ்வொரு குழியிலும் பாதி அளவு போட்டு, பிறகு வரிசையாக விதைகளை போட்டு மூடிவிடலாம். ஒரு பேப்பர் எடுத்து அதில் நம்ம Nursery Tray க்கு ஒரு லே-அவுட் போட்டு எந்த வரிசையில் எந்த விதை என்று குறித்துக் கொள்வது நலம். இல்லாவிட்டால் முளைத்தத பிறகு குழப்பம் வரலாம் (குறிப்பாக வெள்ளை, வயலட் கத்தரி, நாட்டு, பெங்களூர் தக்காளி என்று சேர்த்து விதைக்கும் போது). கொஞ்சம் வெயில் படும் இடத்தில் வைத்து நீருற்ற நான்கு ஐந்து நாட்களிலேயே முளைக்க ஆரம்பித்து. 

முதலில் முளைக்கும் போது பெரிய விதைகள் தேங்காய் தூளை அப்படியே பெயர்த்து கொண்டு வரும். இலை வெளியே வந்ததும் அந்த தூளை மறுபடி அந்த குழியில் போட்டு மூடி விடவும். 

Nursery Tray பயன்படுத்துவதில் நான் கண்ட நன்மைகள்,

·         விதைகளின் முளைப்பு திறன் அதிகமாக இருக்கிறது. பொதுவாய் மண்ணில் நேரடியாய் விதைக்கும் போது சில விதைகள் முளைக்காது. ஆனால் இதில் எல்லா விதைகளும் முளைத்து விட்டது.
·         சரியாய் திட்டமிட்டு வரிசையாய் நடலாம்.
·         கொஞ்ச இடம் இருந்தால் போதும். இந்த சின்ன Tray-ல் நூறு நாற்றுகள் எந்த பிரச்னையும் இல்லாமல் வளர்கிறது. இதையே பாதியில் விட்டு வளர்த்தால் நிறைய இடம் தேவை படும்.
·         எடுத்து நட ரொம்ப எளிது. இது லேசாய் செடியை பிடித்து இழுத்தால் அப்படியே தக்கை போல வந்து விடுகிறது. பிடுங்குவதற்கு முன் நீர் தெளித்து விட்டு பிடுங்குவது நல்லது. இல்லாவிட்டால் தேங்காய் நார் தூள் லேசாய் உதிரும்.
·         நாற்று பிடுங்கி நட்டிய பிறகு வாடுவதில்லை. நாற்று அப்படியே பிரஷ்ஷாக இருக்கிறது. மண்ணில் இருந்து பிடுங்கி நடும்போது லேசாய் வாடி விடும். அந்த பிரச்னை இதில் இல்லை.        

இப்போது பீன்ஸ் நாற்று மட்டும் எடுத்து பாத்திகளில் நட்டிருக்கிறேன். இன்னும் Tray-ல் கத்தரி, வெண்டை, கொத்தவரை, புடலை, பாகல் நிற்கிறது.









Saturday, August 3, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – சாத்துக்குடி



சில செடிகளுக்கு நாம் ரொம்பவே கவனம் கொடுத்து நன்றாக கொண்டு வர முயற்சிப்போம். ஆனால், அது சரியாய் வராது (முந்தைய பதிவில் சொன்ன மிளகாய் மாதிரி). அதே நேரத்தில், சில மரங்கள், நாம் கவனமே இல்லாமல் தானாகவே வளர்ந்து கலக்கலாய் காய் கொடுக்கும் (எங்க வீட்டு கொய்யா மரம் மாதிரி). இதில், சாத்துக்குடி இரண்டாவது ரகம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஊரில் இருந்து மாதுளை, சீத்தா மரக்கன்றுகள் வாங்கி வரும் போது சாத்துக்குடி நாற்று ஒன்றும் ஆசையில் வாங்கி வந்தேன். வழக்கம் போல, வந்தவுடன் ஒரு பெரிய சிமெண்ட் சாக்கில் மண் நிரப்பி எல்லா கன்றுகளையும் வைத்து வளர்த்தேன். ஓரளவு வளர்ந்ததும், மாதுளை, சீத்தாவுக்கு ஒரு இடம் ஒதுக்கி தரையில் வைத்து விட்டேன். ஆனால், சாத்துக்குடிக்கு இடம் இல்லை. 

வைத்த மாதிரியே ரொம்ப மாதங்களாக சாக்கு பையிலேயே இருந்தது. இடம் இல்லாததால், தூக்கி வெளியே போட்டு விடலாம் என்று கூட நினைத்ததுண்டு. பிறகு ஓர் ஓரமாக, மா மரத்தின் அடியில் வைத்து விட்டேன். மா மர நிழலில் ரொம்ப மாதங்களாக அப்படியே நின்று கொண்டிருந்தது. போதாதற்கு பக்கத்தில் இருந்த இரண்டு பப்பாளி மரங்களும் அதற்கு சுத்தமாக வெயில் கிடைக்காமல் செய்து விட்டன.

போன வருடம் இங்கே பெய்தது ஒரே ஒரு மழை. அது ஊரில் இருக்கிற நிறைய மரங்களை காலி செய்து போனது. அதில் அந்த பப்பாளி மரங்கள் இரண்டும் அப்படியே மாடி படியில் சாய்த்து போனது (அதோடு கறிவேப்பிலை மரமும் வேரோடு போனதை முன்பு எழுதி இருந்தேன்). பப்பாளி மரங்களை தூக்கி நிறுத்திய போதும், முன் அளவுக்கு நேராக கொண்டு வர முடியவில்லை. அந்த கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம், வெயிலே கிடைக்காமல் நின்று கொண்டிருந்த சாத்துக்குடிக்கு, பப்பாளி சாய்ந்ததால் நன்றாக வெயில் கிடைக்க ஆரம்பித்தது.

கொஞ்சம் வெயில் கிடைத்ததும் இரண்டு மாதத்திலேயே மட மடவென்று பூத்து, பிஞ்சும் பிடிக்க ஆரமித்தது. அதற்கு அப்புறம் அதை வெளியே எடுத்து போட மனம் வரவில்லை. போன்சாய் மரம் மாதிரி, அதிலும் பெரிதாய் ஐந்து சாத்துக்குடி பழங்கள். அந்த செடிக்கு தண்ணீர் ஊற்றக் கூட பாத்தி கிடையாது. பப்பாளிக்கு தண்ணீர் விடும் போது, லேசாய் விடுவதோடு சரி. இது வரை உரம் என்று ஓன்று இட்டதில்லை. வேர் போக கூட இடம் இல்லாமல், கீழே ஒரே சரல் மண். எங்கே இருந்து அதற்கு சத்து எடுத்துக் கொண்டதோ, சாத்துக்குடி ரொம்பவே பெரிதாய், பார்க்கவே திரட்சியாய், அழகாய் இருந்தது.

இந்த செடி கடைசியில் எங்களுக்கு ஒரு சென்டிமென்ட் ஆகி போனது (‘நானும் நன்றாக காய்திருக்கிறேன், எனக்கும் ஒரு இடம் கொடுங்கள் என்று நம்மை பார்த்து கேட்பது போல அதை பார்த்தால் தோன்றும்). பழம் இனித்தால் வைத்துக் கொள்ளலாம், ரொம்ப புளித்தால் தூக்கி வெளியே போட்டுட வேண்டியது தான் என்று கடைசி முடிவு.

போன மாதம் தான் அறுவடை. பழம் புளிக்கவில்லை. இனிப்பு கொஞ்சம் குறைவு தான். அதற்கு எந்த சத்தும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அதன் காரணமாய் இருக்கலாம்.
கடைசியில் அதற்கும் ஒரு இடம் கொடுத்து விட்டோம். இரண்டாவதாய் வைத்த சீத்தா நாற்று ஒன்றை எடுத்து பின்னால் பெரிய சீத்தா மரம் அருகிலேயே வைத்து விட்டு, அந்த இடத்தில் இப்போ சாத்துக்குடி சந்தோசமா நிற்குது :-)












 The new place for it


Sunday, July 21, 2013

அக்ரி இன்டெக்ஸ் (Agri Index) 2013



நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த வருட அக்ரி இன்டெக்ஸ் (Agri Index 2013),  இரண்டு வாரங்களுக்கு முன்பு (July 12 – 14) ரொம்ப சிறப்பாகவே முடிந்தது. ஞாயிறு காலை 9 மணிக்கெல்லாம் குடும்பமாய் கிளம்பி விட்டோம். கொடிசியா வளாகத்தில் Hall A, B, C முழுக்க நூற்றுக்கணக்கான ஸ்டால்கள். போன வருடம் பார்த்த நிறைய ஸ்டால்களை இந்த வருடமும் பார்க்க முடிந்தது. வழக்கம் போல வளாகத்துக்கு வெளியே கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் நர்சரி கார்டன் என்று நிறைய.

இந்த வருடம் முக்கியமாக தேனீ வளர்ப்பு பற்றி விவரம் அறிந்து இங்கே தோட்டத்தில் சில பெட்டிகள் வைக்கும் சாத்தியம் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நீண்ட நாளாக நினைத்து வைத்திருந்தேன். எனவே முதலில் ஈரோடு அருகில் உள்ள ஒரு தேனீ பண்ணை சார்பில் இருந்த ஒரு ஸ்டாலுக்கு முதல் விசிட். வீட்டுத்தோட்டத்தில் கூடு வைப்பதற்கான சாத்தியங்கள், எத்தனை வைக்கலாம், விலை விவரங்கள், தேனீ வளர்ப்பு பயிற்சி விவரங்கள் பற்றி விசாரித்து பார்த்தேன். ஒரு நாலு சென்ட் தோட்டத்தில், மரங்கள் நிறைய இருக்கும் பட்சத்தில் ஐந்து தேனீ பெட்டிகள் வைக்கலாம் என்றார்கள். சுற்றிலும் மூன்று கிலோ மீட்டர் வரை சென்று தேன் எடுக்குமாம். இந்தியன் தேனீ, இத்தாலியன் தேனீ என்று இரு வகை இருக்கிறது (அவர்கள் வைத்திருந்தது இந்தியன் தேனீ). ஒரு பெட்டி தயார் செய்ய Rs,1500.  ஈரோட்டில் ஒரு முழு நாள் பயிற்சி மற்றும் சில உபகரணங்கள் இலவசம் என்றார்கள். Honey Extractor  மட்டும் ஒரு Rs,1500. மொத்தம் ஐந்து பெட்டி வைக்க Rs,9000  செலவு. ஆர்டர் செய்தால், பெட்டி தயார் செய்து ஓன்று அல்லது இரண்டு மாதத்தில் வீட்டில் வந்து அமைத்து கொடுத்து விடுவார்களாம். தேனீ வளர்ப்பு பற்றி சுத்தமாய் விவரம் இல்லாமல் அவரப்பட்டு Rs,9000 கொடுத்து வர மனமில்லை. வரும் போது தேனீ வளர்ப்பு பற்றி ஒரு CD மட்டும் வங்கி வந்தேன். ஆனால் பெட்டி அமைப்பது பற்றி ஒரு திட்டம் மனதில் இருக்கிறது. (இங்கே கோவை வேளாண் பல்கலை கழகத்திலேயே வாரம் தோறும ஒரு பயிற்சி வகுப்பு நடக்கிறது.விசாரித்துப் பார்க்க வேண்டும்).



வீட்டில் தான் என்னை கொஞ்சம் கலவரமாய் பார்த்தாள். வீட்டை சுற்றி செடியும், கொடியுமாய், பத்தாதற்க்கு சுற்றித் திரியும் பறவைகள், அணில் எல்லாம் வீட்டைச் சுற்றி தான். இப்போ தேனீ. இனி வீட்டுக்கு வெளியே நடமாட விடமாட்டான் போல என்பது போல ஒரு கலவரம்.

வெளியே ஒரு ரவுண்ட் சுற்றி விட்டு, Hall C-ல் இருந்து ஆரம்பித்தோம். Hall C முழுக்க கோவை வேளாண் பல்கலை கழகத்தின் ஸ்டால்கள் தான். முதலிலேயே இருந்த Seed ஸ்டாலில் சில விதைகளும், அடுத்து தென்னைக்கு டானிக்கும் வாங்கிக்கொண்டேன். விதை ஆராய்ச்சி பற்றி, பருத்தி, நெல், கரும்பு என்று ஒவ்வொன்றுக்கும் தனி தனி ஸ்டால்கள் நிறைய. Hall C ஐ முடித்து விட்டு B ஐ தொடர்ந்தோம்.

வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து தருவோம் (Sq.Feetக்கு ஒரு குறிப்பிட்ட தொகை) என்று நிறைய ஸ்டால்கள் இருந்தன. மாடி தோட்டத்திற்கு தேவையான பைகள் (தொட்டிக்கு பதிலாக), Green House அமைப்பதற்கு வலைகள் என்று நிறைய. செடி வைக்கும் பை ஏழு-எட்டு வருடங்களுக்கு அப்படியே இருக்கும் என்றார்கள். சோதனைக்காக நானும் இரண்டு பைகள் வாங்கி வந்தேன் (Rs.70 each).  லோக்கல் விதை கடை ஓன்று (கலர் கலராய் உலகத்தில் இருக்கும் அத்தனை காய்கறி, பூ விதைகளும் கிடைக்கும். பாக்கெட் பத்து ரூபாய் தான்). நானும் அதில் கொஞ்சம் செடி பீன்ஸ், கொடி பீன்ஸ் என்று ஒரு ஐந்து பாக்கெட் வாங்கி கொண்டேன் (செடி வந்தால் தான் உண்டு). இதே போல் இன்னொரு ஸ்டாலிலும்  கிழங்கு வகையில் இருந்து வரும் பூ செடிகள் (ஜெர்பரா, டெய்லியா வகை) நிறைய இருந்தது.

ஒரு கடையில் மல்லி, முல்லை நாற்றுகளுக்கு இடையே சம்பந்தமே ஒரு நாற்று இருக்க, போய் விசாரித்து பார்த்தேன். சந்தனமரம் நாற்று என்றார்கள். அடடா! இந்த நாற்று எல்லாம் விற்பார்களா? வீட்டில் வளர்க்கலாமா? என்று ஆச்சரியம். நான் ஆர்வமாய் விசாரிப்பதை பார்த்து பக்கத்தில் இருந்த ஒருத்தர் ‘நீங்க வச்சி வளர்ங்க. ஆனா வளர்ந்தவுடன் வெட்டிட்டு போயிருவாங்க என்றார் நக்கலாக. எதுக்கு வம்பு என்று வந்து விட்டேன்.

Hall B முடிக்கவே மதியம் ஆகிவிட்டது. அப்புறம் வளாகத்தை விட்டு வெளியே வந்து கொண்டு போன வெஜிடபிள் பிரியாணியை ஆற அமர ஒரு மரத்தடியில் அமர்ந்து ஒரு கட்டு கட்டிவிட்டு பிறகு தொடர்ந்தோம் :-) 

இன்னொரு ஸ்டாலில் இலைகளில் இருந்து செடி உற்பத்தி என்று எலுமிச்சை, மல்லி, முல்லை போன்ற நாற்றுகள் விற்றுகொண்டிருந்தார்கள். விதை இல்லாமல், வெறும் இலையை மண்ணில் புதைத்து வைத்து செடி உற்பத்தி. நிறைய பேர் போட்டி போட்டு வாங்கி கொண்டிருந்தார்கள். சில செடிகள் சாம்பிளுக்கு மண் இல்லாமல், தொங்க விட்டிருந்தார்கள். இலையில் இருந்து செடி வளர்ந்திருந்தது. (ஆனா, செடி வளர்ந்து காய்க்குமா-ன்னு ஒரு கேள்வி கேட்டேன். அதெல்லாம் நன்றாகவே காய்க்கும் என்றார்கள்). நிறைய மண் நிரப்பிய சின்ன சின்ன பைகளில் இலைகளை மண்ணில் புதைத்து வைத்திருந்தார்கள். நான் ஒன்றும் வாங்கவில்லை.

ISUZU- வின் Business Class Car (MU-7) ஓன்று பார்வைக்கு விட்டிருந்தார்கள். விலை வெறும் 28 லட்சம் தானாம். எத்தனை விவசாயிகள் புக் செய்தார்கள் என்று தெரியவில்லை. அங்கே அங்கே நிறைய ராகி மாவுல பிஸ்கட், தோசை மாவு என்று நிறைய ஸ்டால்கள். ஒவ்வொரு ஹாலிலும் சில விவசாய கருத்தரங்குகள் போய் கொண்டிருந்தது. ஒரு ஏழெட்டு பேர் அமர்ந்து கவனித்து கொண்டிருந்தார்கள். கூட்டமே இல்லாத கடுப்பில் ‘இது விவசாய கண்காட்சி. இங்கே எதுக்கு தோசை மாவு, இட்லி மாவு, பிஸ்கட் எல்லாம் விக்கறானுங்க. இது என்ன சமையல் கண்காட்சியா என்று மைக்கில் கத்திக்கொண்டிருந்தார் ஒருவர். நானும் போய் என் ஆதரவையும் தெரிவிக்கலாம் என்று ஆசை தான். ஆனால் குடும்பமாய் போய் விட்டதால் முடியவில்லை. ‘அடுத்த முறை வரும் போது உங்களை எல்லாம் கழட்டி  விட்டுட்டு தான் வரணும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். என் பொண்ணு  ‘அதெல்லாம் முடியாது, அடுத்த வருசமும் எனக்கு அந்த ராகி, குதிரைவாலி பிஸ்கட் எல்லாம் வேணும். நானும் வருவேன் என்றாள் :-).

இந்த வருடம் அக்ரி இன்டெக்ஸ்ல் என்னுடைய Purchase என்று பார்த்தால்,

Nursery Tray -  ரொம்ப நாளாகவே தேடிக் கொண்டிருந்த ஒரு பொருள். சில நர்சரியில் விசாரித்த போது, பெங்களூரில் இருந்து வரவழைத்து தருவதாக சொன்னார்கள். விலையும் அதிகமாக சொன்னார்கள். இந்த முறை அக்ரி இன்டெக்ஸ்ல் ஒரு கடையில் கிடைத்தது. விலை இருபது ரூபாய் தான். ஒரு ஐந்து Tray வாங்கினேன். தேங்காய் நார் துகள்களை பரப்பி, விதைத்து விட்டால், செடி வளர்ந்ததும் எடுத்து  நட எளிதாய் இருக்கும். முயற்சி செய்து பாப்போம்.

வழக்கம் போல நிறைய விதைகள், தென்னை டானிக்,

Organic Farming – Pest and Disease Control பற்றி ஒரு CD, வேம்பு, இஞ்சி, பூண்டு என்று இயற்கையாய் பூச்சிக் கொல்லி தயார் செய்வது பற்றியது. இந்த ஏரியா இன்னும் அவ்வளவாய் கற்றுக்கொள்ளாத ஒரு பகுதியாகவே இருக்கிறது. இந்த வருடம் கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஒரு திட்டம். அதற்கு இந்த சி.டி கொஞ்சம் உதவியாய் இருக்கும். அதோடு முன்னம் கூறியது போல, தேனீ வளர்ப்பு பற்றி ஒரு CD.

மாடி தோட்டம் அமைக்க இரண்டு Bags. காணால் போன Shovel ஓன்று புதிதாய். அவ்வளவு தான்.

எல்லாம் மறுபடி ஒரு சுற்று சுற்றி விட்டு கிளம்ப மணி நான்கு ஆகிவிட்டது. மதியத்திற்கு அப்புறம் கூட்டம் எக்கச்சக்கமாய் ஆகி விட்டது. எந்த ஸ்டாலிலும் நின்று பார்க்க, விசாரிக்க முடியவில்லை. மொத்தத்தில், இந்த வருட அக்ரி இன்டெக்ஸ்ம் ரொம்ப திருப்திகரமாய் முடிந்தது.

சில படங்கள். Sorry for the very poor quality pictures. என்னுடைய Hi-Fi Mobile Camera-வில் இவ்வளவு தான் வரும். ரொம்ப கூட்டம் வேறு. கூட்டத்தில் முடிந்த அளவுக்கு எடுக்க முடிந்த படங்கள் இவ்வளவு தான் :-)


The Entrance



India’s first 100 hp Jaya Tractor ( to spoil the soil in better way :-) )



Stalls (Engineering Divisions)






Seed Shop 



Terrace Garden stall


Plant from Leaf




சந்தன மர நாற்று 



The crowd



விவசாயிகளின் வாகனம் (The business class MU-7)


My Purchases