Wednesday, November 27, 2013

தோட்ட உலா – நவம்பர் 2013



இந்த மாத அறுவடை

மா. மழை காலத்தில் (மழையை தான் காணோம்) மாம்பழமா என்று கேட்க வேண்டாம். எங்க வீட்டு மாமரம் வருடம் முழுவதும் காய்க்கிறது. மே மாதம் ஒரு சீசன், இப்போ நவம்பரில் அடுத்த சீசன் முடிந்து மறுபடி பூத்திருக்கிறது. இந்த மாமரத்தை பற்றி, Tailor Bird கூடு கட்டியதை பற்றிய பதிவில் சொல்லி இருந்தேன். வீடு வாங்கும் போது ஏற்கனவே இருந்த மரம். ரொம்ப சுவற்றை ஒட்டி வைத்து விட்டார்கள். சீசன் தவறாமல் காய்கிறது. ஆனால் காய்ப்பதில் முக்கால்வாசி எங்களுக்கு கிடைப்பதில்லை ( எல்லாம் வெளியே இருந்தே பறித்து போய் விடுவார்கள்).

இந்த மாம்பழம் வெரைட்டி என்னவென்று தெரியவில்லை. பொதுவாய் கிடைக்கும் வகை இல்லை. சுவையும் ரொம்பவே சுமார் தான் (இனிப்பும் இல்லை, புளிப்பும் இல்லை). ரொம்ப சுவற்றின் ஓரமாய் வேறு இருப்பதால் மரத்தை எடுத்து விட்டு வேறு மரம் ஓன்று வைக்கலாம் என்று ஒரு திட்டம் இருக்கிறது. போன முறை  Tailor Bird வந்து கூடு கட்டியதால் இந்த திட்டம் தாமதமாகி போனது. பட்டர் ப்ருட் (Avocado) மரம் ஓன்று முயற்சி செய்யலாம் என்று ஒரு திட்டம்.  









பப்பாளி. புதிய மரத்தில் இருந்து முதல் பழம். எந்த புதிய செடி/மரம் வளர்த்தாலும் முதல் விளைச்சல் ரொம்ப விசேஷமானது. இந்த மரம் வீட்டில் இருக்கிற பெரிய மரத்தின் விதையில் இருந்து உருவாக்கியதால் சுவை அதே போல் இருக்குமா என்று ஒரு ஆர்வம் இருந்தது. பழம் வேறு சம்மந்தமே இல்லாமல் உருண்டையாய் வந்ததால் ஒரு குழப்பம். முதல் அறுவடை. சுவை கொஞ்சம் கூட குறைவில்லாமல் அதே சுவை (கொஞ்சம் எக்ஸ்ட்ரா சர்க்கரை போட்டது மாதிரி). இந்த பழங்கள் கொஞ்சம் சிறிதாய் இருந்தாலும், இப்போது வரும் காய்கள் ஒரு கிலோ அளவில் வந்து கொண்டிருக்கின்றன. இது மூன்றாவது பப்பாளி மரம். இன்னும் ஒரு மரம் (நான்காவது) இப்போது தான் பிஞ்சு பிடித்திருக்கிறது.  


எலுமிச்சை. இந்த மாதம் அறுவடைக்கு தயாராக இருக்கிறது. ஒரு கொத்தில் இருந்து ஐந்து காய்கள் பறித்திருப்போம். வழக்கம் போல ஒவ்வொரு பழமும் 150 gms  எடை இருக்கிறது. முக்கால்வாசி பேர் இதை பார்த்தவுடன் கொய்யா பழம் என்று தான் சொல்கிறார்கள் . மூன்று கிலோ அளவுக்கு காய்கள் கிடக்கிறது.


 
வெள்ளை கத்தரி. போன மாத பதிவில் விடுபட்டு போன கத்தரி. இந்த வெள்ளை கத்தரி கொண்டு வர கிட்டதட்ட ஒரு வருடம் முயற்சித்து, இப்போது தோட்டத்தில் எளிதாய் வளர்கிறது. ஹைப்ரிட் வகை (வயலட் நிறம்) கத்தரி போல காய்த்து கொட்டுவது இல்லை. ஆனால் நீண்ட காலம் பலன் கொடுக்கிறது.  




புதினா. தொட்டியில் வளர்க்க எளிதான ஒரு செடி. தரையில் வைத்து விட்டால் இன்னும் செழிப்பாக வளர்கிறது. என் தோட்டத்தில் எப்போதோ தரையில் வைத்து விட்ட சில குச்சிகள், வேர்விட்டு எக்கச்சக்கமாய் வளர்த்து கிடக்கிறது. வேண்டும் போது பறித்துக் கொள்ள வேண்டியது தான். 


இந்த முறை தக்காளி மிளகாய் விளைச்சல் அமோகம். கடையில் தக்காளி வாங்கி மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கும். இந்த வாரத்தோடு தக்காளி விளைச்சல் முடிகிறது. அடுத்த நாற்று தயாராக இருக்கிறது. மிளகாய் இன்னும் ஒரு மாதம் விளைச்சல் கிடைக்கும் போல.


செண்டு. நான் போன மாத தோட்ட உலாவில் கூறியது போல இந்த மாதம் பூத்து குலுங்க ஆரம்பித்து விட்டது. நினைத்தது மாதிரி ஆரஞ்சு அடுக்கு செண்டு. அழகு :-)


இந்த மாத சீசன்
கொய்யாவும் சீத்தாவும் காய்த்திருக்கின்றன. சீத்தா பொதுவாய் ஏப்ரல், மே மாதங்களில் தான் சீசன். இந்த வருடம் போனஸ் விளைச்சலாய் நவம்பரிலும் காய்த்திருக்கிறது. ஏப்ரல் சீசன் போல அதிக காய் இல்லை என்றாலும் ஒரு 40 காய் பிடித்திருக்கிறது. 


புதுவரவு
வெற்றிலை. எதிர் வீட்டில் இருந்து ஒரு அம்மா கேரளா போன போது நம்ம தோட்டம் நியாபகம் வர இந்த வெற்றிலை கொடியை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். வெற்றிலை கொடி ரொம்ப நாளாய் வைக்கலாம் என்று நினைத்தது. இப்போது தானாகவே வந்திருக்கிறது. தோட்டத்தில் இருந்து பப்பாளி பழம் மாதிரி அக்கம் பக்கம் சப்ளை ஆகும் போது இப்படி சில பலன் கிடைக்கும். ஒரு மிளகு கொடியும் அதில் இருந்தது. ஆனால் மிளகு கொடி ரொம்ப காய்ந்து விட்டது. வருவது கடினம் தான்.

இந்த காய்கறி சீசன் தோட்டத்தில் இந்த மாதத்தோடு முடிகிறது. அடுத்த சீசனை தொடங்கி விட விதை எல்லாம் போட்டு நாற்றுக்கள் தயாராக நிற்கிறது. விரிவாக அடுத்த பதிவில் எழுகிறேன்.

Next Season Starts....

Friday, November 15, 2013

கோவையில் – வீட்டுத் தோட்டம் & மாடித் தோட்டம் – ஒரு நாள் பயிற்சி

கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். ஹோட்டல் ஸ்ரீராம்-ல், இந்த ஞாயிறு (17.11.2013) வீட்டுத் தோட்டம் மற்றும் மாடி தோட்டம் பற்றி ஒரு பயிற்சி கருத்தரங்கு ஓன்று நடைபெறுகிறது. நமது ப்ளாக் நண்பர் தங்கவேல்  மூலமாக இந்த தகவல் கிடைத்தது. இந்த பயிற்சி பற்றி எனக்கு எந்த விவரமும் இல்லை. கிடைத்த தகவலை உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன். அவ்வளவே.

கட்டணம் (Rs.750). கோவையில் என்பதால் இங்கே வீட்டு தோட்டத்தில் ஆர்வம் உள்ள மக்கள் வட்டம் பற்றி தகவல் கிடைக்கலாம். கோவையில் தோட்டத்திற்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் இடங்கள் பற்றி தகவல் கிடைக்கலாம். அதனால் நான் இந்த பயிற்சிக்கு போகிறேன். போன் செய்து ரெஜிஸ்டர் செய்து கொண்டால், ஞாயிறு நேரில் போய் பணம் செலுத்தி கலந்து கொள்ளலாம்.

விருப்பம் இருந்தால், கொடுக்கபட்ட எண்னை தொடர்பு கொண்டு பேசி பாருங்கள்.

தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்கள்:
94420 19007
75985 16303
98940 66303    P.வின்சென்ட்

Sunday, October 20, 2013

தோட்ட உலா – அக்டோபர் 2013



தோட்டத்தில் சின்ன சின்ன விஷயங்கள் நிறைய உண்டு. அவை எல்லாவற்றையும் தனி ஒரு பதிவாக கொண்டு வருவது கடினம். அதனால் ஒரு கதம்பமாக இந்த தொடரை ஆரம்பிக்கிறேன். நல்லது, கெட்டது, வளர்ந்து கெட்டது, காய்த்து கொட்டியது என்று தோட்டத்தை ஒரு உலா வரும் மாத பதிவாக கொண்டு வருகிறேன்.  
இந்த மாத அறுவடை
போன பருவத்தில் ஊற்றிக்கொண்ட தக்காளியையும் மிளகாயும் இந்த முறை உருப்படியாய் கொண்டுவர கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்து கொண்டு வந்தேன். தக்காளி பெரிதாய் இரண்டு பாத்தியிலும் (30 செடி) , மிளகாய் ஒரு பாத்தியிலும் (ஒரு 15 செடி). இரண்டுமே இங்கே விவசாய கல்லூரியில் வாங்கிய விதைகள் தான். 

முதலில் கொஞ்சம் திணறிய மிளகாய் (ஒரு கட்டத்தில் பிடுங்கி விடலாம் என்று கூட நினைத்தேன்), ஒரு சின்ன மழைக்கு பிறகு நன்றாக வளர ஆரம்பித்தது. நாம் என்ன தான் கவனம் எடுத்தாலும், நீர் ஊற்றினாலும் ஒரு சின்ன மழை தூறல் தோட்டத்தில் கொண்டு வரும் மாற்றம் நிறைய. தக்காளி நன்றாக வந்தது. இருந்தாலும் சின்னதாய் சாறு உறிஞ்சும் பூச்சி (கொசு மாதிரி, சின்னதாய், வெள்ளையாய் பூச்சிகள்) தாக்குதல் கொஞ்சம் இருந்தது. இது வரை தக்காளியில் இந்த பிரச்னையை பார்த்தது இல்லை. அதனால் முதலில் கொஞ்சம் லேசாய் விட்டுவிட்டேன். இதை கட்டுப்படுத்த இப்போதைக்கு நீர் பாய்க்கும் போது, நீரை கொஞ்சம் வேகமாய் செடியில்  அடித்து கொஞ்சம் கொஞ்சமாய் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன். ஆனாலும் சில, இன்னும் நாயகன் கமல் மாதிரி என்ன வேகமாய் தண்ணீர் அடித்தாலும் எதிர்த்து நின்று, போவேனா என்று அடம்பிடிக்கிறது. ஒழித்துக்கட்ட உருப்படியாய் ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்.

மொத்தத்தில், இந்த மாத விளைச்சலில் மிளகாயும் தக்காளியும் முதலிடம் பெறுகிறது,




இந்த மாத சீசன் 

பன்னீர் ரோஜா (நாட்டு ரோஜா) போன மாதம் மொட்டையாய் வெட்டி விட்ட பிறகு, சின்ன தூரலில் நன்றாக தளிர்த்து விட்டது. இந்த செடிகள் எல்லாம் மூன்று வருடங்களுக்கு முன்பு வைத்தது. பெரிதாய் ஒன்றும் கவனம் தேவை இல்லை. எப்போதாவது லேசாய் கிளறி உரம் வைத்து, கிளைகளை வெட்டி பராமரித்து வந்தால் போதும். கீழே பார்ப்பது வெறும் இரண்டு செடியில் இருக்கும் பூக்கள்,



ஊத்திக்கிச்சி
முதன் முதலாய் கொடி அவரை முயற்சி செய்தது. செடி அவ்ளோ செழிப்பா வந்தது. கொடி வளர்ந்து சுண்டைக்காய் செடி மொத்தமும் சுற்றி அதை காலி செய்து விட்டது. நன்றாக காய் தந்து கொண்டிருந்த சுண்டைக்காய் செடி இருந்த இடமே இல்லாமல் கொடி சுற்றிக் கொண்டது. அவரை காய்த்தால் சரி தான் என்று விட்டாச்சு. கடைசியில் உச்சியில், எட்டாத உயரத்தில் இரண்டு கொத்து காய்த்தது. பிறகு ஒன்றையும் காணோம். செடி மட்டும் சுண்டைக்காய் செடியை காலிசெய்து விட்டு, பக்கத்தில் முருங்கை, மாதுளை என்று ஒவ்வொன்றாய் கைப்பற்ற ஆரம்பித்தது. இது வேளைக்கு ஆவரது இல்லன்னு அவரையை காலி செய்து விட்டேன் :-(. இந்த மாத ஃளாப் இது தான். ஆனால் செடி அவரையில் இருந்து நல்ல விளைச்சல் இந்த முறை கிடைத்தது. இனி தான் சுண்டைக்காய் செடியை கொஞ்சம் வெட்டி விட்டு கொண்டு வரவேண்டும்.

புதுவரவு 

செண்டு செடி. ஊரில் இருந்து கொண்டு வந்த ஆரஞ்சு கலர் அடுக்கு செண்டு விதை. ஒரு மூன்று செடி வெளியே வைத்து விட்டிருக்கிறேன். செடி நன்றாக வந்து கொண்டிருக்கிறது. அடுத்தமாதம் பூவோடு பதிவில் வரலாம்.

பப்பாளி. நம்ம வீட்டு பப்பாளியில் இருந்து விதை எடுத்து கொண்டு வந்த இரண்டு இரண்டு செடி, இப்போது காய்க்க ஆரம்பித்திருக்கிறது. பழைய இரண்டு மரங்களோடு இப்போது இந்த இரண்டு புதிய மரங்களும் சேர்ந்து நான்கு மரங்கள் இருக்கிறது. பப்பாளிக்கு கடந்த இரண்டு வருடங்களாக பஞ்சம் இல்லை. எப்படியும் வாரம் ஒரு ஐந்து பழங்கலாவது கிடைக்கிறது (இரண்டு மரங்களில் இருந்து). அக்கம் பக்கம் எல்லோருக்கும் ரெகுலராக சப்ளை இருந்து கொண்டு இருக்கிறது. 

இரண்டு வருடங்களுக்கு வைத்த மரம், இன்னும் ஓரளவுக்கு பெரிய பழம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது (ஒரு கிலோ அளவில்). ரொம்ப உயரம் போய் விட்டதால் (ஒரு 15 அடி வளர்ந்திருக்கும்) பப்பாளி பறிப்பதற்க்குள் தான் ஒரு வழி ஆகி விடுகிறோம். கீழே ஒரு பெரிய போர்வையை இரண்டு பேர் பிடிக்க, பறித்து போட்டு வலை போட்டு பிடிக்க வேண்டிய இருக்கிறது. 

புதிதாய் வளர்ந்திருக்கும் மரத்தின் காய் கொஞ்சம் வித்தியாசமாக உருண்டையாக வந்திருக்கிறது. 



கரும்பு பல மாதம் ஆகியும் பெரிதாய் ஒன்றும் வளர வில்லை. ஆனாலும் செடி நன்றாக தான் இருக்கிறது. அதானால் ஓர் ஓரமாய் வளர்ந்து விட்டு போகட்டும் என்று விட்டாச்சு. பார்க்கலாம் எப்படி வருதுன்னு,

சீசன்-2

எலுமிச்சை மறுபடி காய்த்திருக்கிறது. இந்த முறை எலுமிச்சை ஒரு இரண்டு கிலோ கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 

புது இடத்தில் நட்டு வைத்த சாத்துக்குடி கொஞ்சமாய் மறுபடி பூத்திருக்கிறது. இந்த மழையை தாக்குப்பிடித்து உதிராமல் வருமா என்று பார்க்க வேண்டும்,

பிரச்சினை 

இரண்டாவது தென்னை இப்போது தான் காய்க்கவே ஆரம்பித்தது. இரண்டு முறை குருத்தில் வண்டு தாக்குதல் கொஞ்சம் தீவிரமாகவே இருந்தது. கடைசியாய் நான் தான் ஏறி ஒரு வண்டு இருப்பதை கண்டுபிடித்து வேப்பெண்ணை ஊற்றி கொன்று காலி செய்தேன். அப்போதே அது குருத்தை நிறைய தின்றிருந்தது. கொஞ்சம் குருத்து அழுகல் நோய் மாதிரி வேறு L. இரண்டு வாரம் முன்பு ஒரு ஆள் வைத்து சுற்றி இருக்கும் ஓலைகளை வெட்டி கொஞ்சம் வெயில் படும் படி விட்டிருக்கிறோம். மருந்தும் ஊற்றி இருக்கிறோம். நன்றாக வந்து விடும் என்று நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம். 


ஆராய்ச்சி

பீன்ஸ். இந்த முறை ஒரு மூன்று செடி உருப்படியாய் வந்து காய்த்திருக்கிறது. எல்லாவற்றையும் விதைக்கு விட்டு விட்டேன். இதில் இருந்து இன்னும் கொஞ்சம் செடி கொண்டு வந்து உருப்படியாய் ஒரு முறையாவது பீன்ஸ் அறுவடை செய்யவேண்டும். பார்க்கலாம்.

மிளகாய், இப்போது விளைந்திருக்கும் மிளகாய் வகை கொஞ்சம் நீளமான ஒரு ராகமாய் இருக்கிறது. காரம் பரவாயில்லை. மாடியில் ரோஜா தொட்டியில் அதுவாகவே முளைத்து ஒரு மிளகாய் செடி காய்த்திருக்கிறது. காய் பார்க்க நல்ல திரட்சியாக இருக்கிறது. அடுத்த பருவத்திற்கு இதில் இருந்து விதை எடுத்து வளர்த்து பார்க்கலாம் என்று ஒரு திட்டம்.

Friday, September 27, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – தர்பூசணி

சில செடிகள் நல்ல விதையாக போட்டு, உரமாக அள்ளி போட்டு, என்ன தான் சூடம் ஏத்தி விழுந்து விழுந்து சாமி கும்பிட்டாலும், ஒழுங்கா வருவேனா என்று அப்படியே நின்று போய் விடும். சில செடிகள், காட்டு செடி மாதிரி, அது பாட்டுக்க வளர்ந்து காய்த்து கிடக்கும்.

தர்பூசணி, இரண்டு முறை விதை எல்லாம் வாங்கி போட்டு ஒன்றும் வேலைக்காகவில்லை. ஓரளவு வளர்ந்ததும் நோய் வந்தது மாதிரி அப்படியே வளர்ச்சி இல்லாமல் நின்றுவிடும். இந்த முறை கோடையில் (ஜுன் வாக்கில்) வாங்கி சாப்பிட்ட பழத்தில் இருந்து விழுந்த விதை ஓன்று வெங்காய பாத்தியில் இருந்து முளைத்து வந்தது. வீட்டில் காட்டுசெடி என்றார்கள் (தர்பூசணி இலை மாதிரியே ஒரு காட்டுசெடி ஒன்றும் இங்கே வளர்கிறது). ஆனால் எனக்கு இலையை பார்க்க கொஞ்சம் பெரிதாய் தர்பூசணி செடி மாதிரி தான் தெரிந்தது. சரி, காய்க்கும் வரை வளர்த்து பார்த்திடலாம் என்று அப்படியே விட்டுவிட்டேன்.

அதற்கென்று தனி பாத்தியும் கிடையாது. கவனிப்பும் கிடையாது. கொஞ்சம் வளர்ந்த பிறகு வெங்காய செடிகளுக்கு இடையே அது எங்கே இருந்து வருகிறது என்றே தெரியவில்லை. நான்கு வாரத்திலேயே மொத்த இடத்தையும் கைப்பற்றி அடுத்ததாய் மிளகாய், கீரை பாத்தி என்று அது பாட்டுக்கு இருக்கும் இடம் எல்லாம் தர்பூசணி இலையாய் போனது.

கொஞ்ச நாளிலேயே இரண்டு பிஞ்சு பிடித்தது. அது ஓரளவுக்கு சாத்துக்குடி அளவுக்கு வந்த பிறகு தான் வீட்டில் அது தர்பூசணி என்று நம்பினார்கள். கொஞ்சம் பெரிதானது, நான் சும்மா இருக்காமல் சகதி தரையில் பட்டால் காய்  அழுகி விடுமோ என்று நினைத்து, காயை லேசாய் தூக்கி ஒரு காய்க்கு அடியில் கொஞ்சம் வேப்பிலை குவியலை வைத்தேன். இரண்டு நாளில் அந்த காய் அழுகி விட்டது :-(. மிஞ்சியது ஒன்று தான். அதை எந்த தொந்தரவும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டேன்.

ஒரு மாதத்திலேயே நல்ல வளர்ச்சி. அடுத்தது பெரிய பிரச்சனை, தர்பூசணி பழுத்து விட்டதா என்று எப்படி கண்டு பிடிப்பது என்று?. கடைசில கிடைத்த ஒரே பழத்தையும் தப்பாய் சீக்கிரம் பறித்து, வெட்டிப் பார்த்து, உள்ளே வெள்ளையாய் இருந்தால் என்ன செய்ய?. ஒரு ஓட்டையை போட்டு கொஞ்சம் எட்டணா, ஒரு ரூபாய் அள்ளி போட்டு, திருஷ்டி வேணும்னா சுத்தி போடலாம் (தோட்டத்துக்கு தான் :-) ). அப்புறம் இந்த மொத்த காத்திருத்தலும் தண்டமாய் போகும்.

இணையத்தில் ‘How to find ripe watermelon’ என்று தட்டினால், ஒரு பத்து முறைகள் கூறி இருந்தார்கள். அதில் முதலில் தர்பூசணியை புரட்டி பார்த்து அதன் அடிப்பகுதி நிறத்தை பார்த்து கண்டுபிடிப்பது. ஏற்கனவே கை வைத்து தான் ஓன்று போச்சு, அதனால் இந்த சோதனையை கடைசில் வைத்துக்கொண்டேன். நான் எடுத்துக்கொண்ட முறைகள் இவைகள் தான்,

1. Spoon Leaf – எல்லா இலை காம்பும் தொடங்கும் இடத்தில் சின்னதாய் இன்னொரு இலையும் இருக்கும். அதன் வடிவத்தை வைத்து ‘Spoon Leaf’ என்கிறார்கள். காய் வந்திருக்கும் இலையில் வந்திருக்கும் Spoon Leaf, காய் பழுக்க ஆரம்பிக்கும் போது பழுப்பு நிறமாய் மாறி, பின் காய்ந்து விடும். பச்சையாய் இருந்தால் இன்னும் காய் பழுக்கவில்லை என்று அர்த்தம். நான் இதை தான் முதலில் பார்த்துக்கொண்டேன்.
2. அடுத்தது, அந்த இலை அருகில் கொடிக்காக சுருளாய் வரும் கொடி சுருள் (tendril) வைத்து சொல்லலாம். Spoon Leaf மாதிரி தான் இதுவும். பழுப்பாய் மாறி காய்ந்து இருக்க வேண்டும். நான் பறித்த போது பக்கத்து இலை சுருள் எல்லாம் காய்ந்து இருந்தது ஆனால் காய் இருந்த சுருள் காயாமல் கொஞ்சம் பழுப்பு நிறமாய் இருந்தது.
3. முதலில் சொன்னது மாதிரி, தரையில் பட்டிருக்கும் காயின் அடிப்பகுதியின் நிறம். அது மஞ்சளாகவோ, இளம் மஞ்சளாகவோ இருக்க வேண்டும். வெள்ளையாகவோ, இளம் பச்சையாகவோ இருந்தால் இன்னும் பழுக்கவில்லை என்று அர்த்தம். ஆனால் அடிக்கடி புரட்டி பார்த்தால் காய் வாடி போகலாம். கவனம்.  நாம் கடையில் பழம் வாங்கும் போதும் இதை பார்த்து வாங்கலாம்.
நான் முதலில் Spoon Leaf-ஐ பார்த்தேன். அப்போது தான் பழுப்பாக ஆரம்பித்திருந்தது. மூன்று நாளில் காய்ந்து விழுந்து விட்டது. அதன் பிறகு ஒரு ஐந்து நாள் கழித்து, லேசாய் காய் புரட்டி பார்த்தேன். இளம் மஞ்சள் நிறம் தெரிந்தது. தர்பூசணியை ரொம்ப பழுக்க விட்டாலும் அது ஒரு மாதிரி சுவை இல்லாமல் போய் விடும். இன்னொன்று, தர்பூசணி மற்ற பழங்கள் மாதிரி பறித்து வைத்த பிறகு பழுக்காது. மேலே சொன்ன சகுனம் எல்லாம் சரியாக இருக்க, இந்த வாரம் பறித்து விட்டோம்.

வெட்டும் போது ஆர்வமாய் தான் இருந்தது. பழம் perfect-ஆக பழுத்திருந்தது. நல்ல நிறம். மொத்த எடை ஐந்து கிலோ (நல்ல தரம் தான்). அதுவாகவே வளர்ந்த செடியில் பழம் பறித்து சாப்பிடுவது ஒரு தனி சந்தோசம் :-).  இப்போது கொஞ்சம் மழை காலம் என்பதாலும், சில மழை பெய்திருந்ததாலும், பழம் இன்னிப்பு கொஞ்சம் குறைவாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நல்ல இனிப்பு.இதில் இருந்து விதை எடுத்து கொஞ்சம் செடி கொண்டு வந்து பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

அதே செடியில் இன்னும் கொஞ்சம் பிஞ்சு பிடித்திருக்கிறது. எப்படி வருகின்றதென்று  பார்க்கலாம்.