Showing posts with label பேபி கார்ன். Show all posts
Showing posts with label பேபி கார்ன். Show all posts

Friday, October 17, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – பேபி கார்ன் (Baby Corn)

இந்த சீசனின் சோதனை முயற்சியாக பேபி கார்ன் போடலாம் என்று விதைக்கு இணையத்தில் தேடிய போது omaxehybridseeds.com -ல் கிடைத்தது. Omaxe seeds பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். ஆர்டர் செய்து ஒரு வாரத்தில் வந்து விட்டது.    
   
இந்த முறை எக்கச்சக்கமான செடிகள் பட்டியலில் வந்து விட்டதால் எங்கு பார்த்தாலும் இடப் பற்றாக்குறை. பேபி கார்ன்க்கு தரையில் இடம் இல்லை. மாடியில் போடலாம் என்றால் காற்று பிரச்னை. அதனால் கீழேயே தொட்டியில் போடலாம் என்று பயன்படுத்தாமல் கிடந்த சில சிமெண்ட் தொட்டிகளை எடுத்து ஒரு ஓரமாக கொஞ்சம் இடம் கண்டுபிடித்து ஒரு தோட்டத்தை ஆரம்பித்து விட்டேன். முதன் முறையாக சிமெண்ட் தொட்டியிலே Coir Pith மீடியாவை பயன்படுத்தி பார்த்தேன். வழக்கம் போல Coir Pith, மண்புழு உரம், செம்மண் கலவை தான்.

விதைத்து ஒரு வாரத்திலேயே முளைத்து விட்டது. கிட்டதட்ட எல்லா விதைகளுமே முளைத்து விட்டது (100% Germination Rate). செடி உயரமாக வரும் என்பதால் எல்லா தொட்டியிலும் நடுவில் ஒரு கம்பு ஒன்றையும் ஊன்றி வைத்தேன் (செடியை அதில் சுற்றி கட்டி விடலாம் என்று. காற்று அடித்தால் சாயாமல் இருக்க. ஆனால் அதற்க்கு அவசியம் இல்லாமல் போய் விட்டது).

செடி செழிப்பாக வளர்ந்து வந்தது. அடுத்தது எப்போது கதிர் வரும், எப்போது பறிக்க வேண்டும் என்று தகவலுக்கு இணையத்தில் தேட ஆரம்பித்தேன். செடி வளர்ந்து முதலில் செடி நுனியில் நெல் கதிர் மாதிரி வந்த பிறகு ஒவ்வொரு இலையின் இடையிலும் கதிர் வைக்க தொடங்குகிறது. நான் முதலில் நெல் கதிர் மாதிரி வருவதை பார்த்து என்னடா இது மாட்டு தீவனத்திற்க்கு வளர்க்கிற சோளம் மாதிரி வந்துட்டு என்று நினைத்தேன். பிறகு கதிர் வந்த பிறகு தான் செடி ஒழுங்காய் வளர்கிறது என்று நிம்மதி.

கதிர் வந்த பிறகு கொஞ்ச நாளில் கதிரின் நுனியில் கொத்தாய் பட்டு முடி போல வரும். இதை Silk என்கிறார்கள். அது கதிரில் இருந்து வெளியே வந்து இரண்டு நாட்களில் கதிரை அறுவடை செய்து விட வேண்டும். இல்லாவிட்டால் கதிர் முற்ற ஆரம்பித்து ருசி இல்லாமல் போய் விடும். செடியில் பறிக்கும் போது கொஞ்சம் கவனமாக பறிக்க வேண்டிய இருக்கிறது. இல்லாவிட்டால் செடி மொத்தமும் ஒடிந்து போய் விடுகிறது. 

விதைத்து பத்து வாரத்தில் அறுவடை எடுத்தாச்சு. சிமெண்ட் தொட்டியில் முதன் முதலாய் Coir Pith மீடியா வைத்து கொண்டு வந்த முதல் செடி. விளைச்சல் நன்றாகவே இருந்தது. பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல் என்று ஒன்றும் இல்லை. ஒவ்வொரு செடியிலும் இரண்டில் இருந்து மூன்று கதிர்கள் வந்தது. தொட்டியில் இல்லாமல் தரையில் வைத்தால் இன்னும் விளைச்சல் அதிகமாக கிடைக்கலாம். கார்ன் நல்ல ருசி. இதை நிரந்தர பயிராக வைத்துக் கொள்ளலாம். இந்த முறை தரையில் நிறைய போட்டு விடலாம் என்று இருக்கிறேன். இது தோட்டத்தில் இருந்து வீட்டில் இருக்கும் குட்டீஸ்களுக்கு பிடித்த ஒரு செடியாக இருக்கும்.